என் மலர்
விருதுநகர்
- மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்.
- ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்
தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடியதாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இதனையடுத்து, SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இ.பி.எஸ். வாய் திறக்காதது ஏன்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதம் ஓடிவிட்டது. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகிறார்கள். இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.
இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே... அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகின்றனர்..? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்..? அதிமுக பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாதென்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது. நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள்
உண்மையிலேயே தில்லு, திராணி, தெம்பு இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம் சென்னை மாநகராட்சியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 வாக்கு நீக்கப்பட்டது. நீதிமன்றம் நாடி, மாவட்டச் செயலாளர்கள் புகார் கொடுத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. போலி வாக்காளர்களை நீக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடி இப்போது நீக்கியிருக்கோம். ஒரு தொகுதியில் 27779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. திநகர் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சி தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது உண்மை, ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் பித்தலாட்டம்தானே? திமுக மக்களின் கட்சிக்காரர்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். அதனால் 2006 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால் அன்று ஒப்படைத்தவரை கைது செய்தார்கள். கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கட்சிக்கு கட்சி எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. அம்மா இருக்கும்போது சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது ஒன்றரை மணிநேரத்தில் 1200 ஓட்டுகளை பதிவுசெய்தார்கள் நீதிமன்றம் சென்றோம். ஒன்றரை மணிநேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடு தேர்தலை ரத்துசெய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு நடந்தது. திமுக அரசாங்கமே அந்த தேர்தலை ரத்து செய்துவிட்டது.
இன்று ஊழல் இல்லாத துறையே இல்லை. எதற்கெடுத்தாலும் பணம்தான். ஊழலில் ஸ்டாலின் அரசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு 5400 கோடி ஊழல் நடக்கிறது. மேலிடத்து உத்தரவு என்று சேல்ஸ்மேன் சொல்கிறார். இந்த நான்காண்டில் 22 ஆயிரம் கோடி ரூபாய் திமுக அரசு கொள்ளையடித்திருக்கிறது. 10 ரூபாய் மந்திரி செந்தில்பாலாஜி என்று மக்களே பெயர் வைத்துவிட்டனர்.
போதைப் பொருள் விற்பனை சுனஜோராக நடக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொன்னதை முதல்வர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை. 2022ம் ஆண்டு காவல்துறை மானியம் வந்தபோது, கொள்கை விளக்க குறிப்பில் 20வது பக்கத்தில், பள்ளி கல்லூரிக்கு அருகில் 23418 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் கைதுசெய்யப்பட்டது 148 பேர், மற்றவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள். அப்புறம் எப்படி கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்?
ஸ்டாலின் அவரது கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது. காலையில் கண்விழிக்கும்போது எங்க கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என்று பதறிப்போகிறேன் என்கிறார். அவருடைய கட்சிக்காரரையே கட்டுப்படுத்த முடியாதவர், நாட்டில் குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவார்..? பொம்மை முதல்வரை பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கிடையாது நான் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் 50 நிமிடம் பேசினேன். அப்போது அவர், இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள். நான் போய் பதிலுக்காக குறிப்பெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் பேச்சை நிறுத்திக்கொண்டேன்
இவ்வளவு நேரம் ஏன் பேசுகிறேன்? ஆட்சியில் நடக்கும் குறைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இன்றுவரை மக்கள் போராடுகிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டும்தான் கவனிப்பார்.
தமிழகத்தில் சூப்பர் முதல்வர் என்கிறார்கள். எதில் என்றால், கடன் வாங்குவதில் தான். இந்த ஐந்தாண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை உங்களிடம் தான் வசூல் செய்வார்கள். ஒருநாள் திமுக அரசு தமிழ்நாட்டையே கடன் வாங்கியதற்கு அடமானம் வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட காலம் வந்துவிடும்.
எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். ஆனால், அதற்காக அமைத்தார்களா.? கடன் வாங்குவதற்கே நிபுணர் குழு அமைத்தார்கள். பொருளாதார வளர்ச்சி 11.19% என்கிறார் புள்ளிவிவரம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த புள்ளி விவரத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போயிருந்தேன், பெண்களிடம் பேசினேன். இதற்கு என்னிடம் வீடியோ ஆதாரமே உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 700 800 ரூபாய் ஊதியம் கிடைத்தது, இந்த திமுக ஆட்சியில் 150 ரூபாய்தான் கிடைக்கிறது என்றார்கள். நீங்கள் புள்ளிவிவரம் சொல்கிறீகள் வெளியே வந்து நாட்டு மக்களைப் பாருங்கள் மக்கள் கஷ்டத்தை பார்த்து தெரிந்து பேசுங்கள் ஸ்டாலின்
அந்தக் காலத்தில் மன்னர் அமைச்சர்களைப் பார்த்து, 'நாடு எப்படி இருக்கிறது?' என்று கேட்பார் உடனே அவர்கள், "நாடு சுபிட்சமா இருக்கிறது. மும்மாரி மழை பெய்கிறது' என்று பொய் சொல்வார்கள். அப்படி சொல்வதையே நம் முதல்வர் நம்பிக்கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. விலை குறைப்பதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்தது..? இதே அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் அமைத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவுத்துறை மூலமாக எங்க விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தோம். அண்டை மாநிலத்தில் இருந்தும் கூட வாங்கி வந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்தோம். அப்படி ஏதாவது இ ஆட்சியில் செய்தார்களா? இப்போது கட்டுமானப் பொருட்களின் விலைய உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம்.
அதிமுக ஆட்சியில் பொங்கல் அன்று பொங்கல் தொகுப்பு, 2500 ரூபாய் கொடுத்தோம். திமுக ஒழுகிற வெல்லம் கொடுத்தனர், திருவண்ணாமலையில் 2 டன் கெட்டுப்போன வெல்லம் வைத்திருந்தனர். திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அவற்றில் 98% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை 150நாளாக உயர்த்தவில்லை, ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை, கேஸ்மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மாணவர் கல்விக் கடன் ரத்து என்றெல்லாம் ஏராளமான திட்டங்களைச் சொல்லி, ஏமாற்றி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சியில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். நலன காக்கும் ஸ்டாலின் என்று இப்போதுதான் மக்களை பற்றி சிந்திக்கிறார். பெயர் வைப்பதில் தான் அவர் பிரபலம். பெயர் வைப்பதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார். அதுதான் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழு ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் அமைத்தோம். இப்படி அதிமுக ஆட்சியின் திட்டத்துக்குப் பெயர் மட்டும் மாற்றிவிடுகிறார்
அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அவர்களில் 2818பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். திமுக ஆட்சியில் வேட்டி, சேலை கொடுப்பதில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேட்டி, சேலை உரிய நேரத்தில் கொடுப்போம். தீபாவளி அன்று பெண்களுக்கு சேலை கொடுப்போம். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா பொருள் கொடுத்தோம், விலையில்லா உணவு கொடுத்தோம். மேலும் மாணவர்கள் நலன் கருதி ஆல்பாஸ் போட்டோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம்
அதிமுக ஆட்சியில் நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்கிறார் ஸ்டாலின் இந்த சாத்தூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதை மட்டும் சொல்கிறேன், சாத்தூரில் அதிநவீன மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம். கல்லூரி கட்டிடம், வைப்பாற்றில் தடுப்பணை, பாலம், குடிநீர் திட்டம், 520 கோடியில் விருதுநகர் சாத்தூர் அருப்புக்கோட்டை தாமிரபரணி நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம். இந்த நான்காண்டுகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம். சாத்தார் வைப்பாற்றில் சாக்கரை கலக்காத வண்ணம், 50 கோடி மதிப்பீட்டில் பாதா சாக்கடை திட்டம் கொண்டுவந்தோம். கோட்டாட்சியர் அலுவலகம், அதிநவ.... மின் விளக்குகள், தரமான சாலைகள், ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனி நீர்த்தேக்கம் அமைத்தோம்" என்று தெரிவித்தார்.
இப்போது நீங்கள் இருக்கன்குடி அணை, வெம்பக்கோட்டை அணை தூர் வாரவேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சியில் நிச்சயம் தூர்வாரப்படும். சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கேட்டுள்ளீர்கள். அதுவும் ஆட்சி அமைந்ததும் அமைக்கப்படும். ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். உங்கள் மற்ற கோரிக்கைகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ள மெளனம் சாதிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் இபிஎஸ் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அச்சக உரிமையாளர்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள், மற்றும் வணிகர் சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளிநாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதியாகி அரசுக்கு வருமானம் வருகிறது ஒரு சிலர் பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த காரணத்தால்தான் இந்த பிரச்சினை வெடித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அரசாங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்படும் நிலை உள்ளது இந்த வழக்கு நடக்கும்போதே இதற்கு தீர்வுகாண அதிமுக ஆட்சியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி, நீதிமன்றத்தில் முத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைத்தோம்.
