search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Language"

    • கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
    • டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.

    இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.

    மேலும் இந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இது குறித்து கோவில்பட்டி ராகவேந்திரா சேவை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:-

    கோவில்பட்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர், முன்பதிவு கவுண்டர் என இருந்தாலும் ஒரு ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்த கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தி மட்டும் அவர்களுக்கு தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட் தர மறுக்கின்றனர். அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். குறிப்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதால் ரெயில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது.
    • ஆசிரியர் சண்முகதிருக்குமரன் மதுரையும் கலைஞரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தேனி, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடக்க ஆணையிடப்பட்டது.

    அதனடிப்படையில், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் பணியாளர்கள்/அலுவ லர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் (பொ) சுசிலா வர வேற்றார்.

    மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் வானதி கருத்த ரங்கை தொடங்கி வைத்து பேசினர்.

    மீனாட்சி கல்லூரியின் முதுகலை தமிழாய்வுத் துறைத் தலைவர் சந்திரா கலைஞர் நிகழ்த்தியச் செம்மொழிச் செயற் பாடுகள் எனும் தலைப்பி லும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் தட்சிணா மூர்த்தி மொழிப்பயிற்சி எனும் தலைப்பிலும், முனிச்சாலை, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியின், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சண்முகதிருக் குமரன் மதுரையும் கலைஞ ரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துமுருகன் திரைப்படங் களில் தமிழ் வளர்ச்சி எனும் தலைப்பிலும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கணினித்தமிழ் எனும் தலைப்பிலும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் சங்கீத் ராதா காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி சட்டம், வரலாறு எனும் தலைப்பி லும் பேசினர்.

    முடிவில் தமிழாய்வு துறைத்தலைவர் சந்திரா நன்றி கூறினார்.

    • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை, சென்னை, ஜப்பான் தூதரகத்தின் ஆராய்ச்சி ஆலோசகர் தெராகா மாமி விவரித்தார்.

    கரூர்,

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை ஜப்பான் தூதரகத்தின் தூதர் தாஹா மசாயுகி தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள கலாச்சார பாரம்பரிய ஒற்றுமையையும், ஜப்பானிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் திறமையான இந்திய நிபுணர்களை எதிர்பார்க்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் ஜப்பான் சார்ந்த 600 நிறுவனங்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை, சென்னை, ஜப்பான் தூதரகத்தின் ஆராய்ச்சி ஆலோசகர் தெராகா மாமி விவரித்தார். எம்.கே.சி.இ'ல், ஜப்பானிய மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 மாணவர்கள் உள்ளனர், மேலும் சுமார் 100 முன்னாள் மாணவர்கள் தற்போது ஜப்பானில் பணிபுரிகின்றனர், மேலும் 300 மாணவர்கள் ஜெஎல்பிடி சான்றிதழின் காரணமாக இந்திய நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர் என்று அசோக் சங்கர், இயக்குனர், எஸ்எஸ்ஜெஎல்டிசி தெரிவித்தார்.

    தலைமை உரை செயலாளர் முனைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார். முனைவர் குப்புசாமி, நிர்வாக இயக்குனர் மற்றும் முனைவர் முருகன், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்கள். கலந்துரையாடல் அமர்வில், விசா செயல்முறை, உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களை பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அயல்மொழி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் குரு பிரசாத், மாணவர் நலத்துறை தலைவர் முனைவர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • குஜராத் மாநில அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    நெல்லை:

    குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சவுராஷ்டிரா தமிழ்சங்கம் விழாவை கடந்த 17- ந்தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.

    சவுராஷ்டிரா தமிழ்சங்கமம் விழா

    இதன் தொடர்ச்சியாக பாளை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா சங்க மாநிலத் தலைவர் அனந்தராமன் தலை மையில் நடைபெற்றது.

    இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு சங்கமம் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். இங்கு தமிழ் மக்களோடு இணைந்து தமிழக மக்களாகவே மாறி தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு சேவை யாற்றியும் வருகின்றனர். அந்த மக்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழ்நாடு, குஜராத் என அனைத்தும் ஓரே நாடுதான். ஒருவரோடு ஒருவர் நன்கு நட்பு பாராட்ட வேண்டும். இரு மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இரு மாநிலத்த வர்களும் அறிந்து கொள்ள வேண்டும்்.

    தொழில் ரீதியாக, வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    பாதுகாப்பான மாநிலம்

    தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான அமைதியான மாநிலமாகும். இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்ப திலும் சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் குஜராத் மாநிலம் மகேஷன் மாவட்ட கலெக்டர் நாகராஜன், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணை வேந்தர் க்ரிஷ்பாய்பீமணி, மற்றும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த சவுராஷ்டிரா மக்கள் கலந்து கொண்டனர்.

    • எதிலும் ஆங்கிலம் கிடையாது தாய்மொழி மட்டும்தான் என்பதை உணர வேண்டும்.
    • தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    சென்னையில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கடந்த 21-ந் தேதி தமிழைத் தேடி பரப்புரை பயணத்தை பா.ம.க மற்றும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.

    தொடர்ந்து 6 ஆம் நாளாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பரப்புரை பயண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் 1976 ஆம் ஆண்டு வரை 29 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழிக் கல்வி முறை இருந்தது.

    விடுதலைக்கு முன்பு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

    1999 ஆம் ஆண்டில் 2,122 பள்ளிகளில் மட்டும்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தமிழ் கட்டாயப் பாட மொழியாக இல்லாமலும் இருந்தது.

    ஆனால், இப்போது தமிழகத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இப்போது 2,122 பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கிறது. மீதமுள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் தமிழைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

    தாய்மொழியில் படித்தால் அறிவியல், தொழில்நுட்பத்தை எப்படி கற்றுக் கொள்ள முடியும் என வினா எழுப்புகின்றனர். ஜப்பான், தென் கொரியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தொழில்நுட்பத்துக்குப் பெயர் பெற்றவை.

