search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "noyyal river"

    • விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    காங்கயம்:

    மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 172 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணை அருகே கத்தாங்கண்ணி, வயக்காட்டுப்புதூர், கணபதிபாளையம், வெங்கலப்பாளையம உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமமக்கள் போதிய சாலை வசதி இல்லாததால் பரிசல் மூலம் நொய்யல் ஆற்றை கடந்து சென்னிமலை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாகியும் சாலை வசதி மற்றும் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் ஆற்றின் இரு கரையிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டியுள்ளனர். பரிசலில் ஏறியபின் அந்த கம்பிகளை பிடித்து கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    சாலை வழியாக சென்றால் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் வெங்கலப்பாளையம் பகுதியில் பரிசலில் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு குறையும் என்பதால் இவ்வாறு பரிசலை பயன்படுத்தி ஆற்றை கடப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் 2 ஆயிரம் கன அடி வரை சென்று கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் நொய்யல் ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, பரிசலில் செல்ல முடியாத நிலையில் இன்றும் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ஊத்துக்குளி, சென்னிமலை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு பாலம் அமைக்க கோரி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

    • சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5மணி நேரம் போராடி கயிறு மூலம் 4 வாலிபர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எதற்காக நொய்யல் ஆற்றுக்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது.
    • சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    திருப்பூர்:

    ஜம்முகாஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் இந்திய அளவிலான மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிற ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த பணிகள் மற்றும் ஆறுகளை பராமரிக்கும் பணிகள் குறித்த கலந்தாய்வுகூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகள் குறித்தும், நொய்யல் ஆறு பராமரிப்பு பணிகள் குறித்தும், அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகாரிகள் குழுவினர் பாராட்டு தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    இது குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது. கோவையில் இருந்து தொடங்கும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொழில்கள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது.

    குறிப்பாக திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருப்பதால் நொய்யல் ஆற்றில் பனியன் நிறுவன கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுபோல் நொய்யல் ஆற்றை சீரமைக்கவும், தூர்வாரவும் செய்துள்ளோம். இந்த பணிகள் காரணமாக நொய்யல் ஆறு தற்போது சுத்தமாக உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.110 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூரை விவரிக்கும் ஓவியங்களும் கரைகளில் வரையப்பட்டுள்ளன. நொய்யல் ஆறு பகுதியில் பார்க் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் மீதமுள்ள 25 சதவீத பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அப்போது திருப்பூர் நொய்யல் ஆறு புதுப்பொலிவுடனும், அழகாகவும் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் நடந்த கருத்தரங்கில் இது குறித்து தெரிவித்த போது பலரும்பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    இது நமது திருப்பூர் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். திருப்பூர் மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு பராமரிப்பு மட்டுமின்றி பல பணிகளுக்கும் திருப்பூர் மாநகராட்சி அனைத்து மாநகராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.
    • வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்த விவசாயிகள் தண்ணீரை வணங்கி வரவேற்றனர்.

    வடவள்ளி,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். இந்த கால கட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    சில நாட்கள் பெய்த மழை, அதன் பின்னர் பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். பயிர்களை பயிரிடுவதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    கோவை நொய்யல் ஆற்றில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி வறண்டே காணப்பட்டது.

    அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.

    தண்ணீர் பாய்ந்தோடிய ஆற்றில் இப்படி ஷவர் வைத்து, அதில், கை, கால்களை நனைத்து சென்ற பக்தர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்ட பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சிறுவாணி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

    மேலும் தொடர் மழையால் கோவை குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி அணைக்கு நேற்று மதியம் முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதுவரை வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்ததும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சந்தோஷம் அடைந்தனர்.

    விவசாயிகள் ஓடி சென்று அணைக்கு வந்த நீரை தொட்டு, கைகூப்பி வணங்கி வரவேற்றனர். சிலர் தடுப்பணையில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    தற்போது கீழ்சித்தரை சாவடி கிளை வாய்க்காலில் இருந்து சுண்டப்பாளையம், வேடபட்டி வழியே வாய்க்காலில் பாசனத்திற்கான நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வெங்காயம், தாக்காளி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    • இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர்.

    சூலூர்

    கோவை மாவட்டத்தின் முக்கிய நதிகளில் நொய்யல் ஆறு குறிப்பிடத்தக்கது. இது கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் வழியாக செல்கிறது. அதற்கு கோவையில் உள்ள சூலூர் பட்டணம், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் 2 தடுப்பணைகள் உள்ளன. நொய்யல் ஆற்றில் கழிவு நீர் அதிகம் கலக்கிறது. ஆகாயத்தாமரைகளும் நிறைந்து உள்ளது. எனவே நொய்யல் ஆற்றின் மேற்கண்ட 2 தடுப்பணைகளில் இருந்தும் வெளியேறும் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி பெருகி பறந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் கோவையில் உள்ள சூலூர், ராவத்தூர் தடுப்பணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக நுரை அதிகமாக செல்கிறது. இதனால் ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும், நுரை கலந்த நீர் உடம்பில் பட்டால், அலர்ஜி- அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது.
    • நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இதில் ஜம்மனை ஓடை மங்கலம் ரோட்டிலும், சபரி ஓடை காங்கயம் ரோட்டிலும், சங்கிலிப்பள்ளம் தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோட்டிலும் கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேர்கிறது.