இருந்தாலும் தீபாவளி காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் மாசுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுநல வழக்கை போட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. நம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்படும் நிலைகளை எடுத்துச் சொல்லித்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.
அதிமுகவைப் பொறுத்த வரையில், எல்லா தொழிலுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் எடுத்துச் சொல்வோம். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் உங்கள் பிரச்னைகளை சொல்லி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் பட்டாசு தொழிலாளர்கள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசியில் 10 கோடி ரூபாயில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையிலும் இது தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், காமராஜ் கே டி ராஜேந்திரபாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
- இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று ராஜபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "உங்களுக்கு (திமுக) கூட்டணி வலிமையாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள்தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது. மக்களிடத்தில் நீங்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களது கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை
50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா? ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில், விசைத்தறிகூட அதிபர். இவரது மகள் நாக அட்சயா (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வழக்கம்போல் நட்புடன் தொடங்கிய இவர்களின் பழக்கம் முதலில் நண்பர்களாக தொடங்கி, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. நாக அட்சயாவை மனதார காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் லிவின் வலைதள பதிவில் கூறியுள்ளார்.
வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து முதலில் தயங்கிய அவர் பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு செல்ல நாக அட்சயா முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
இதற்கிடையே நாகஅட்சயாவிடம், அவரது வலைதள காதலன் லிவின், தற்போது நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் தனியாக இல்லை என்பதால் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய நாகஅட்சயா காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாகஅட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே காதலன் லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாகஅட்சயா மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே, லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், லிவின் வருகைக்காக காத்திருந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் அதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அது போன்ற நடவடிக்கைகளில் ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த போதிலும், தொடர்ந்து பலர் பணத்தையும், பொருளையும் இழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி களை கட்டி உள்ளது. அதிக தேவை இருப்பதால் அந்த ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.
இதனை சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெம்பக்கோட்டை பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து பட்டாசுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வெம்பக்கோட்டை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பசும்பொன்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் தாயில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இரண்டு இடத்திலும் சிவகாசி மணி நகரை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், சேகரித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.
அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதைத்தனர். இந்த சோதனையில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கட்டிட உரிமையாளர்கள் ராஜசேகர், பால முருகன் மற்றும் வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
- ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டுத்தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள கள்ளிச்சுனை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களுக்கு தீ பரவியது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப் பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள மணிக்கட்டி என்ற இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த தீயில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.
தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
- என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது.
- கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்கிறார். அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமாகிய கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். தனிமை சிறையில் தவித்தேன். ஆனாலும் நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது. என்னைத்தான் அழிக்க நினைத்தார்கள்.
கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். யாரிடமாவது நான் வேலைக்காக பணம் வாங்கியதாக வரலாறு உண்டா? எடப்பாடியாரின் பிரசார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பேன். சிவகாசி என்னுடைய மண். யார் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார்.
- தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
சிவகாசி:
காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாகவும், அத்தாட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கின்றனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
ராமேஸ்வரத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகின்ற வகையில், என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார். ஆகவே அவரை வாழ்த்துவது அவரை வரவேற்பது தமிழருடைய கடமை உரிமை.
சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரவேற்றது போற்றக்கூடியதாகும். அவர் ஒரு அற்புதமான பாராளுமன்ற உறுப்பினர்.
அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற பெருமையையும், புகழையும் பிரதமர் மோடியும் வைத்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டது சிறப்புக்குறியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை.
- அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது.
- அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
சாத்தூர்:
உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது. ஏன் என்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மாரியம்மன் கோவில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது. இந்த மாதத்தில் தென் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாதம் முழுவதும் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் குழுவாக கோவிலில் அம்மன் பாடல்கள் பாடி கையில் வேப்பிலையுடன் ஆடிக் கொண்டு கோவிலிலை வலம் வந்தனர். மேலும் இந்த கோவிலுக்கு சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி அம்மனை வணங்கினர்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குமிடம், கழிவறை குளியலறை வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சார்பில் பரம்பரை அறங்காவலர் குமு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.






