செய்திகள் (Tamil News)
தூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு, ஜனநாயக அரசு மருத்துவர் சங்கம் ஆகியவை சார்பில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டாக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4-ம் ஆண்டு இறுதித்தேர்வில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ள ‘நெக்ஸ்ட்’ தேர்வு வேண்டாம், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும், மருத்துவர்களாக இல்லாதவர்கள் கிராமப்புறங்களில் சிகிச்சை அளிக்கலாம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் ராஜா விக்னேஷ், சார்லஸ், பிரபாகர், செந்தில், தினேஷ் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.