என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மந்திரி வாய்க்காலில் அவ்வப்போது சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்திய மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள், லட்சுமி நகரில் இயங்கிய ஒரு முறைகேடு பட்டன் - ஜிப் நிறுவனத்தை கண்டுபிடித்து, மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கடந்த 10-ந்தேதி, வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை, சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது தெரிய வந்தது. இதனால் டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்கள், பேக்கிங் பிரிவு மற்றும் ஆய்வகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் அருகே மந்திரி வாய்க்காலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. மேலும் நொய்யல் ஆற்றில் கலந்தது.

    இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், நடத்திய ஆய்வில் கொங்கு மெயின் ரோடு, முத்துநகர் பகுதியில் 2 பிரின்டிங் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கியதும், சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனங்கள் இயங்கிய வாடகை கட்டிடங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
    • திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தந்தையை இழந்த 16 வயதான சிறுமி அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உறவுக்காரர் ஒருவரை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முடிவு செய்தார். அதை விரும்பாத அந்த சிறுமி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார்.

    ஆனால் எவ்வளவோ மறுத்தும் கண்டுகொள்ளாமல் உறவினருடான திருமண வேலைகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் தவித்த அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு பேசி தன் நிலையை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெள்ளகோவில் விரைந்து சென்றனர்.

    பின்னர் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது சட்டப்படி வயது வராமல் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அந்த சிறுமியுடன் குடும்பத்தினரை திருப்பூர் அலுவலகத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பனியன் நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
    • கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன், குழந்தையுடன் திருப்பூர் அடுத்துள்ள தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்துள்ளனர்.

    பின்னர் அங்கு வேலை பிடிக்கவில்லை என்று அந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் செல்ல திருப்பூர் ரெயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ரெயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.

    அப்போது அவர்களிடம் அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம்(24), டானிஷ்(25) மற்றும் முர்சித் என்ற மூன்று வட மாநில இளைஞர்கள் நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது என கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவி மற்றும் குழந்தை தங்க இடம் இல்லாததை அறிந்த இந்த மூன்று பேரும் அந்த தம்பதியை அவர்கள் தங்கும் லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு உணவு தயார் செய்த இவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

    பின்னர் இவர்கள் ஆறு பேரும் ஒரே அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அக்கம்பக்கதினர் தூங்கிய உடன் நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்களும் கையில் கத்தியை வைத்து பெண்ணின் கணவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அந்தப் பெண்ணை கணவன் மற்றும் குழந்தை கண் முன்பே ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து அந்த பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். வெளியே வந்த அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் உடனே விரைந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர் பின்னர் அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, உயிர் பயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது.
    • தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.

    திருப்பூர்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இங்கு பல்வேறு நாடுகள் உருவாகும்.

    தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு நிதியில் பெரும் வருவாயை கொடுப்பது தமிழ்நாடும் ஒன்று.

    மும்மொழிக் கொள்கை காரணமாக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்காதது வரவேற்கத்தக்கது.

    மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.

    மத்திய அரசை எதிர்த்தால் ED, IT என விசாரணை அமைப்புகள் ரெய்டு வரும் என பயப்படுகின்றனர். என் வீட்டிற்கு ED, IT போன்றவை ரெய்டு வரமுடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமில்லை.

    கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதகம் வரும் போது ஆட்சியாளர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்றார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
    • சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில் அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், கலெக்டா் கிறிஸ்துராஜ், வருவாய் அதிகாரி கார்த்திகேயன், 4 -வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் காளையாக அலகுமலை கோவில் காளை களம் இறங்கியது. இவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டன. இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.


    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, வெள்ளிக்காசு, குடம், ஹாட்பாக்ஸ், சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இருபுறத்திலும் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

    வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் ஓடு தளத்தை சுற்றிய போதெல்லாம், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

    காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, உணவு உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    • தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
    • கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கொங்கல்நகரம் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.

    தமிழகம் முழுவதும் கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.

    முதற்கட்டமாக கொங்கல்நகரம் அருகிலுள்ள சோ.அம்மாபட்டி பகுதியில் பழங்காலத்தை சேர்ந்த வாழ்விட பகுதி தேர்வு செய்யப்பட்டு அகழாய்வு செய்ததில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், காதணி மற்றும் இதர அணிகலன்கள் கண்டறிய ப்பட்டன.

    நவம்பரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும், தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது 2-ம் கட்ட பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    இப்பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்களை கொண்டு உடுமலையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

    • புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவர்களை சில வாலிபர்கள் தாக்குவதாக கிடைத்த தகவலின் பேரில் மாணிக்கம் அங்கு சென்றார். அப்போது, மாணவர்களை சிலர் அடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த இளைஞர்கள் ஆசிரியர் மாணிக்கத்தையும் தாக்கினர்.

    இதில் காயமடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், சுமார் 20க்கும் மேற்பட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியரை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனால் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.
    • நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் விசைத்தறிக்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது:-


    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், மாநில, மாவட்ட அரசு நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சோதனையின் போது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 ஊசிகள் இருந்தது.
    • கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிலர் போதை ஊசி மூலம் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அதில் ஒரு அறையில் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 சிரஞ்சுகள் (ஊசிகள்) இருந்தது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 43), மதுரை சி.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த அசோக்(32), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜவேலு(29), திருப்பூர் வீரபாண்டி பிாிவு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23), தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பதும் இவர்கள் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 21 சிரஞ்சுகள் மற்றும் 5 கிராம் மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தனர்.

    விலை உயர்ந்த இந்த போதை பொருள் இவர்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது, போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்-யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான் (வயது 37), அவரது மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.

    முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் கணித ஆசிரியர் சுந்தர வடிவேல் 7-ம் வகுப்பு மாணவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடந்து பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனா். இந்த நிலையில் அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி உதயக்குமார் உத்தரவிட்டுள்ளார். 

    • தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம்.
    • கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    உடுமலை:

    தமிழகத்தில் மொத்தமாக 4.42 லட்சம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னை சாகுபடியில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு தீர்வாக தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டியும், கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் தமிழ்நாடு கள் இயக்கம், இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து திண்ணைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

    தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளாததால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எவ்வித தீங்கும் இல்லாத கள் விற்பனையால் டாஸ்மாக் வருவாய் பாதிக்கும் என்பதால் அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.

    ×