என் மலர்
நீங்கள் தேடியது "மேக வெடிப்பு"
- டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டேராடூனில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டித் தீர்த்த நிலையில், மீண்டும் அங்கே அதிக மழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன 2 பெரிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரத்தை சுற்றியுள்ள பிற பகுதிகளுடன் இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றம் உணவு கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மீண்டும் அங்கு கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு சமோலி மாவட்டம் தாராலி உள்ளிட்ட பகுதியில் மேகவெடிப்பால் வானம் பொத்துக்கொண்டு ஊத்தியது போல இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாராலி சந்தை வளாகம், செப்பான் சந்தைகள் கடும் சேதத்தை சந்தித்தது. இங்குள்ள பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. பல இடங்களில் நிலச்சரிவால் வாகனங்கள் சேதம் அடைந்தது.
சக்வாரா கிராமத்தில் கட்டிடங்கள் இடிந்தது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இடிபாடுகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சக்வாராவில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளம்பெண் உயிர் இழந்தார். பலரை காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. தாராலி-குவால்டம் சாலை மற்றும் தாராலி-சக்வாரா சாலை மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
- வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- காயம் அடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14-ந்தேதி திடீர் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஓட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத்காதி கிராமத்தில் மேகவடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேகவெடிப்பால் 5 பேரும், நிலச்சரிவால் 2 பேரும் பலியானார்கள்.
மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பலர் மாயமாகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை போலீசார், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் அடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கதுவா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகார்ட், சாங்மா கிராமங்களிலும் லகான்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கில்வான்-வாட்லியும் நிலச்சரிவு ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
- தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
- மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
- டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சிம்லா:
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
லாஷவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்பத் கிராமத்தில் நிலைமை மோசமாக உள்ளது. முன் எச்சரிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிம்லா மாவட்டத்தில் பலத்த மழையால் பஸ் நிலையம் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள பல கடைகள் சேதம் அடைந்தன. கர்பத், கங்குட் மற்றும் உட்கோஸ் நாலா பகுதிகளிலும் மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்தன.
மேக வெடிப்பால் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல தலைநகர் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் இன்றும் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
- மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராம்பன் மாவட்டம் பக்னா கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து ஓடியதால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களுக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி-பனிஹால் இடையே பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.
நிலச்சரிவால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, "ராம்பனில் ஏற்பட்ட துயரமான நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளன. உடனடி மீட்பு முயற்சிகளை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
இன்று மாலை, மறுசீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்டவற்றை நான் மதிப்பாய்வு செய்வேன். பயண ஆலோசனைகளை கடைபிடிக்கவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அத்தியாவசியமற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும் மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
- முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிவிரைவாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"மண்டி மாவட்டத்தின் சம்பல், பன்டோ பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பகுதிகளில் இதுவரை ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன," என்று முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு டுவீட் செய்துள்ளார்.
முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். நேற்றிரிவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏழு பேரும், சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.
- உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
- கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது.
பருவமழை பாதிப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது.
சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேக வெடிப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
இந்த குழுவில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட மூத்த காவல் துறை தலைவர் சஞ்சீவ் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். "எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் 20 பேர் மாயமாகி உள்ளனர்," என காஷ்யப் தெரிவித்தார்.

மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி பகுதியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது. மேலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி உத்தராகண்ட் மாநிலத்தில் ஃபியூரி புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
- மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிகபட்சமாக தங்கச்சி மடத்தில் 338.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம்- 125.60, மண்டபம் 271.20, ராமேஸ்வரம் 438.00, பாம்பன் 280.00, திருவாடனை 12.80, தொண்டி 7.80, ஆர்.எஸ்.மங்கலம் 14.90, பரமக்குடி 25.60, மொடக்குறிச்சி 49.00, கமுதி 49.00, கடலாடி 73.20.
- மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் அவதி.
ராமநாதபுரம்:
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று காலை வரை விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக் கூடிய தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தங்கப்பா நகர், இளங்கோவடிகள் தெரு, சூரங்கோட்டை, அரண்மனை, வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

தங்கப்பா நகர் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்று மழை நீரால் முழுவதுமாக மூழ்கியது. அதேபோல் அய்யர் மடம் பகுதியில் உள்ள ஊரணியும், சாலையும் ஒன்றாக சேர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் வரலாறு காணாத மழையால் இந்த இரண்டு நாட்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அதிலும் கடந்த 69 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1955-ம் ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரம் மாவடட்த்தில் குறிப்பாக ராமேசுவரத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தி அம்பாள் கோவில், உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம், உத்தரகோச மங்கை மங்களநாதர் கோவில்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பணியாளர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தினர்.
அதேபோல் பாம்பன் ரோடு பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பாலத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்படி ஒரு மழையை நாங்கள் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மழையானது பெய்துள்ளதாகவும் முறையான வாறுகால்கள் இல்லாததாலேயே இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதாகவும் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக பல ஊரணிகள் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையில் ஒரு சில ஊரணிகள் மட்டும் நிரம்பி வழிகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாறுகால்களை தூர்வாரி அந்தந்த குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு செல்லக் கூடிய பகுதிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-125.60, மண்டபம்-271.20, ராமேசு வரம்-438, பாம்பன்-280, தங்கச்சிமடம்-338.40, பள்ளமோர்க்குளம்-50.70, திருவாடானை-12.80, தொண்டி-7.80, வட்டா ணம்-12.80, தீர்த்தண்ட தானம்-20.20, ஆர்.எஸ்.மங்கலம்-14.90, பரமக்குடி -25.60, முதுகுளத்தூர்-49, கமுதி-49, கடலாடி-73.20, வாலிநோக்கம்-65.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,834.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 114.68 மில்லி மீட்டர் ஆகும்.
மேக வெடிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒரு பெரிய அளவிலான மழைப் பொழிவை குறிக்கிறது. இந்த மேக வெடிப்புகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.
குறைந்த பரப்பளவில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் வரையிலான இடத்தில் ஒரு மணி நேரத் தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவானால் அதுவே மேக வெடிப்பு எனப்படுகிறது. சில சமயங்களில் அது ஆலங்கட்டி மழையாகவும், இடியுடன் சேர்ந்த மழையாகவும் கொட்டுகிறது.
நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நீரானது, மேல்நோக்கி செல்லும்போது வெப்பக் காற்றின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட அந்த பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
- மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது.
ஐதராபாத் :
மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன" என்றார்.
குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






