என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது.
    • சென்னை சூப்பர் கிங்சில் தொடங்கி அங்கேயே முடிகிறது.

    தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இவரது ஓய்வுக்கு சிஎஸ்கே அணி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கின் சொந்த சிங்கம். கேரம்-பந்தை திருப்புகிற சுந்தரன்! முதல்முறையாக மஞ்சள் நிற ஜெர்ஸியில் தூசி படிந்த சிஎஸ்கேவின் களத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழல் பந்தில் ஆதிக்கம் செலுத்தினாய். எல்லாவற்றையும் கொடுத்தீர்கள்.

    நமது பாரம்பரியத்தின் தூணாக இருந்து, சேப்பாக் கோட்டையில் கர்ஜித்தீர்கள். தெருவில் உள்ளவர்களிடமும் மரியாதையைப் பெற்றீர்கள் அஸ்வின்.

    வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்சில் தொடங்கி அங்கேயே முடிகிறது. எப்போதும் சிங்கம். எப்போதும் எங்களில் ஒருவர்! நினைவுகளுக்கு நன்றி அஸ்வின்! எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.
    • இதனால் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.

    இதனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை டிஎன்சிஏவும் உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அணியுடனான அவரது 13 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது.

    கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியின் தொடக்க பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இது புச்சிபாபு தொடரிலும் பின்பற்றப்பட்ட நிலையில், 34 வயதாகும் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறி திரிபுரா அணிக்காக விளையாட முடிவு எடுத்துள்ளார். ஆந்திர பிரதேச அணிக்காக ஆடி வந்த ஹனுமா விஹாரி, தற்போது திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார்.

    தமிழ்நாடு அணிக்காக 70 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள விஜய் சங்கர் 3,702 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் கேப்டனாக விஜய் ஹசாரே, தியோதர் டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களையும் தமிழ்நாடு அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.

    கடந்த ஆண்டு பாபா அபரஜித்தும் தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, கேரளா அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
    • ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோல் புற்று நோய் என்பது உண்மையான ஒன்று. இன்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி இருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

    உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய விஷயத்தில், நோய் வருவதற்கு முன்பே காத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக உள்ளது. நான் தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்து வருகின்றேன். ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.

    என்னுடைய மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அகற்றி விட்டார்கள்.

    என்று கிளார்க் கூறியுள்ளார்.

    கிளார்க், 115 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8643 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் 28 சதம் அடங்கும். இதேபோன்று 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7981 ரன்கள் அடித்துள்ளார்.

    2015-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2015 ஆஷஸ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆப்ரேஷன்களை செய்துள்ளேன்.
    • ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் அண்மையில் குடலிறக்க பாதிப்பிற்கான அறுவை சிகிச்சையை ஜெர்மனி சென்று மேற்கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஓய்வெடுத்து வந்த அவர் அண்மையில் தான் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டார். அதன் பின்னர் தற்போது நல்ல உடற்தகுதியை எட்டியுள்ளார்.

    ஆனாலும் அவரது உடற்தகுதி இந்த தொடரில் விளையாடும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறதா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் தனது காயம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தின் போது நான் எனக்கு இருக்கும் பாதிப்பை கண்டறிந்தேன். அதன்பிறகு ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்ற பாதிப்பை சந்தித்து அப்போதும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தேன். அதற்கு முன்னதாக கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தேன். இப்படி தொடர்ச்சியாக சில இடங்களில் எனக்கு காயம் இருந்தது உண்மைதான். அதனால் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆப்ரேஷன்களை செய்துள்ளேன்.

    ஆனாலும் தற்போது மிகச் சிறப்பாக காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதாக நினைக்கிறேன். நான் கடந்த ஐந்து-ஆறு வாரங்களாகவே நல்ல முறையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்காக தயாராகியுள்ளேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் நல்ல பயிற்சியையும் எடுத்துள்ளேன். ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாலே ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டேன்.

    தற்போது அனைத்தும் முடிந்து நல்ல முறையில் தயாராகி மிகச் சிறப்பாக இருப்பதாக உணருகிறேன். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் முழுவதும் எந்த ஒரு சிரமமும் இன்றி விளையாடும் அளவிற்கு என்னுடைய உடற்தகுதி சிறப்பாக உள்ளது.

    என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது.
    • ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

    சென்னை:

    இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின். இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார்.

    ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.

    பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    என அவர் கூறினார்.

    பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    அதற்கு காரணத்தை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் ஓய்வு அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

    அதன்பிறகு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள். 2009-ம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை ஏற்பட்டது.

    இதனால், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், அஸ்வினை சிஎஸ்கே கழற்றிவிடும் எனக் கூறப்பட்டது. அந்த தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் அப்படி பேசவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
    • 103 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 3 இரட்டை சதம் உள்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து 'சுவர்' என அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு நிகராக புஜாராவும் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்காற்றியுள்ளதாக விளையாட்டு வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ஓய்வு அறிவித்த புஜாராவிற்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, விராட் கோலி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி. உங்களுக்கு அற்புதமான தொழில் வாழ்க்கை அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள், இனிமேல் நடக்கவிருக்கும் காரியங்களுக்கு வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக என பதிவிட்டுள்ளார்.

    • கேரளா கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
    • இன்று நடந்த போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.

