search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
    • ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்து பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், 3 ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.

    அதோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதி களுக்கு தரப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குமுறலில் உள்ளனர்.

    இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது கூட்டணிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.

    அதையடுத்து மாநிலத்தலைவர் செல்வகணபதி யிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும்-வாரியத்தலைவர் பதவிகளை உடன் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, "முதல் அமைச்சர் ரங்கசாமி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் உணவு விருந்துக்கு அழைத்துள்ளார்" என்று அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்தது.

    ஆளுங்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், தேர்தல் தோல்வியை பற்றி ஆராய்வும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவும் முதல்- அமைச்சர் அழைத்து இருக்கலாம் என எண்ணினர்.

    இதனால், அங்கு கூட்டத்தில் பேச முன்கூட்டியே தயார் செய்து தீர்மானத்துடன் பல எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். ஆனால், தனியார் ஓட்டலுக்கு வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒட்டலில் ஏற்கெனவே தலைமைச் செயலர், கலெக்டர், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேச வாய்ப்பும் இல்லை என்ற சூழலில் முதல்- அமைச்சர் ஏன் அழைத்தார் என குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்கு பிறகு வந்தார்.

    அவர் அனை வரையும் நேரடியாக உணவு சாப்பிட அழைத்து சாப்பிட தொடங்கி னார். விருந்து முடிந்து அதிகாரிகளை அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் பேசுவார் என ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்ட பிறகும் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதனால் எதற்காக நம்மை விருந்து சாப்பிட அழைத்தார் என்று தெரியாமலேயே குழப்பத்தில் ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். இதன் பிறகுதான் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் காங்கிரஸ்- தி.மு.க., சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் விருந்தில் பங்கேற்கவில்லை.

    இதுதொடர்பாக விசாரித்த போது, தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக முதல்-அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
    • புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா, கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதன் பிறகு புதிய அமைச்சராக காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், கடந்த மார்ச் 14-ந்தேதி அமைச்சராக பொறுப்பேற்றார். வழக்க மாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும்.

    ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே மார்ச் 16-ந்தேதி பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இதனால் அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக வலம் வருகிறார்.

    தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ந்தேதி வெளி யானது. இதைத்தொடர்ந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தனி தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

    பொதுவாக ஆதிதிராவி டர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கே ஒதுக்கப்படும். ஆனால், புதிய அமைச்சர் திருமுருகன் அந்த சமூகத்தை சேர்ந்தவரில்லை. எனவே, அந்த இலாகா முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்த சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம் வழங்க வேண்டும்.

    இதனால், அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறை நேரடியாக தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது.
    • இளநிலை பொறியாளர் ஒருவரை நியமித்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கடந்த 11-ந் தேதி விஷவாயு தாக்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலியானார்கள்.

    இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சரிவர சுத்திகரிக்கப்படாததால் உருவான விஷவாயு பாதாள சாக்கடை வழியாக சென்று கழிவறைக்குள் புகுந்து உயிர்ப்பலி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

    பொதுப்பணி சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினரும் அங்கு ஆய்வு நடத்தினார்கள். அப்போது பாதாள சாக்கடையில் உருவான ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயு தாக்கியதால் மூச்சு வாயு தாக்கியதால் மூச்சு திணறி அவர்கள் 3 பேரும் இறந்ததாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது வீடுகளில் கழிவறை அமைத்த பொதுமக்கள் பாதாள சாக்கடையில் விஷவாயு உருவானால் அது கழிவறைக்குள் வராமல் தடுக்கும் வாட்டர் சீல், ஷோக் பிட் ஆகிய அமைப்புகளை செய்ய தவறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    பாதாள சாக்கடை திட்டங்களை பொறுத்த வரை கனகனேரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்பேட்டையில் இருந்து ரசாயன கழிவுகளும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து மருத்துவ கழிவுகளும் இரவு நேரத்தில் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இத்தகைய கழிவுகளால்தான் விஷவாயு உருவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எழுப்பியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறை நேரடியாக தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இளநிலை பொறியாளர் ஒருவரை நியமித்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது.

    இதனிடையே நேற்று பெங்களூரை சேர்ந்த ரணதேவ் ஆனந்த் என்பவர் தலைமையிலான தனியார் நிறுவன குழு கனகனேரி சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக அவர்கள் தலைமை பொறியாளருடன் ஆலோசனையும் நடத்த உள்ளனர்.

    மேலும் புதுவையில் உள்ள கழிவுநீர் வெளியேற்றம், சுத்திகரிப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐ.ஐ.டி. குழு மற்றும் சூரத் நிபுணர் குழுவுக்கும் அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

    • திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
    • அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளு மன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

    அதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் நேற்று அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.

    மதியம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ. தனித்தனியாக கவர்னரை சந்தித்துபேசினர்.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கேட்ட போது தொகுதியில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.

    • வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
    • மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
    • பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷ வாயுவால் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

    இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்கூராய்வு நடந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணி குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.விழுப்புரத்திலிருந்து வந்த பஸ்கள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது.

    சுமார் அரைமணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின்போது மூலக்குளம் வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சிற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர்.

    நேற்று இரவில் பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் மறியல் போராட்டம் நடந்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
    • மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீட்டு கழிவறையில் வெளியேறிய விஷ வாயுவால் தாய், மகள், சிறுமி என 3 பேர் இறந்தனர்.

    வீட்டு கழிவறையில் விஷ வாயு பரவியது எப்படி? என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுவை நகர் மற்றும் நகரை அடுத்துள்ள புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையின் மேன்ஹோலுக்கு செல்கிறது. அங்கிருந்து கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.

    அங்கு திட கழிவுகளை தனியாக பிரித்து கழிவுநீரை சுத்திகரித்து வாய்க் காலில் விடுகின் றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும் போது, குழாயில் சில இடங்களில் காற்று வெற்றிடம் உருவாகும்.

    அங்கு விஷ வாயு உருவாகி வெற்றிடத்தை நிரப்பும். சில நேரம் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மேன்ஹோலில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன், நைட்ரஜன் சல்பைடு, அமோனியா போன்ற வாயுக்கள் உருவாகும்.

    ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு கழிப்பறை கட்டவே இடம் போதாத நிலை உள்ளது. அதோடு பலர் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாயில் வாயு வெளியே வராதபடி எஸ் அல்லது பி பென்ட் வடிவ அமைப்பை ஏற்படுத்த வில்லை.

    இதனால் மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு வீட்டிலும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட பிளம்பர் மூலம் பணிகளை செய்ய வேண்டும். இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா? துர்நாற்றம், விஷவாயு வெளியேறாமல் இருக்க எஸ் அல்லது பி பென்ட் அமைக்கப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.

    கழிப்பறையில் இருந்து செல்லும் குழாய்க்கும், பாதாள சாக்கடையில் இணைக்கும் குழாய்க்கும் உள்ள இடைவெளியில் சிறிய சதுர தொட்டி கட்டி காற்று வெளியேற வென்ட் அமைத்தால் இதுபோன்ற விஷ வாயு தாக்கத்தை தவிர்க்கலாம்.

    பாதாள சாக்கடை மென்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கழிவுநீர் குழாய்களில் நாப்கின், துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட மக்காத குப்பைகளை போடக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஹைட்ரஜன் சல்பைடு வாயு

    விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல், உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டின் கழிவறையில் விஷ வாயு தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன எந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.

    வீட்டின் கழிவறைகளில் விஷ வாயு ஏதும் இல்லை. மேன்ஹோலில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஹைட்ரஜன் சல்பைடு வாயு மூலம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வாயு வெளியேற மேன்ஹோல்கள் உடனடியாக திறந்து வைக்கப்பட்டது.

    • பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
    • போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

    பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை

    அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.

    பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர்.
    • என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

    ஆட்சி அமைந்த நாளிலேயே முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து பெண்களை கவரும் வகையில் சிலிண்டருக்கு மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை, புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.

    இதனால் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு நற்பெயர்தான் இருந்தது. இந்த நற்பெயருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் முத்தியால்பேட்டையில் சிறுமி கஞ்சா போதையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இது புதுச்சேரி மக்கள டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர் கட்சிகளான காங்கிரசும், தி.மு.க.வும் கையில் எடுத்து பிரசாரம் செய்தனர்.

    புதிய ஆட்சி அமைந்தவுடன் ரெஸ்டோ பார் திறந்தது, கஞ்சா உட்பட போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறியது, நெரிசல் மிகுந்த நகரமாக புதுச்சேரியை மாற்றி விட்டனர் என காங்கிரஸ், தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

    மேலும் கடந்த ஆட்சியில் மூடப்பட்ட ரேசன் கடைகளை புதிய அரசு மீண்டும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளை திறக்காத விவகாரத்தை எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றனர். பெண்கள் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதை விரும்பவில்லை.

    ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர். ஆனால் அதனை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை. இதையே பிரசாரமாக காங்கிரஸ் பயன்படுத்தியது. மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், ரேசன் கடைகள் மூடிக்கிடக்க என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுதான் காரணம் எனக்கூறி பிரசாரம் செய்தார். இது காங்கிரசின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.

    • ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கோடை விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விடுமுறை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் புதுச்சேரியில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருக்கிறது.

    • ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆனாலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதுடன் மாநில எல்லைகள் மற்றும் ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் உள்ள தனியார் கூரியர் நிறுவன குடோனில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    இருப்பினும் அங்கிருந்த ஊழியர்களிடம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதாவது பார்சல் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ×