என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சிபிஎஸ்இ அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
    • ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.

    தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது.

    அதன்படி, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.

    தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என்பது புதிய நடைமுறை ஆகும்.

    அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிறகு, விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா ? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும்.

    ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • பெங்களூரு தரப்பில் எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார்.

    3-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் பெங்களூருவில் இன்று தொடங்கியது.

    இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனி வயட் ஹாட்ஜ் களமிறங்கினர். இதில் டேனி வயட் ஹாட்ஜ் 9 ரன்னிலும், மந்தனா 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து எலிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தது.

    இதில் ராக்வி பிஸ்ட் (1), கனிகா அகுஜா (3), ரிச்சா கோஷ் (28), ஜார்ஜியா வரேஹம் (6) ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதிரடியாக ஆடிய எலிஸ் பெர்ரிஅரைசதம் அடித்து அசத்தினார். இவர் 81 ரன்களில் அவுட் ஆனார்.

    இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.

    • பொருத்தமான பதிலடியை கொடுத்ததாக அவர் கூறினார்.
    • அனைத்து மொழிகளையும் வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு.

    இந்திய மொழிகளுக்கு இடையில் எப்போதும் பகைமை இருந்தது இல்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றை வளப்படுத்தியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.

    மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பிளவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் மொழியியல் பாரம்பரியம் பொருத்தமான பதிலடியை கொடுத்ததாக அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. மொழிகள் எப்போதும் ஒன்றை ஒன்று வளப்படுத்தியுள்ளன. இந்த தவறான கருத்துக்களில் இருந்து நம்மை தூர விலக்கி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு."

    "இந்தியா உலகின் மிகப்பெரிய மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது என்பது இதற்கு சான்றாகும். இந்த மொழியியல் பன்முகத்தன்மை நமது ஒற்றுமையின் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்," என்று மோடி கூறினார்.

    இந்த விழாவில் என்.சி.பி.-எஸ்.பி. தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 98வது அகில பாரதிய மராத்தி சம்மேளனத்தின் தலைவரான எழுத்தாளர் தாரா பவால்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் படி குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மநீம கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.
    • நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது.
    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.

    அப்போது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:-

    வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது.

    இந்தியை திணிக்க முயன்றவர்களை தடுத்தவர்கள் இன்று நரைத்த தாடியுடன் கூட்டத்தில் இங்கே நின்று கொண்டு இருப்பார்கள். மொழிக்காக உயிரையே தமிழகத்தில் விட்டுள்ளனர்.

    பச்சைக்குழந்தைக்கு என்ன வேண்டும் என்று தெரியும். தமிழனுக்கு தெரியாதா? என்ன மொழி வேண்டும், வேண்டாம் என்று. எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.

    மாணவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நான் சொல்வதை கற்றுக் கொள்ளவில்லை என்றால் கைச்செலவுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் அரசு எந்த நிலைக்கு தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும்.

    இது ஒரு நாடு, இதை பிரித்தாள முடியாது. அப்படி நினைப்பவர்கள் எல்லாம் நாட்டை விட்டு செல்ல வேண்டும். இதை நீங்கள் பல மொழிகளில் சொல்ல வேண்டும்.

    ஆனால் நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. நான் மொழி போராட்டத்தில் அரைடவுசர் போட்டுக் கொண்டு பங்கேற்ற பையன். இனிமேல் வலியுறுத்த மாட்டேன் என்று மேல் தலைமை வலியுறுத்திய பிறகு அமைதி அடைந்தோம். அதன்பிறகு நான் இந்தி படம் கூட நடித்தேன். ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது.

    அதுமாதிரி, உங்கள் சாய்ஸ் என்னவென்று தமிழனிடம் விட்டுவிட்டால் சீன மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். அதற்காக ஆவண செய்ய வேண்டியது அரசாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
    • இந்த முறை மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காக விளையாடுகின்றன. இந்த முறை அணிகளிடையே 74 போட்டிகள் இந்தியா முழுக்க 13 நகரங்களில் நடைபெற இருக்கிறது.

    ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில காலமே எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகும் பணிகளில் மும்முரமாக ஈடுபட துவங்கியுள்ளன. அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐ.பி.எல். தொடருக்கான ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    நீலம் மற்றும் தங்க நிறங்களை கொண்டிருக்கும் புதிய ஜெர்சி அணிந்தபடி வீரர்கள் காட்சியளிக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் புதிய ஜெர்சியில் இருப்பதோடு, மும்பை அணியின் கொடி மற்றும் கிட் உள்ளிட்டவையும் காண்பிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர்.
    • ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் ஐஷ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடைய ஜிகுபா படத்தின் கதையோடு பொருந்திப் போனதால் ஆருர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அமலாக்கதுறை விசாரணையில் எந்திரன் திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் ஜிகுபா படத்தின் கதையை ஒன்றியிருந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தின் சம்பள தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

    எந்திரன் திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் சம்பளமாக 11.5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது அவருடைய 10.11 கோடி ரூபாய் அசையா சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    இதற்கு இயக்குனர் ஷங்கர் அவருடைய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது " அமலாக்கத்துறை என்னுடைய 3 அசையா சொத்துகளை முடக்கினர். போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இச்செயலை செய்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதுவரை என்னிடம் அமலாக்கத்துறை எந்தவித தொடர்பும் மேற்கொள்ளவில்லை.

    ஏற்கனவே உச்சநீதிமன்றம் எந்திரன் கதை ஜிகுபா கதையுடன் ஒன்றி போன வழக்கை தள்ளுபடி செய்தது. இருதரப்பினரையும் அழைத்து பேசி, ஆதாரங்களை படித்து பார்த்து எந்திரன் கதையின் பதிப்புரிமை உரிமையாளராக ஆரூர் தமிழ் நாடன் தன்னை அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த கோரிக்கையை நிராகரித்தது.

    இவ்வளவு தெளிவாக ஒரு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும். அமலாக்கத்துறை என்னுடைய அசையா சொத்துகளை முடக்கியது மேலும் என்னை மன வருத்தம் அளிக்கிறது" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரூ.385 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூ.704.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும், ரூ.385 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.

    பிறகு, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை சுட்டிக் காட்டினார்.

    மேலும், அவர் கூறியதாவது:-

    சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டு பணி நடைபெறுகிறது. சிதம்பரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    ரூ.130 கோடி செலவில் வெலிங்டன் ஏரி கரை மேம்படுத்தப்பட்டு வாய்க்கால்கள் புனரமைக்கப்படும். ரூ.50 கோடி மதிப்பீட்டில் மஞ்சக்குப்பம் மைதானம் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.

    பன்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடி செலவில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். புவனகிரி, சிதம்பரம் மக்களுக்கு பயன்தரும் வகையில் 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.

    திருவந்திபுரம் கோவில் பக்தர்களுக்காக ரூ.7 கோடி மதிப்பில் சாலை மேம்படுத்தப்படும். குறிஞ்சிப்பாடியில் ரூ.6.50 கோடி செலவில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும்.

    கடலூரில் தென் பெண்ணை ஆற்றில் ரூ.57 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கெடிலம் ஆற்றில் ரூ.36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வீராணம் ஏரி ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    மகளிர் உரிமைத் தொகையை அண்ணன் தரும் சீர் என பெண்கள் கூறுகின்றனர். முன்னோடி திட்டங்களால் நமது நாட்டிற்கே முன் மாதிரியான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

    மாநிலங்கள் வளர்ந்தால் அதன் மூலம் நாடு வளரும், ஆனால் மத்திய பாஜக அரசு தமிழக வளர்ச்சியை தடுக்கிறது.

    மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான நிதி தர மறுப்பதுடன் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்கிறது.

    புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதை மத்திய அரசு தடுக்கிறது. சமுகநீதியை சிதைப்பதற்கு தான் தேசியக்கல்வி கொள்கையை மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது.

    முன்னோடி திட்டங்களால் நமது நாட்டிற்கே முன் மாதிரியான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. மத்திய அரசின் எத்தனையோ தடைகளையும் சிக்கல்களையும் தாண்டி தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
    • சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார். சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார். இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

    தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் உள்ளன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஏற்கனவே சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான இந்த தீர்ப்பு சீமானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

    • ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் மனு ஆனந்த் படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமைந்து இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
    • சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!

    நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

    26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை குறைத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!

    அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
    • வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்தார்.

    புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.

    நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.

    புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது. இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    "வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம்," என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது.

    இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.

    கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், சீன ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக உலகளவில் நம்பப்படுகிறது. இதுதவிர கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது. ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    ×