என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறிகள் போராட்டம்"

    • போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் இந்தியா முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகள், மற்றும் அமெரிக்க ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, ஆசியா நாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த தொழிலை நம்பி இந்தப்பகுதியில் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    தற்போது ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு நெசவு செய்யும் தொழில் கூடங்களுக்கு கூலி உயர்வு வழங்காத நிலையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழில் ஈடுபடக்கூடிய விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் இந்த தொழில் சார்ந்த மறைமுக தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கி விசைத்தறி கூடங்களை இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும் என தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கும் ஏற்று மதியாளர் மற்றும் விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி கூட அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் மீண்டும் இப்பகுதியில் பேண்டேஜ் தொழில் புத்துயிர் பெறும் என சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.

    • நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
    • உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    மேலும் திருப்பூர்-கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை 20 நாட்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 20 நாட்களுக்கு இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடி அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விசைத்தறிகளில் பணியாற்றும் 3லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே விசைத்தறி காடா ஜவுளி உற்பத்தி தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை.

    தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர். உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது தீபாவளி பண்டிகை போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், இன்று முதல் 25-ந்தேதி வரை திருப்பூர், கோவை மாவட்டத்தில் காடா ஜவுளி துணி உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.
    • நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் விசைத்தறிக்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது:-


    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், மாநில, மாவட்ட அரசு நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×