    தற்போது தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஓடைகள் வாயிலாக நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தற்போது மண் மேடுகளும், முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓடைகளை தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சங்கிலிப் பள்ளம் ஓடையில் நிரம்பியுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் எந்திர வாகனம் மூலம் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    • 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    திருப்பூர் :

    திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூா்பேட்டையைச் சோ்ந்த சகுந்தலா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்து விடுகின்றனா். இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சாா்க்காா் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.
    • நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக நொய்யல் ஆறு விளங்கி வந்தது. இந்தநிலையில் சில ஆண்டுகளாக பனியன் கம்பெனிகள் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.

    இதையடுத்து நொற்றல் ஆற்றை பாதுகாக்க கோரி சமூக ஆர்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர். மேலும் தமிழக அரசு, சுற்றுப்புற சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர். தமிழக அரசு சாய ஆலைகளில் இருந்து கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் தரைப்பாலம் அருகே இரண்டு புறத்திலும் இருந்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் கழிவு நீர் அருவி போல ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. இது நகரின் முக்கிய பகுதியாகும். மழைநீர் வெளியேறுவதற்காக தெருக்கள் மற்றும் வீதிகளில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சாயக்கழிவுகளை திறந்து விடுகின்றனர். பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் வீடுகள், ஓட்டல்களில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு கழிவு நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் கழிவுகளை வெளியேற்றாமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றுவது எந்த வகையில் சரியானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலை நீடித்தால் நொய்யல் ஆறு மிகவும் பாழடைய வாய்ப்புள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் , ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158 கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாய சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆற்று தண்ணீர் மாசு அடைந்த நிலையில் அதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

    தற்போது சுத்தகரிப்பு நிலையங்கள் மூலம் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாய சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்தகரிப்பு செய்து மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இதன் காரணமாக நொய்யல் ஆறு மீண்டும் சுத்தகரிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நடந்து முடிந்த பொங்கல் பண்டிகைக்காக நொய்யல் ஆற்றங்கரையோரம் தூய்மைப்படுத்தி வண்ண ஓவியங்கள் வரைந்து இருபுறமும் காங்கிரீட் தளங்கள் அமைத்து சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடியது.

    இந்நிலையில் திருப்பூர் மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சாய சலவை பட்டறையில் இருந்து சுத்தகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாய சலவை பட்டறையில் இருந்து வெளியேறும் சுத்தகரிக்கப்படாத சாய ஆலை நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    உடனடியாக இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையெனில் சாய ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு தண்ணீர் காரணமாக தண்ணீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து தண்ணீரில் உள்ள மீன்கள் மற்றும் அந்த தண்ணீரை பயன்படுத்தும் கால்நடைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது.
    • வெள்ளப்பெருக்கால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது.

    திருப்பூர்:

    கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ள நிலையில், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

    நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13ம் நூற்றாண்டுகளில் 45-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது. மீதமிருந்த குளங்கள் காணாமல் போயும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டும் உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது.

    கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டி.எம்.சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டி.எம்.சி. வரை மழைத்தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.

    ஏற்கனவே கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் குளங்கள் நிரப்பபட்டாலும், இன்னும் ஏராளமான தடுப்பணைகள் உடைக்கப்பட்டும், உடைந்தும் கிடக்கிறது.

    இவ்வாறு உடைக்கப்பட்ட தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. அந்த குளங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ளது.
    • கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

     திருப்பூர் :

    கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ள நிலையில், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

    நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13ம் நூற்றாண்டுகளில் 45 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது. மீதமிருந்த குளங்கள் காணாமல் போயும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டும் உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கு மூலம் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது. கடந்த 9ந் தேதி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரத்துப்பாளையம் அணைக்கு 4230 கன அடி நீர் வரத்து வந்தது. அதன் பின் படிப்படியாக நீர் வரத்து குறைந்து தற்போது 630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டிஎம்சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டிஎம்சி., வரை மழைத்தண்ணீர் காவிரியில் கலந்து வருகிறது. ஏற்கனவே கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் குளங்கள் நிரப்பபட்டாலும், இன்னும் ஏராளமான தடுப்பணைகள் உடைக்கப்பட்டும்,உடைந்தும் கிடக்கிறது.

    இவ்வாறு உடைக்கப்பட்ட தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. இவ்வாறு உடைந்த தடுப்பணைகள் பொதுப்பணித்துறை ஆவணங்களில் இருக்கிறதா என்பது கூட தெரியாத நிலையில், பயன்பாட்டில் இல்லாத தடுப்பணைகள் குறித்து அரசு ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள குளங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதுபோல் கொங்கு மண்டலமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாகவே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருப்பூர் வளர்மதி பாலம் பகுதிகளில் நின்று வெள்ளத்தை பலரும் பார்த்து செல்கிறார்கள். கரைபுரண்டு வெள்ளம் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோல் நொய்யல் ஆற்றில் கடந்த சில மாதங்களாகவே தூர்வாரும் பணிகள் நடந்ததால், எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெள்ளநீர் மாநகர் பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நொய்யல் ஆறு கோவையில் இருந்து தொடங்கி திருப்பூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளநீர் செல்லும் வகையில் இன்னும் கவனம் செலுத்தி தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கடைகோடி பகுதிகள் வரை முழுவதுமாக உள்ள விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைக்கும். அந்த பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பும் என்றனர்.

    ×