என் மலர்
நீங்கள் தேடியது "ஐரோப்பிய யூனியன்"
- ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
- ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகியுள்ள புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மிகப்பெரிய அளவில் பலனடையும் என்றும், ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்தியத் தொழிலாளர்களின் குடியேற்ற உரிமைகளை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருவதால், மற்ற நாடுகள் மாற்று சந்தைகளைத் தேடிச் செல்வதாகவும், அதன் விளைவாகவே ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் கிரீர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உலகமயமாக்கலின் சிக்கல்களைச் சரிசெய்ய முயலும் போது, ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.
டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது. டென்மார்க் அல்லது கிரீன்லாந்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.
சைப்ரஸ், லத்தீன் அமெரிக்கா, கிரீன்லாந்து, உக்ரைன் அல்லது காசா என எங்கு நடந்தாலும், சர்வதேச சட்ட மீறல்களை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.
- விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது இன்று பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. இதனால் பல நாடுகளிலும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சைபர் தாக்குதல், விமான நிலையங்களின் சேவை வழங்கும் அமைப்புகளை குறிவைத்துள்ளது. குறிப்பாக, பயணிகளின் செக்-இன் மற்றும் போர்டிங் போன்ற முக்கியமான சேவைகளில் முடக்கம் ஏற்பட்டது.
லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.
பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப நிபுணர்கள் பிரச்னையை தீர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே விமான நிலையங்களுக்கு வந்துள்ள பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
- இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஐரோப்பிய யூனியன் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் கானபெரென்ஸ் காலில் தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில், பரஸ்பர வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தரப்புத் தலைவர்களும் வரவேற்றனர்.
இது தவிர, உக்ரைனில் நீண்டகாலமாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரு தரப்பினரின் முயற்சிகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மோதலுக்கு அமைதியான தீர்வு கண்டு ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.
மேலும், அடுத்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தருமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை பிரதமர் மோடி அழைத்தார்.
- உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.
- உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளது.
காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள். இதன் மூலம், சமீபத்திய நாட்களில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 குழந்தைகள் உட்பட 101 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.

காசாவிற்கு அவசர உதவி கோரி 111 உலகளாவிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. எல்லைகளற்ற மருத்துவர்கள், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் பொது மன்னிப்பு சபை போன்ற அமைப்புகள் களத்தில் உள்ளன.
காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்துள்ளன. மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது.
காசா மனிதாபிமான அறக்கட்டளை என்ற பெயரில் இஸ்ரேல் அமைத்த உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், "உணவு தேடி வரும் மக்களை குறிவைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.
உணவு விநியோக மையங்களில் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு இணங்கி தங்கள் வார்த்தையை காப்பாற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இதுதவிர்த்து அண்மையில் பிரிட்டன் மற்றும் கனடா உட்பட 29 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
- ஐரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார்
ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% புதிய வரியை ஆகஸ்ட் 1 முதல் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மெக்சிகோவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மெக்சிகோ தென் அமெரிக்காவின் போதைப்பொருள் மைதானமாக மாறி வருவதாக டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு.
- ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தடுத்து முறியடிக்கப்படும். பதிலடி கொடுக்கப்படாது.
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள செங்கடல் உலக வணிக பயணத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் போக்குவரத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து செங்கடலில் ரோந்து போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் கடந்த வாரம் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்க முயன்றனர். இங்கிலாந்து கப்பல் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக உலகளாவிய அளவில் பொருட்களின் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
பிப்ரவரி 17-ந்தேதிக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உளள ஏழு நாடகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க தயாராக உள்ளன. பெல்ஜியம் ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனியும் போர்க்கப்பல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
- உக்ரைன் ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது.
உக்ரைன் மீது ரஷியா போரை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என துவங்கி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடுமையான போராக இது மாறி இருக்கிறது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ரஷிய - உக்ரைன் போர் தற்போதைக்கு முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை ரஷியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளன. அந்த வகையில், ரஷியா - உக்ரைன் போர் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை குறித்து தொடர்ந்து பார்ப்போம்..

பிப்ரவரி 24, 2022-ம் ஆண்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. ஆரம்பக் கட்டத்தில் கீவ், கார்கீவ் மற்றும் ஒடீசா என முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷிய தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ரஷிய தாக்குதலை எதிர்கொண்ட உக்ரைன், ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது. போர் துவங்கிய சில வாரங்களில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷியா தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும், வான்வழி தாக்குதல்களையும் நடத்தியது. இதில் பெரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

தற்போது ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அமெரிக்கா ரஷியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. போர் துவங்கியதில் இருந்து ஒரே நாளில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அதிக கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
புதிய கட்டுப்பாடுகள் ரஷிய ராணுவம் மற்றும் அவர்களின் போர் முயற்சிகளை முடிந்தவரையில் குறைக்க செய்யும் வகையில் உள்ளது. அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன் சார்பில் ரஷியாவுக்கு எதிராக 13-வது முறையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவை ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வைகயில் அமைந்துள்ளன.

ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ரஷியா சார்பில் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
"ரஷியாவின் போர் நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், சண்டையிடுவதை மேலும் கடுமையாக்கும் வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன," என்று அமெரிக்க அதிகாரியான வேலி அடிமோ தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் செயல்பட்டு வரும் 500 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரஷியாவின் ராணுவ துறையை சேர்ந்தவை ஆகும்.
இந்த போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. முதல் ஆண்டிலேயே அந்நாட்டின் பொருளாதாரம் 30 முதல் 35 சதவீதம் வரை சரிந்துள்ளது. உக்ரைன் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்படைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் போலந்து அமைந்துள்ளது.
- மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய மையமாக திகழ்கிறது.
இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது உக்ரைன் மீது ரஷியா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வது உண்டு. இதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷியாவுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை.
உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாம் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார். அப்போது ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும். இருந்தபோதிலும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல்கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளது. ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானது என்றார்.
நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து ரஷியா, பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளது.
- உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
- இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் முக்கியமான பதவிக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது.
தற்போது ஐரோப்பிய யூனியனின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேர்தலில் உர்சுலாவின் ஐரோப்பியன் மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜெர்மனியின் ஏஃப்டி, இத்தாலியின் ஃஎப்டிஎல், பிரான்சின் ஆர்என் கட்சிகள் செயல்பாடுகள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.
இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என முன்னதாகவே செய்திகள் வெளியானது.
போர்ச்சுக்கலின் ஆண்டனியோ கோஸ்டா ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.
மால்டாவின் ராபர்ட்டா மெட்சோலா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.
எஸ்டோனியாவின் கஜா கலலாஸ் வெளியறவுததுறை மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதி பதவியை எதிர்பார்த்துள்ளார்.
- ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு படையெடுத்தபோது உக்ரைன் விண்ணப்பம் செய்தது.
- பேச்சுவார்த்தை தொடங்கிய போதும், முடிவடைய ஆண்டுகள் பல எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனால இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம். மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாம் நீண்டது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். வரிவிதிப்பு, எனர்ஜி, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
- உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
- ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.

ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்து உக்ரைன் முதலில் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன்தான் ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.