    இந்த நாடுகள் எதிலும் ஆங்கிலம் கிடையாது. தாய்மொழி மட்டும்தான் என்பதை உணர வேண்டும்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ் மொழியில் கற்றுத் தரப்பட்டன.

    அதற்கான பாட நூல்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அதற்கு காரண மானவர்கள் தமிழன்தான்.

    அனைத்து பாடங்கள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சித் துறைகளுக்கும் அதை விரிவுபடுத்த யாரும் எதையும் செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் 50 ஆண்டு கால கனவு. ஆனால், இக்கனவு மட்டும் கைக்கு எட்டாமல் தொடு வானம்போல விலகிக் கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் தமிழைப் பயிற்று மொழியாக்க ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் தமிழில் படிப்பதற்குத் தேவையான நூல்களை உருவாக்க வேண்டும்.

    தமிழ் ஆராய்ச்சிக்கு குறைந்தது 5 பல்கலைக்கழ கங்களையாவது தொடங்க வேண்டும். தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

    முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், பதிவாளர் (பொ) தியாகராஜன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ் வழி கல்வி இயக்கம் இளமுருகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

    முன்னதாக, அறக்கட்டளை தலைவர் மணி வரவேற்றார். முடிவில் குஞ்சிதபாதம் நன்றி கூறினார்.

    • மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசால் நடத்தப்படுகின்ற ஐஐடி என்ஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக அதன்பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையினை குடியரசு தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமர்ப்பித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் மெய்யநாதன் குறை கூறினார்.

    மேலும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பிற மாநில உரிமைக்காகவும் அதன் மாநில மொழிகளுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்ததாகவும் அதனை தமிழக முதல் அமைச்சர் தற்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

    • ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை இதனால் ஏழை மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு ட்பட்ட குளிக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் வேறு மாநிலத்தை சேர்ந்த மேலாளர் ஒருவர் பணி புரிந்து வருகிறார்.

    இவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை.

    இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    இங்கு கிராமப் பகுதி என்பதால் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணம் பெறக்கூடியவர்களும் ஏழை, எளிய மக்களுமே இந்த வங்கியை பயன்படு த்துவதால் அவர்களுக்கு தமிழ் தெரிந்த ஊழியர்கள் இருந்தால்தான் எளிதாக தங்களது சேவையை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

    இதனால் அந்த மேலா ளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி முன்பு கிராம மக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குளிக்கரை, தியாகராஜபுரம், பெருந்தரக்குடி, தேவர்க ண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கு மொழி பேசும் மேலாளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கத்தை எழுப்பினர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறு மாத காலமாக போராடி வருவதாகவும், இதனை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் எனவே உடனடியாக தமிழ் தெரியாத மேலாளரை மாற்றி விட்டு தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மேலாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • இந்தி மொழி திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
    • தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு நகர செயலாளரும் நகர மன்றத் தலைவருமான குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ், ஜூபையர் அஹமது, நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசும்போது, தமிழக்கத்தில் ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி என்றார்.இந்நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, வழக்கறிஞர் அணி ராம. சேயோன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

    ஆங்கில மொழி என்பது வியாதியல்ல. ஆங்கிலேயர்களின் மனப்பான்மையை நாம் கொண்டுள்ளதுதான் வியாதி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். #Englishmind #VenkaiahNaidu
    பனாஜி:

    இந்தி மொழியை கொண்டாடும் விதமாக டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆங்கிலம் என்பது இந்த நாட்டைப் பற்றியுள்ள ஒரு வியாதி போன்றது என்று கூறியதாக சில ஊடகங்களில் முன்னர்செய்தி வெளியானது.

    இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேசிய தொழிநுட்ப பயிலகத்தில் இன்று நடைபெற்ற நான்காவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய வெங்கையா நாயுடு, நான் ஆங்கிலத்தை வியாதி என்று குறிப்பிடவில்லை. பிரிட்டிஷாரின் மூலமாக ஆங்கிலேயர்களின் மனப்பான்மையை நாம் கொண்டுள்ளதுதான் வியாதி என்று கூறினார்.



    பிரிட்டன் நாட்டினர்தான் உயர்ந்தவர்கள். வெளிநாட்டினர்தான் சிறந்தவர்கள். இந்தியர்கள் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்னும் கருத்தை பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நம்மை விட்டுச் சென்றபோதிலும் அவர்கள் நம்மிடையே உருவாக்கி வைத்திருந்த தாழ்வு மனப்பான்மை நம்மை விட்டு விலகவில்லை.

    ஆங்கிலேயர்களின்  மனப்பான்மையை விட்டு நாம் வெளிவர வேண்டும். நமது பாரம்பரியம், கடந்தகால வரலாறு, நமது நாட்டின் உயர்ந்த தலைவர்கள் ஆகியவற்றை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.

    அந்த நேரம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருந்தாலும் குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங் என்கிறோம். அந்த சொல் நமது உதயத்தில் இருந்து வருவதால் நமஸ்காரம் என்று சொல்வதில்தான் நமது நன்மதிப்பு அடங்கியுள்ளது.

    நீங்கள் எத்தனை மொழிகளை  வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், உரையாடல்களின்போது உங்கள் தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும். உங்களது பெற்றோரையும், பிறந்த இடத்தையும், தாய்மொழியையும் எப்போதுமே மறக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். #Englishmind #VenkaiahNaidu
    பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தங்குதடையின்றி முன்வைக்கலாம்.

    ஆனால் மீதமுள்ள 10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் மீதமுள்ள டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி உள்ளிட்ட 10 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான வசதி தற்போது செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன்மூலம் வருகிற 18-ந் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.
    ×