    கேரள கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். முதல் 2 போட்டிகளில் நம்பர் 6 வரிசையில் ஆடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இந்த நிலையில் 3-வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், சதம் விளாசினார். இன்று நடந்த 4-வது போட்டியில் போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.

    அதிலும் சிஜோமோன் ஜோசப் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 1 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். ஜோசப் நோ-பால் வீசியதால் இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆசியக் கோப்பை டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.

    ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால்,பிளேயிங் லெவனில் நிச்சயம் கொண்டு வரப்பட உள்ளதாக பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இடது - வலது கூட்டணியை விரும்புபவர்.

    இதனால் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணியை கம்பீர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனின் நிலை பரிதாபமாக மாறியதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

    • ரோகித், பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் ட்ரீம்11 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
    • விராட் கோலி MPL-ஐ விளம்பரப்படுத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சரான ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம் 11 இந்திய அணி ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது. மத்திய அரசு ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளதால் ட்ரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முறித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று பிசிசிஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

    இதனால் துபாயில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியுள்ளது. டொயோட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இடம்பெற போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2023-ல் ட்ரீம் 11 நிறுவனம் பிசிசிஐயுடன் ரூ.358 கோடி மதிப்பிலான மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் சட்டம் காரணமாக இப்போது ஒப்பந்ததை முறிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதால், பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி நஷ்டம் ஏற்படும். முதன்முறையாக பிசிசிஐ இப்படி ஒரு நஷ்டத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் புதிய ஸ்பான்சர் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்படுவதன் மூலம் பிசிசிஐ இந்த நஷ்டத்தை சரிகட்டி விடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், கிரிக்கெட் வாரியம் மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவின் முன்னணி வீரர்கள் கூட பெரிய ஒப்புதல் ஒப்பந்தங்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

    அதன்படி ரோகித் சர்மா, பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், மற்றும் பாண்ட்யா சகோதரர்கள் ஆகியோர் ட்ரீம்11 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் My11 சர்க்கிளை ஆதரித்தார்கள். விராட் கோலி MPL ஐ விளம்பரப்படுத்தினார். அதே நேரத்தில் தோனி WinZO ஐ ஆதரித்தார்.

    இதில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வழங்கப்படுவதில்லை. கிரிக்பஸ் அறிக்கையின்படி, "கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. ரோகித் சர்மா மற்றும் தோனி 6 முதல் 7 கோடி ரூபாய்க்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 150 முதல் 200 கோடி ரூபாய் வரை இழக்க நேரிடும்.

    • வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் நடுவர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
    • 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் ரெடிட் சமூக வலைதளப்பக்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ரெடிட் இணையத்தில் அவ்வப்போது சச்சின் டெண்டுல்கர் நேரலையில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்து வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அவர் ரசிகர்களிடம் பேசினார். அப்போது சச்சின் டெண்டுல்கரிடம் நிறைய ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதில் ஸ்டீவ் பக்னர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பேட்டிங் செய்யும் போது அவருடைய கைகளுக்கு குத்துச்சண்டை கையுறைகளை (பாக்ஸிங் கிளவுஸ்) வழங்குங்கள். அப்போது தான் அவரால் தன்னுடைய விரலை உயர்த்த முடியாது. என்று கலகலப்பான பதிலை கொடுத்தார்.

    ஏனெனில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் அம்பயர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

    குறிப்பாக 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதே போல சச்சின் டெண்டுல்கரை பார்த்தாலே அவர் எதிரணி விக்கெட் கேட்டால் உடனடியாக கையை உயர்த்தி அவுட் வழங்கி விடுவார்.

    அவராலேயே சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 5 முதல் 7 சதங்களை தவற விட்டிருப்பார் என்றே சொல்லலாம். 

    • தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ. பி.எல்.லை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தத் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சீசனில் கிரஹாம் போர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர், நீக்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் துணை பயிற்சியாளராக உள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை ஜோ ரூட் ஒருநாள் நிச்சயம் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜோ ரூட்டின் டெஸ்ட் சாதனைகள் குறித்து முதல்முறையாக சச்சின் மனம் திறந்துள்ளார்.

    ரெடிட்டில் நடந்த Ask Me Anything அமர்வின் போது, சச்சினிடம், "ஜோ ரூட் பற்றிய உங்கள் முதல் அபிப்ராயம் என்ன? அவர் இப்போது 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார், உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் அவர் உங்களுக்கு எதிராக தான் தனது முதல் போட்டியை விளையாடினார்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சச்சின், "டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்களைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் அவரது முதல் டெஸ்டின் போது தான் நான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அப்போதே எனது அணியினரிடம் அவர் இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறினேன். அவர் விக்கெட்டை மதிப்பிடும் விதமும், அவர் விளையாடிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என்று அந்த தருணத்திலேயே எனக்குத் தெரிந்தது" என்று தெரிவித்தார்.

    ஜோ ரூட்டை சச்சின்பாராட்டுவது இது முதல் முறையல்ல. 2021-ல் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டிங் சரிவை சந்தித்தது. அப்போது வர்ணனை செய்த சச்சின், 'இந்த இங்கிலாந்து அணியை தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் திறமை ஜோ ரூட்டிடம் மட்டுமே உள்ளது' என்று குறிப்பிட்டார். அவரது திறமை மீது சச்சின் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான பேட்டிங் நிலையை தொடர்ந்தார். அவரது அடுத்த பெரிய சவால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் சதம்கூட அடிக்கவில்லை என்ற குறையை இந்த முறை அவர் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×