search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TV"

    • எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் நான்கு வித அளவுகளில் கிடைக்கின்றன.
    • புதிய எல்ஜி டிவிக்களில் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. எல்ஜி UR7500 சீரிஸ் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவி நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எனினும், இவற்றில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி UR7500- 40 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    நான்கு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் HDR10 ப்ரோ மற்றும் டைனமிக் டோன் மேப்பிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி-க்களில் ஏஐ சூப்பர் ஸ்கேலிங் 4K, 20 வாட் ஸ்பீக்கர்கள், 2.0 சேனல் உள்ளது. எல்ஜி UR7500 சீரிசில் உள்ள ஏஐ பிராசஸர் 4K ஜென் 6 சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது.

     

    இந்த டிவி மாடல்களில் HGiG மோட், ALLM மற்றும் கேம் ஆப்டிமைசர் உள்ளது. இவை கேமிங்கின் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மென்பொருளை பொருத்தவரை வெப் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு ஒடிடி ஆப்கள் வழங்கப்படுகின்றன.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட், ப்ளூடூத் மற்றும் வைபை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் 43 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 490 என்றும் 50, 55 மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 43 ஆயிரத்து 990, ரூ. 47 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் எல்ஜி வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன.
    • கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் செல்போன்கள், டி.வி.க்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே விலை உயர்ந்து காணப்படுகின்றன.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்தது.

    தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. மேலும் சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கண்டெய்னரில் கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் தற்போது குறைந்துள்ளது. இது ஏற்கனவே கொரோனா தொற்று பரவலின்போது ரூ.6.55 லட்சம் ஆக இருந்தது. இது தற்போது ரூ.69 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் ஆக குறைந்துள்ளது.

    மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்களின் விலையும் 60 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை குறைகிறது.

    இதுதொடர்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்கள் விலை குறைந்திருப்பதாலும், சீனாவில் இருந்து பொருட்களை கொண்டு வரும் கண்டெய்னர் கட்டணம் குறைந்திருப்பதாலும் இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் விலை குறையும். இதன் மூலம் இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இது மேலும் குறையும். குறிப்பாக தீபாவளி பண்டிகை முதல் விலை நன்றாக குறையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் டிவி பாகங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.
    • எல்இடி டிவிக்களின் 60 முதல் 70 சதவீத உற்பத்தி செலவை ஒபன் செல் பேனல்கள் எடுத்துக் கொள்கின்றன.

    உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

    ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்வதற்கான 60 முதல் 70 சதவீத கட்டணத்தை ஒபன் செல் பேனல்களே எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற பேனல்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.

    "தொலைகாட்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் ஒபன் செல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்," என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இந்த அறிவிப்பு உள்நாட்டு சேவை மதிப்பை கூட்டுவதோடு, சந்தை வளர்ச்சிக்கு உதவும் என நுகர்வோர் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் எரிக் பிரகான்சா தெரிவித்தார்.

    பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கான உரிமம் வைத்திருக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக், இந்திய சந்தையில், சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து டிவிக்களின் விலை ஐந்து சதவீதம் வரை குறையும் என தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பல்வேறு டிவி உற்பத்தியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிக்களின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படலாம் என SPPL தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அன்வீத் சிங் மர்வா தெரிவித்தார். 

    • கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
    • நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் வசந்த். இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந்தேதி கோவை இசூசா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் இரண்டு எல்.இ.டி. டி.வி.கள் வாங்கியுள்ளார். அவை கொரியரில் வந்த போது ஒரு டி.வி. உடைந்திருந்தது. இது குறித்து விற்பனை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வசந்த் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அவர்களது வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் விற்பனை நிறுவனம் உடைந்த டி.வி.க்கான தொகை ரூபாய் 14 ஆயிரத்து 700 மற்றும் 6 சதவீதம் வட்டியுடன் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ, 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

    • தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி ஒளிபரப்பாகிறது.
    • 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு.

    திருப்பூர் :

    ஆதிமூல சற்குரு ஸ்ரீ வீரபோக வசந்தராயர் மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் நாளை 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அனைவரும் இதனை பார்த்து சுவாமிகளின் திருவருளையும் அம்பாளின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

    தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.
    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.

    புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.

    டிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.



    புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். 

    இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர் விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள் 999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
    ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர், கேமரா உள்பட 23 பொருட்களை இன்று முதல் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். #GST
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

    அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


    பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. #GST
    டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளதாக ஐகோர்ட்டில் டிராய் தகவல் தெரிவித்துள்ளது. #cabletv

    சென்னை:

    டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ந் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பாணை வெளியிட்டது.

    சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்யின் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்த மாதம், அதாவது ஜனவரி 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, டிராய் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #cabletv

    எல்.ஜி. நிறுவனம் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான தொலைகாட்சி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LG #TV



    எல்.ஜி. நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும் என்றும் இவை வழக்கமான எல்.சி.டி. ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது.



    எல்.ஜி. நிறுவனத்தின் சுருட்டக் கூடிய தொலைகாட்சி மாடல்கள் அந்நிறுவனத்திற்கு விற்பனை அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.

    சீயோல் நகரில் உள்ள எல்.ஜி. ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.



    எல்.ஜி. தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி தொலைகாட்சி சந்தையில் OLED ரக பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. எல்.சி.டி. ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED  டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
    இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #PakistanSC
    இஸ்லாமாபாத்:

    இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் நடைபெற்றது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவின் சேனல்களுக்கு தடை விதித்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரேடியோ மற்றும் சேனல்களில் இந்திய நிகழ்ச்சிகள், படங்களுக்கு தடை விதித்து இருந்ததும், அந்த தடை 2017-ம் ஆண்டு விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. #PakistanSC
    சவுதி அரேபியாவில் முதன் முறையாக செய்தி வாசிப்பாளர் பணிக்கு பெண் நியமிக்கப்பட்டதற்கு, பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #SaudiArabia
    ஜெட்டா:

    சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வரவேற்ப்பை பெற்றன. 

    இந்நிலையில், அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

    அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் விஷன் 2030 என்ற பெயரில் இளவரசர் மேலும் பல புரட்சிக்கரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என்றும் சவுதி பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    ×