search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
    • காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை சமூகநீதி கொள்கைகளுக்கு எதிராகவும் பெண்கள் நலனுக்கு எதிராகவும் 3,000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    ஏற்கனவே நடைமுறையின் படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதைப் போல அகவிலைபடியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 6750 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திர கலா, முன்னாள் மாவட்ட பொருளாளர் மகேந்திர பூபதி , மாவட்ட செயலாளர் மோகன சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    கோவை:

    அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.

    இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.

    கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.

    இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-

    கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.

    இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட ங்களை சேர்ந்தவர்களும், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களும் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் பஸ்கள், ரெயில்களில் சிரமமின்றி செல்ல நேற்று முன்தினம் முதல் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப ஆரம்பித்தனர். இன்று காலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக வந்தனர். அவர்கள் திருப்பூர் திரும்புவதற்கு வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் இன்று காலை திருப்பூர் ரெயில் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில்களிலும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கினார்கள். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் திருப்பூரில் இருந்து அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள சாலைகள் மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு திரும்பின. 

    • கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.
    • போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. சம்பவத்தன்று இரவு இங்குள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். அதில் பணம் இல்லாமல் சில்லரை காசுகள் மட்டுமே இருந்ததால் உண்டியலை அருகில் உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் சொந்த ஊர் மற்றும் வெளியூர் சென்றுள்ளனர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய திருட்டு ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர். முதலில் இங்குள்ள காட்டு பெருமாள் கோவிலில் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.

    சமீபத்தில்தான் இக்கோவில் உண்டியல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால், சில்லரை காசுகள் மட்டுமே இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் உண்டியலை காட்டுக்குள் வீசி சென்றனர். அதன்பின் கோவில் அருகில் உள்ள வீட்டின் கதவை உடைக்க முயன்று அதுவும் தோல்வியடைந்ததால், திரும்பிச் சென்றுள்ளனர்.

    வீடுகள் அதிகமுள்ள இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
    • கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் கோல்டன் நகர் தொட்டி மண்ணரை பகுதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 28). இவர் அப்பகுதியில் கார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இதற்காக கார்களை அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்தி ருந்தார். நேற்றிரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

    உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 3 கார்கள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

    கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாராவது கார்களை தீ வைத்து எரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர்.
    • கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி சங்கிலி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி மாலை, சிறையில் விசாரணை கைதியாக இருந்த சூர்யா சிறையில் இருந்து தப்பினார். மின்தடையை பயன்படுத்தி அவர் தப்பியது தெரியவந்தது. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடி வந்தனர்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திருப்பூர் வந்து மாவட்ட சிறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணை கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனிடையே சிறைத்துறை தனிப்படையினர், சூர்யாவின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சூர்யாவை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்த போலீசார், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர்.
    • சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர். நேற்று மாவட்ட சிறையில் கைதிகளின் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதில் விசாரணை கைதியாக இருந்த சூர்யாவை காணவில்லை. இதையடுத்து போலீசார் சிறை வளாகம் முழுவதும் தேடினார்கள். அப்போது அவர் சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சூர்யா பச்சை நிற முழுக்கை டி-சர்ட் மற்றும் வெள்ளை நிற லுங்கி அணிந்திருந்தார். வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பிளேட் வைத்துள்ளதால் நொண்டி, நொண்டி நடந்து செல்வார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சூர்யாவின் உருவ படத்தை பதிவிட்டு தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு சமூக வலைதளங்களிலும் மாநகர போலீசார் பதிவிட்டுள்ளனர்.

    மாநகரில் சோதனை சாவடிகள் மற்றும் அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவை மத்திய சிறை அதிகாரிகள், திருப்பூர் மாவட்ட சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மணிய காரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் கொரியர் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை கொரியர் நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதையடுத்து தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனே இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளியில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 5 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்தின் காரணமாக கொரியர் நிறுவன கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்காமல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நிட்டிங் , டைலரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் கொரியர் நிறுவனத்தில் இருந்த பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து சேதமாகின. இதனைப்பார்த்து ஊழியர்கள் கண்ணீர் சிந்தினர். தீ விபத்தால் அப்பகுதியில் 50 அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் மேகமூட்டம் போல் காணப்பட்டது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிடிவி தினகரன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
    • ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன்

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர். இந்த கோஷம் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்

    இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.

    இதனையடுத்து கடவுளே அஜித்தே என்று பொது இடங்களில் கோஷம் போடுவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்று அஜித் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "திருப்பூர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சென்றிருந்தேன். அப்போது நான் பேச தொடங்கியபோது அங்கிருந்த பள்ளி மாணவர்கள் கோஷமிட்டனர். எனக்கு அந்த கோஷம் தெளிவாக கேட்கவில்லை. உடன் பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். கடவுளே அஜித்தே என்று கோஷம் போடுவதாகவும் இது தற்போது ட்ரெண்டாகி வருவதாகவும் கூறினார்கள்.

    நானும் அஜித்தினுடைய ரசிகன் தான். ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன். பல குழந்தைகளுக்கு நான் அஜித்குமார் என்றே பெயர் வைத்துள்ளேன்.

    நல்ல படங்களை பார்ப்பேன். தற்போது கூட தங்கலான் திரைப்படம் ஓடிடி-யில் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. கங்குவா திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம்.
    • ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி.

    திருப்பூர்:

    தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மாநிலத்தலைவர் சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட 100 விவசாயிகள் இன்று காலை குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள், பா.ஜ.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக அடக்கு முறையை கையாள்கிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.எஸ்.பி. கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லே வாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை முழு கொள்ளளவான 90அடியை எட்டியது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் ஆற்று பாலத்தின் அருகே பழனியில் இருந்து சண்முக நதி ஆற்றில் திறந்து விடப்பட்ட 20 ஆயிரம் கன அடி தண்ணீர் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றில் கலந்து சுமார் 57 ஆயிரம் கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.

    இதன் காரணமாக தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள படித்துறை மூழ்கியது. ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் அலங்கியம்-கொங்கூர் தரைப்பாலம் மற்றும் வீராச்சிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துக்கால்புதூரில் உள்ள ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில்வெள்ளப்பெருக்கு காரணமாக ஈஸ்வரன் கோவில் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சி.
    • திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    பீகாரை சோ்ந்தவர் அங்கஸ்குமார் (வயது 29). இவரது மனைவி அம்சிகுமாரி (23). இவர்களது 9 மாத ஆண் குழந்தை அசிஸ்.தம்பதி இருவரும் தங்களது குழந்தையுடன் திருப்பூர் எம்.எஸ்.நகர் அருகே செல்வலெட்சுமி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அங்கஸ்குமார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி அம்சிகுமாரி சமையல் அறையில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை அசிஸ் விளையாடிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அம்சிகுமாரி குழந்தையை தேடி வெளியே ஓடிவந்த போது அங்குள்ள தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் அறையில் அம்சிகுமாரி வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தை அசிஸ் தவழ்ந்து சென்று அருகில் பட்கெட்டில் இருந்த தண்ணீரில் தலைக்குப்புற விழுந்தபோது, யாரும் கவனிக்காததால் மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×