என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.
- ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தருகிறார்.
இந்தியா - ரஷியா உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில் வருகிறார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.
இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நாளை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டின்போதும் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
* திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை
* சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.
* விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
- பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
- விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டாவையொட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மற்ற மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
அதன்பிறகு விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.
- இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய மாபெரும் ஹிட் பாடலான "கல்யாண மாலை" பாடல் இடம்பெற்றிருந்தது.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
விழாவின்போது, ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை நடத்தினர்.
இதில், டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
"ப்ரோ கோட்" படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த ப்ரோமோ வீடியோவில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய மாபெரும் ஹிட் பாடலான "கல்யாண மாலை" பாடல் இடம்பெற்றிருந்தது.
இதனால், இப்பாடலை பயன்படுத்த அனுமதி வழங்கிய இளையராஜாவிற்கு நன்றி கூறி ப்ரோ கோட் பட இயக்குனர் கார்த்திக் யோகி சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," ப்ரோ கோட் படத்தின் PROMO வீடியோவின் முதுகெலும்பாக இருக்கும் தலைசிறந்த படைப்பான 'கல்யாண மாலை'யை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி ராஜா சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், நிலையான மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும்.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் பசால்ட் எக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம். நாட்டில் அதன் வரம்பை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் புதிய உத்தியின் ஒரு பகுதியாக இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக, இந்த நிறுவனம் ஹேட்ச்பேக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலான C3X-ஐ அறிமுகப்படுத்தியது.
வரவிருக்கும் சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், C3X போன்ற மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பசால்ட் X' பேட்ஜைத் தவிர, வாகனத்தில் கூடுதல் மாற்றங்கள் எதுவும் இருக்காது. வண்ண விருப்பங்கள் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் தற்போதைய பசால்ட்டின் அம்சங்களுடன் ஒத்துப்போகும். இது நிலையான பசால்ட்டை விட பிரீமியம் மாறுபாடாக நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
அதன் அம்சங்களைப் பொறுத்தவரை, சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 10.25 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் TFT கலர் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். பாதுகாப்பிற்காக, இந்த கூபே எஸ்யூவியில் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ESP (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்), டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படும்.
முந்தைய டீஸர்களின் அடிப்படையில், சிட்ரோயன் பசால்ட் எக்ஸ் காரில் குரூயிஸ் கண்ட்ரோல், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் லெதரெட் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஷ்போர்டு ஆகியவை இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஏர்கிராஸ் உட்பட பிற சிட்ரோயன் மாடல்களிலும் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், நிலையான மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும். இந்த எஞ்சின் 108 bhp பவர் வெளிப்படுத்தும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் டிரான்ஸ்மிஷனை பொறுத்து 205 Nm வரை டார்க் வெளிப்படுத்தும்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-14 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி இரவு 9.37 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 2.34 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-உறுதி
கடகம்-திடம்
சிம்மம்-செலவு
கன்னி-பயணம்
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்-லாபம்
தனுசு- ஜெபம்
மகரம்-வரவு
கும்பம்-புகழ்
மீனம்-பெருமை
- இன்று காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 30.8.2025 – சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்.
- முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.
ரிஷபம்
லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் தீரும். உத்தியோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கன்னி
குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
துலாம்
நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்துசேர்ப்பர்.
தனுசு
நினைத்தது நிறைவேறும் நாள். பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
கும்பம்
எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
காலை நேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
- சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் நடக்கிறது.
- பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாஸ்கோ:
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஒன்றாம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப் பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது' என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, இதில் முக்கியமானது என்னவென்றால், வரும் டிசம்பரில் நமது அதிபரின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதும் உறுதியாகி உள்ளது.
- முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
சியோல்:
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
- தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும்.
- அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:
தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர்.
புல்லட் ரெயில் சேவை தவிர, தென் மாநிலங்கள் தங்களது சாலைகளை பெரிய அளவில் மேம்படுத்த போகிறது. சர்வதேச தரத்துக்கு இணையாக தொலைதூர சாலைகளை கூட சிறப்பாக பராமரிப்பது இதில் அடங்கும். இந்தியாவின் பழங்கள் விளைச்சலில் ஆந்திர பிரதேசம் 25 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயிகளுக்கான புதிய சர்வதேச சந்தைகளை தேடி வருகிறோம்.
உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய துறைகளில் நிறுவனங்களை நிறுவ முதலீட்டாளர்களை வலியுறுத்த புதிய முயற்சிகளுக்கான அனுமதிகளை ஆந்திர அரசு விரைவுபடுத்தும். அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கால் ஈர்க்கப்பட்ட ஒரு திட்டமான சிலிகான் வேலி திட்டம் அமராவதியில் நிறுவப்படுவதற்கு, எதிர்கால மேம்பாடு குறித்து பில் கேட்சுடன் ஆந்திரா ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.






