என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடைகள், குடோன்கள் உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்படும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் வாகன சோதனை நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

    • 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.
    • நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழி லாளர்களுக்கு தினக்கூலியாக மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு தொகை வழங்க அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிற தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.725 வழங்க வேண்டும். ஆனால் ரூ.534 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.

    இதனால் நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும், 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று காலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் -காவலாளிகள் உட்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவருக்கு சொந்தமான நூல் மில் சேரன் நகர் பகுதியில் உள்ளது. இந்த மில் 2 ஷிப்டுகளாக இயங்கி வருகிறது. 60 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென பில்டர் பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து வெள்ள கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் காங்கயத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

    மேலும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • தங்கராஜ் பிரபல வங்கியில், வங்கிக்கணக்கு வைத்துள்ளார்.
    • வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் தங்கராஜ். தனியார் நிதி நிறுவன உரிமையாளர். இவர் பிரபல வங்கியில், வங்கிக்கணக்கு வைத்துள்ளார். அவருக்கு அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து, வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ பெயர் உள்ளிட்டவையுடன் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

    அதில், உங்களது வங்கி கணக்கு கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும். இன்று கடைசிநாள். அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும். உடனடியாக கே.ஒய்.சி. அப்டேட் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வங்கியில் இருந்து தான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி தங்கராஜ், வாட்ஸ்அப்பில் வந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர், பிறந்த தேதியை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து 4 பரிவர்த்தனைகளில் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 799 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வங்கியின் பெயரில் வாட்ஸ்அப் அல்லது வேறு வகையில் ரிவார்ட் பாயிண்ட் செய்ய கடைசி நாள் என்றோ அல்லது வங்கி கணக்கு கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்ய சொல்லியோ வரும் செயலிகளை பதிவிறக்கம் செய்தால் உங்களது வங்கிக்கணக்கில் உங்கள் அனுமதியில்லாமல் மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். எனவே வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

    • கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர்.
    • சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர். நேற்று மாவட்ட சிறையில் கைதிகளின் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதில் விசாரணை கைதியாக இருந்த சூர்யாவை காணவில்லை. இதையடுத்து போலீசார் சிறை வளாகம் முழுவதும் தேடினார்கள். அப்போது அவர் சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சூர்யா பச்சை நிற முழுக்கை டி-சர்ட் மற்றும் வெள்ளை நிற லுங்கி அணிந்திருந்தார். வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பிளேட் வைத்துள்ளதால் நொண்டி, நொண்டி நடந்து செல்வார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சூர்யாவின் உருவ படத்தை பதிவிட்டு தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு சமூக வலைதளங்களிலும் மாநகர போலீசார் பதிவிட்டுள்ளனர்.

    மாநகரில் சோதனை சாவடிகள் மற்றும் அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவை மத்திய சிறை அதிகாரிகள், திருப்பூர் மாவட்ட சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாயக்கழிவு ரசாயனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அங்கு வானுயர கரும்புகை எழுந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் குளத்துப்பாளையம் மண்ணரையில், சாய ஆலைகளில் இருந்து பெறப்படும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்து, அதன் கழிவை திடப்பொருளாக மாற்றி மீண்டும் தண்ணீரை பயன்படுத்தும் வகையிலான பொது சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ரியாக்டர் எந்திரத்தல் திடீரென தீ பற்றி கொளுந்து விட்டு எரிய துவங்கியது. மேலும் பயன்படுத்தாத குழாய்களில் இருந்து வெளியேறிய வாயு காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்தது. சாயக்கழிவு ரசாயனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அங்கு வானுயர கரும்புகை எழுந்தது.


