search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்குதல்"

    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை

    மதுரை மருதங்குளத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 45). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரை அதேபகுதியில் வசிக்கும் சிலர் ஆட்டோ சவாரிக்கு அழைத்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் அவர்களுக்கும், ஹரீஹரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஹரிகரன் நேற்றுமாலை ஆழ்வார்புரம் ஆட்டோ நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டது. இதில் ஹரிஹரனுக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டது. 

    இதுபற்றி ஹரிகரன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியந்தோப்பு, கோனார் மண்டபம் கார்த்திக் (28), மதிச்சியம் அழகர் மகன் அழகுபாண்டி (23), ஆழ்வார்புரம் சதாம் உசேன் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

    இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ஹரிஹரனை தாக்கி ஆட்டோவை அடித்து உடைத்ததாக கார்த்திக், அழகுபாண்டி, சதாம்உசேன் ஆகிய 3 பேரையும் மதிச்சியம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

    இதன் அருகே தமிழக, கர்நாடக எல்லையில் வனத்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் பணியாளர்கள் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அதிகாலை பண்ணாரி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் உலாவி கொண்டு இருந்தது. சோதனைச்சாவடியின் முன்பு சாலை நடுவே காட்டு யானை நீண்ட நேரம் நின்றது.

    இதனால் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே பதுங்கி கொண்டனர். சுமார் 30 நிமிடம் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் சோதனை சாவடி பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதி க்குள் மீண்டும் சென்றது. இதனால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


    சென்னை நெசப்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் மீதான தாக்குதல் தொடர்பாக பாரதிய ஜனதா பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போரூர்:

    சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஆட்டோ “டிங்கரிங்” கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரும் மின்வாரிய தற்காலிக ஊழியருமான கோகுல் என்பவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி விஜயகுமார் என்கிற குல்லா விஜி ஆனந்தின் கடையை மறைத்து வரிசையாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்த், கோகுல் இருவரும் தட்டிக் கேட்டனர் இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மின் வாரிய ஊழியர் கோகுலை சரமாரியாக தாக்கினார். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கோகுல் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கோகுலை தாக்கிய விஜயகுமார் அவரது நண்பர்களான கோபி, சூர்யா, தனுசன் ஆகிய 4பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசியது உள்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×