என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

    சாக்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து டி20 தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், நியூசிலாந்தின் இஷ் சோதி நேற்று 3 விக்கெட் சாய்த்தார். அவர் டி20 கிரிக்கெட்டில் 156 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமான் 155 விக்கெட் எடுத்த சாதனையை முறியடித்தார்.

    இந்தப் பட்டியலில் ரஷித் கான் 182 விக்கெட், டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

    • குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
    • மேகாலயாவின் ஆகாஷ் குமார் அதிவேகமாக அரை சதம் கடந்து சாதனை படைத்தார்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.

    இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர்.

    அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார்.

    வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

    மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆகாஷ் 50 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார்.

    முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார்.

    துரின்:

    ஏதென்ஸ் தலைநகர் கிரீசில் ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஜோகோவிச் ஏ.டி.பி. ஒற்றையரில் வென்ற 101-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இத்தாலியின் லாரன்சோ முசெட்டி வாய்ப்பு பெற்றார்.

    • துருவ் ஜூரெல் சதமடிக்க இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பெங்களூரு:

    இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துருவ் ஜூரெல் சதமடித்து 132 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்க ஏ சார்பில் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து, முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் அக்கர்மேன் சதமடித்து 134 ரன்கள் விளாசினார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    34 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரெல் மீண்டும் சதமடித்து 127 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க ஏ அணி அடித்து ஆடியது. ஜோர்டான் ஹெர்மான் 91 ரன்னும், செனோக்வானே, ஜுபைர் ஹம்சா தலா 77 ரன்னும், டெம்பா பவுமா 59 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா ஏ அணி 5 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    துரின்:

    உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

    அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி, ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.

    ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்நிலையில், முதல் நாளில் ஸ்பெயினின் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-2 என வென்றார்.

    • டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா இன்னும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
    • இதனால் இந்திய அணி பரிசோதனை என்ற பெயரில் வீரர்களை அடிக்கடி மாற்றக் கூடாது.

    இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்ற 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் காம்பினேஷன் மாறிக் கொண்டே இருந்தது. இந்த அணி நிர்வாகம் இதை பரிசோதனை எனக் குறிப்பிடுகின்றது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இதனால் அனைத்து பரிசோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இது பரிசோதனை கட்டமாகும். இந்த பரிசோதனைகள் நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. இதனால் யாரைம் டாப் வரிசை அல்லது கீழ் வரிசையில் விளையாட வைக்க முடியும், விளையாட அல்லது யாரையும் நீக்க முடியும் என்று சொல்கிறார்கள். வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, அவர்கள் பரிசோதனை செய்யலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

    எனினும், சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 பேட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அது பரிசோதனை முடிவுக்கு நேரம் என்று நினைக்கிறேன். நாம முடிச்சிட்டோம்னு நினைக்கிறேன். இதற்கு அப்புறம் நீங்க அதிகமாக பரிசோதனை பண்ண முடியாது. நீங்க செய்யக் கூடாது. ஏனெ்றால், உலகக் கோப்பை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

    • ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்றார்.
    • நட்சத்திர தொடக்க வீரராக உருவெடுத்து வருகிறார்.

    இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களம் இறங்கி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி இரண்டு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

    அபிஷேக் சர்மாவுக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் ஆலோசனை வழங்கினார். பேட்டிங் குறித்து நுட்பங்களை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சிறப்பாக விளையாடும் அபிஷேக் சர்மா குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் "நீங்கள் அபிஷேக் சர்மாவிடம் இருந்து எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவரிடம் இருந்து யாரும் பேட்டை மட்டும் வாங்க முடியாது. அதற்காக அவர் சண்டையிடுவார். அழக்கூட செய்வார். இருந்தாலும் பேட்டை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார். 10 பேட் வைத்திருந்தாலும், இரண்டு பேட் மட்டுமே வைத்துள்ளேன் என்பார். என்னுடைய எல்லா பேட்டையும் எடுத்துக் கொண்டார். ஆனால், அவருடைய ஒரு சொந்த பேட்டை ஒருபோதும் கொடுக்கமாட்டார்" என்றார்.

    • தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிராக முதல் போட்டியில் விளையாடும்போது காயம்.
    • ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் டி20 லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ல் ஆர்.சி.பி. அணி முதன்முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

    மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேனான இவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா 'ஏ' அணியில் ரஜத் படிதார் இடம் பிடித்திருந்தார்.

    முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் படிதாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிகிறது. இதனால் வரவிருக்கின்ற ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026 ஐ.பி.எல். லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். அதற்கு தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற இருப்பது உறுதியானது.
    • சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர்

    கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.

    இந்நிலையில், சஞ்சு சாம்சன் - ஜடேஜாவை வர்த்தகம் செய்துகொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர், ஆனால், நேரடி வர்த்தகத்திற்கு பதிலாக ஜடேஜாவுடன், டெவால்ட் ப்ரேவிஸையும் சேர்த்து ராஜஸ்தான் அணி கேட்பதால் அதனை ஏற்க சிஎஸ்கே தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
    • தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் நேற்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    தொடரை இழந்தாலும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை (POTS) வென்ற விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற தோனியின் (7) சாதனையை டி காக் (7) சமன் செய்தார். 

    • டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
    • சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.

    டபிள்யூ. டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.

    இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை யான சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.

    இதில் ரைபகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    • ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.
    • ராகுல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார்.

    6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி.யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்றுள்ளார்.

    இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.

    மேலும், ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்சிலாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார்.

    இதன் மூலம் 21 வயதான ராகுல் இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார். எஸ்.ஆர்.எம். கல்லூரியின் 15-வது கிராண்ட் மாஸ்டராவார்.

    ×