search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property documents"

    • சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
    • திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கோவத்த குடியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி அன்னபூரணி (வயது 75).

    இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மணச்சநல்லூரில் இருந்து டவுன் பஸ்ஸில் சென்றார்.

    சமயபுரம் சந்தை பேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் அவர் கீழே இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் உடனடியாக பஸ் நிறுத்த த்தில் வைக்கப்பட்டிருந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேர்முக தொடர்பு எண்ணுக்கு சம்பவம் குறித்து தெரிவித்தார்.

    அப்போது, தான் வந்த பஸ்ஸின் அருகில் சந்தேகப்ப டும்படி இரு பெண்கள் நின்றதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

    பின்னர் சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரு பெண்களை தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களின் போட்டோக்களை நவீன அப்ளிகேஷன் மூலமாக சோதனை செய்தபோது திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (43 ), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த ரேகா என்கிற கல்பனா(43) என்பது தெரியவந்தது.

    பின்னர் காளியம்மாளின் செல்போனை சோதனை செய்தபோது அவர்கள் ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி அன்ன பூரணியின் செயினை திருடியவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

    இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கோவை, பழனி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், பெங்களூர், மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, சித்தூர், காலகஸ்தி, திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ரேகா மற்றும் காளியம்மாளிடம் போலீசார் அன்னபூரணியிடம் திருடிய ஒன்றரை பவுன் செயின் மற்றும் வேறு பெண்களிடம் திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைதான இந்த பெண்கள் கடந்த 15 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து பல்வேறு இடங்களில் நகை பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பது அறிந்து போலீசாருக்கு தலை சுத்தியது.

    பின்னர் அவர்களிடமி ருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து பத்திர ஆவணங்கள் 2 செல்போன்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் காளியம்மாள் மற்றும் ரேகா ஆகியோரை திருச்சி ஜூடிசியல் மாஜி ஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறும்போது,

    வழக்கமாக திருடும் நகைகளை அந்த பெண்கள் உடனடியாக விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களிடம் கொடுத்து நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இவ்வாறு ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் காளியம்மாள் தனது மகளுக்கு சமயபுரத்தில் உள்ள மண்டபத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ள தகவலும் கிடைத்துள்ளது.

    காளியம்மாள் மற்றும் ரேகாவுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த சரத்குமார் மற்றும் சரவணன் இடம் விசாரணை நடத்த உள்ளோம்.

    அதில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    ×