என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.
    • பேட்டிங் செய்யலாம், பந்து வீசக் கூடாது என அறிவுறுத்தல்.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை தொடரில் இருந்து விலகினார்.

    இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மருத்துவ அனுமதியை பெற்றுள்ளார்.

    ஆனால் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும். பந்து வீசக்கூடாது, முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் பீல்டிங் செய்யக் கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இம்பேக்ட் பிளேயராக மிட்செல் மார்ஷ் விளையாட முடியும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரண் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீசவில்லை என்றாலும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் மிட்செல் மார்ஷல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    மிட்செல் மார்ஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிக்பாஷ் லீக்கில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமானதால் இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபில் இருந்து விலகினார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வருகிற 18-ந்தேதி மிட்செல் மார்ஷ் இணைய உள்ளார்.

    • சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். தோனி சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி சமீபத்தில் விமான நிலையம் வந்திருந்தார்.

    அப்போது, அவரிடம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி பெற்றது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.எஸ். தோனி எந்த பதிலும் தெரிவிக்காமல், கையை தேவையில்லை என்பது போல் செய்கை காண்பித்து அங்கிருந்து கடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு எம்.எஸ். தோனி பதில் அளிக்காமல் சென்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் பலரும் எம்.எஸ். தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த வீடியோவை பார்த்த பிறகு வருத்தமாக இருக்கிறது என கமென்ட் செய்துள்ளனர்.

    • கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தோடு காணப்படுகிறார்.
    • அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார்.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து, அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றனர்.

    இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அகாடமி மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பவர்-ஹிட்டிங் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் எழுந்தன. வேறென்ன கேட்க முடியும்?"

    "அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும். அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடுவார்."

    "தற்போது அவர் ஐ.பி.எல்.-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் அடிக்கும் சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன. எதிர்காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்," என்று தெரிவித்தார்.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
    • பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

    சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.

    ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.

    • பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கே.எல். ராகுல் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • ஐபிஎல் போட்டி தொடங்கும்போது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    தற்போது அவரது மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. வெற்றி சந்தோகத்தில் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Oh, Baby! எனப் பதிவிட்டுள்ளார்.

    குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், கேப்டன் பதவியை நிராகரித்து ஒரு வீரராக விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.

    வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மெஹ்முதுல்லா கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது.

    மெஹ்முதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டியில் 5 சதங்களுடன் 2914 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 5689 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 2444 ரன்களும் அடித்துள்ளார்.

    அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43, ஒருநாள் கிரிக்கெட்டில் 82, டி20 கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    • நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம்.
    • எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது.

    ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

    எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர் மற்றும் என்னுடன் ஆறு பேரை தக்கவைத்தது. இதனால் அவர் அணியில் இருந்து வெளியிடுவது கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து தொடரின்போது அவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பட்லரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராாக இல்லை என்று முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை எனத் தெரிவித்தேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு விசயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால், ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் வீரர்களை வெளியிட வேண்டும் என்ற விதியை மாற்றுவேன்.

    ஐபிஎல் விதிக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக உருவாக்கிய அந்த இணைப்பை, உறவை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நான் வேறு என்ன சொல்ல முடியும்?.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
    • இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது உள்ள வீரர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.

    இந்தியா எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் விளையாடுவதால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற்றதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது. சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

    மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும்.

    இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது. தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது.

    கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது. நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைடு எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள்.

    என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறினார்.

    • மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெர்ரி 49 ரன்கள் குவித்தார்.
    • பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

    இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
    • மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.

    மும்பை:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.

    இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.

    அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×