என் மலர்
தூத்துக்குடி
- சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
- ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த 'கியூ' பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ' பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.
- கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மாறி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269 ஆகும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து உள்ளனர்.
இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு, ஊரை காலி செய்து வெளியூருக்கு சென்று குடியேறிவிட்டனர். ஆனால் கந்தசாமி (வயது 75) என்பவர் மட்டும் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.
மீனாட்சிபுரம் ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும். ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த கந்தசாமி கடந்த 26-ந்தேதி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து கந்தசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது இறப்பு, இந்த ஊரை பூர்வீகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளனர். அந்த கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மீனாட்சிபுரம் மாறி உள்ளது.
- வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தியதும் கடத்துவதற்காக வேனில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே தருவைகுளம் கடற்கரை வழியாக பீடி இலை மூடைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை தருவைகுளம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தருவைகுளம் கடற்கரைக்கு செல்லும் உப்பளப்பாதையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் லோடு ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தியதும் கடத்துவதற்காக வேனில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை இலைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று காலையில் தனது வீடு அருகே மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டினார்.
- திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள சீர்காட்சி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 60). இவர் இன்று காலையில் தனது வீடு அருகே மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது சுமார் 1½ அடி ஆழத்தில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை தென்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
- நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக படகுமூலம் பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ குமார், இசக்கிமுத்து, காவலர் பழனிபாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு வேம்பார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அக்கறை என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர், பிடிபட்ட நபர்கள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதாக முயன்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து எஸ் நிரோன் என்ற நாட்டுப் படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியை சேர்ந்த கெனிஸ்டன்(வயது29), ராம்தாஸ்நகர் பொன்சிஸ் ராஜா(37), சிலுவைபட்டி பனிமயகார்வின்(19), கருப்பசாமிநகர் மாதவன்(21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் மணி.
இவர் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மல்லிகா. இவர் கழுகுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கோவையில் படித்து வருகிறார். தற்போது கோடைவிடுமுறை என்பதால் மணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன், கோவையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் மணி வீட்டில் பணிபுரிக்கூடிய பணிப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் மணிக்கும், நாலட்டின்புதூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் மணி மற்றும் அவரது மனைவி வந்த பிறகு தான் எவ்வளவு நகைகள் திருட்டு போய் உள்ளது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் மணி வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பதால், அப்பகுதியில் இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலையில் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குறிச்செல்வி, டாக்டர் சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஸ், மாநில இணைச் செயலாளர்கள் செல்வகுமார், இசக்கி முத்து, ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் பஜார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணி ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், வரதராஜா ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், அச்சுத ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவபால ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபரர் ஆதித்தன், எஸ்.எஸ் ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன்,ராமானந்த ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறார். அங்கு முக்கிய நிகழ்ச்சியான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது.
தொடர்ந்து மகா தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

வைகாசி விசாகத் திருவிழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்து கடலில் புனித நீராடி அரோகரா கோஷம் முழங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் விண்ணதிர அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.
- இன்று முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
- ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினமான நாளை நடைபெறும் விசாக திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஒரு வருடம் அதாவது 12 மாதம், மாத கடைசியில் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் நாளை நடைபெறும் விசாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்தவாறு உள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15மணிக்கு இராக் கால அபிஷேகமும் நடக்கிறது.
விசாக திருவிழாவான நாளை (புதன்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக் கால அபிஷேகம் நடக்கிறது.
நாளை மறுநாள் (வியாழக் கிழமை) வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தரேச விஸ்வா. இவரது வீட்டில் இருந்த 5 கோழிகள் ஒன்றின் பின் ஒன்றாக காணாமல் போனது.
இதனைத் தேடி அவரது வீட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள வாய்க்கால் கரை ஓரமாக சென்றுள்ளார். அப்போது வயல்வெளி பகுதியில் விலங்குகள் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி தப்ப முடியாத நிலையில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்ததை பார்த்தார்.
இந்த மலைப்பாம்பு தான் அவரது வீட்டில் இருந்த கோழிகளை தின்றுவிட்டு வேறு கோழி கிடைக்காததால் இரை தேடி வயல்வெளி பக்கம் வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாம்பை பார்க்க குவிந்தனர். குலையன்கரிசல் ஊர் பகுதியில் இந்த மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார்(வயது 70). இவர் நாகை ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சுகுமார் கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்று உள்ளார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இவரது வீட்டில் தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த அமுதா என்பவர் வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல அவர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை கதவை திறக்க அமுதா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் சுகுமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை அறிந்த போலீசார், சென்னையில் உள்ள சுகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் குறித்து கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் சீனோ வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த நாய் சுகுமாரின் வீடு அமைந்துள்ள தெருவின் முனை பகுதி வரை ஓடிச்சென்று திரும்பிவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவரது வீட்டின் முன்பக்க சுவர் ஏறி குதித்து உள்ள சென்ற மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
சுகுமார் வந்த பின்பு தான் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பணம் எவ்வளவு இருந்தது என்பது முழுமையாக தெரியவரும்.
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் திருட்டு போன வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.
திருச்செந்தூர்:
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.
விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.
மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