    தொழிலாளர்கள் சுத்திகரிப்பு ஆலையை விட்டு வெளியேறிய நிலையில் புகை மூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 6 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சாயக்கழிவுகளை தரம் பிரித்து தரும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எச்.பி., ரக குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மணிய காரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் கொரியர் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை கொரியர் நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதையடுத்து தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனே இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளியில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 5 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்தின் காரணமாக கொரியர் நிறுவன கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்காமல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நிட்டிங் , டைலரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் கொரியர் நிறுவனத்தில் இருந்த பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து சேதமாகின. இதனைப்பார்த்து ஊழியர்கள் கண்ணீர் சிந்தினர். தீ விபத்தால் அப்பகுதியில் 50 அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் மேகமூட்டம் போல் காணப்பட்டது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் திருப்பூரில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இந்தநிலையில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • சிறுவனை கதவை பூட்டி பலமாக தாக்கி உள்ளார்.
    • காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சத்தியவர்ஷன் (வயது 9). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் சிறுவன் சத்தியவர்ஷனை அழைத்து, காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது. அப்போது சத்தியவர்ஷன் நான் எழுதவில்லை எனக் கூறிய நிலையில், அதைக்கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டி சத்தியவர்ஷனை பலமாக தாக்கி உள்ளார்.

    இதற்கிடையே சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். அப்போது மோகன் வீட்டில் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே, உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய 2 பேர் மோகன் வீட்டிற்குள் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், கத்தியால் செல்வராஜ், கருப்பாத்தாளை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது.
    • இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏறுமுகத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதம் 13.8 சதவீதமும், ஆகஸ்டு மாதம் 13.4 சதவீதமும், செப்டம்பர் மாதம் 18.4 சதவீதமும், அக்டோபர் மாதம் 36.4 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு முக்கிய பங்காற்றி வருகிறது. திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து வருவது உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.8 ஆயிரத்து 506 கோடியே 20 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 11.2 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    இதுபோல் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.82 ஆயிரத்து 509 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் அதிகரித்துள்ளதால் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுபோல் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 ஆயிரத்து 247 டாலர் மதிப்பில் வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7 ஆயிரத்து 817 டாலர் நடந்துள்ளது. அதன்படி 11.6 சதவீதம் ஏற்றுமதி அதிரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி. தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் கூறும்போது, 'ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ள நாடுகளிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவது நேர்மறையான எண்ணத்தை உற்பத்தியாளர்களிடம் விதைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி என்ற வர்த்தக இலக்கை நிச்சயம் எட்டும்' என்றார்.

    • விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம்.
    • ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி.

    திருப்பூர்:

    தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மாநிலத்தலைவர் சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட 100 விவசாயிகள் இன்று காலை குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள், பா.ஜ.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக அடக்கு முறையை கையாள்கிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.எஸ்.பி. கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லே வாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
    • சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கொலையாளிகளை பிடிக்க 16 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்தனர். 2011 ம் ஆண்டு முதல் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரித்தனர்.

    சென்னிமலை ஆதாயக்கொலையில் தொடர்புடையவர்களின் நெருங்கியவர்கள் யாரேனும் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 856 பேரின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி., கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அந்த ஊர்களில் வழக்கு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    உறவினர்கள் போல் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ரோட்டோரம் கம்பளி, போர்வை விற்பனை செய்பவர்களிடம் கைரேகை ஆதார் விபரங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலை நடந்து 18 நாட்களை கடந்தும் இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் கொலையாளிகள் எளிதில் தப்பியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க கோவை சரக டி.ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடமாநில கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தனிப்படையை சேர்ந்த ஒரு குழுவினர் வடமாநிலங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கலூர் சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ் ( 45) என்பவர் குடும்பத்தோடு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    படுகொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் எனது தந்தை சுப்பன் வேலை செய்து வந்ததால், நான் அடிக்கடி மருந்து அடிப்பது உள்ளிட்ட வேலைக்கு சென்று வந்தேன். இந்த கொலை சம்பவம் தொடர்பாக என்னை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் அடிக்கடி அழைத்து சென்று, நான் தான் காரணம் எனக்கூறி துன்புறுத்துகிறார்கள். வாக்குமூலம் கொடுக்கவும் மிரட்டி நிர்ப்பந்திக்கிறார்கள்.

    மேலும் எனது மனைவி, அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். எனவே எங்களை மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    ×