என் மலர்
தூத்துக்குடி
- திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
- கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டு கடற்கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் வரை 7 அடியில் இருந்து 10 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அரிப்பை தடுத்து கோவிலை பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஆகியோர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலையொட்டி உள்ள கடற்கரை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத நிலை உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடற்கரை குறைந்து கொண்டே வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.
இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கடற்கரை அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்கள் மூலமாக ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையாளர் சுகுமாரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, தலைமை பொறியாளர் பெரியசாமி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையாளர் அன்புமணி, கோவில் பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தாசில்தார் பாலசுந்தரம், ஐ.ஐ.டி. பேராசிரியர் சன்னாசிராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா சற்குணம், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இன்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் மினி லாரியில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினர்.
அந்த வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
- திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அவர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர்.
இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி நடராஜர், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் தனித்தனி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கழி படைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர எல்லையில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சன்னதி தெரு, பட்டர் குளம் தெரு, அக்ரகாரம், ரதவீதிதளில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கோ அல்லது அத்தியாவசிய தேவைக்கோ வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ராணிமகராஜபுரத்தில் உள்ளது. திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். எனவே வரும் காலங்களில் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு முன்பாக பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வந்து வழிபாடு செய்வர். தற்போது சர்ப்பகாவடி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
- கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கும் அதிகமாக அரித்து சென்றது. அங்கு பாறைகள் தென்படுவதால் அவற்றில் நின்று புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் இடையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் வடக்கூரை அடுத்த காட்டு பகுதியில் கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை கடல் அலைகள் வாரி சுருட்டின. சரிந்த சில பனை மரங்களை கடல் அலைகள் இழுத்து சென்றன. மேலும் சில பனை மரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.
குலசேகரன்பட்டினத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இவைகளும் கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
- 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.
சென்னை:
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் (06570) வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.
- அறுபடை வீடுகளுக்கும் ஒரே நாளில் செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எஸ்கே 23 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.
சிவகார்த்திகேயன் தரிசனம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசியதாவது:-
கோவிலுக்கு முன்பே வர வேண்டியது. வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தாதால் என்னால் வர இயலவில்லை. அடுத்தடுத்து அறுபடை வீடுகளுக்கும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மேலும் அமரன் பட வெற்றிக்கு நன்றி செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் விடுமுறை நாட்களில் அதிகமாக கூட்டம் காணப்படும். தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக அலகு குத்தியும் , காவடி எடுத்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆக இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் விரதத்தை தொடங்குவதாக இருந்தாலும், கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது
போக்குவரத்து நெருக்கடியால் உள்ளுர் பொதுமக்கள் ரதவீதிதளில் நடமாட முடியாமல் திணறி வருகின்றனர்.
- பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
- திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று “செல்பி” எடுத்து மகிழ்கின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
கடந்த 31-ந்தேதி அமாவாசையாக இருந்ததால் 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் இருப்புபாதை, வினோதம் பாலம் போன்ற கல்சாலைகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அந்த சாலை நீண்ட தூரத்திற்கு காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, இது பண்டைய கால மன்னர்கள் ஆட்சி செய்தபோது திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள துறைமுகத்திற்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சாலை அல்லது ஆங்கிலேயர் காலத்தில் கடற்கரை வழியாக போடப்பட்ட ரெயில் இருப்புபாதையாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மதுரைக்கு தெற்கே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது குலசேகரபட்டிணம் ஒரு துறைமுகமாக இருந்து இங்கிருந்து ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முத்து, உப்பு, போன்றவை ஏற்றுமதி செய்ய கப்பல் போக்குவரத்து இருந்துள்ளதாக இந்த பகுதியில் உள்ள கோவில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.
அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் துறைமுகம் இருந்ததாகவும், இந்த துறைமுகத்திற்கு திருச்செந்தூர் கடற்கரை வழியாக ரெயில் பாதை இருந்ததாகவும் அங்கு சீனி ஆலைகள் இருந்ததாகவும் ரெயிலில் பொருட்களை ஏற்றி வந்து கப்பல் வழியாக ஏற்றுமதி நடந்துள்ளது என கூறப்படுகிறது.
பின்னாளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து, துறைமுகம் காணாமல் போயிருக்கலாம் என தெரிகிறது.
அதற்கான தடயங்கள் தான் தற்போது கடல் உள்வாங்கிய போது கடற்கரை வழியாக குலசேகரன்பட்டினந்திற்கு ரெயில் பாதை அல்லது சாலையாக இருந்த அடையாளம் அதாவது சாலை போன்று காணப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வினோத பாதையை திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று "செல்பி" எடுத்து மகிழ்கின்றனர்.
- பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் மற்றும் பல்வேறு பொருட்களை அவ்வப் போது கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பெருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ் குமார், இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் நள்ளிரவில் வந்த லோடு வேனை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் வேனில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் போலீசார் சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 22 மூடை பீடி இலைகள் 10 மூடை கட்டிங் பீடி இலைகள், 8 மூட்டை பீடி பண்டல்கள் இருந்தது.
அதனை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்தும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
- கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநி லங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
அவ்வாறு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் அருகில் உள்ள கடலில் புனித நீராடி குடும்பத்தோடு சுவாமியை தரிசனம் செய்தது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
எப்போதும் நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு வண்ணத்தில் அலைகள் அதிகமாக காட்சியளிக்கிறது.

கடற்கரை பகுதிகளில் கருப்பு நிறங்கள் படிந்த மணல்கள் ஆங்காங்கே கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளன.
தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதால் ஒரு வாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும்.
அப்படி கடல் சீற்றம் ஏற்படும் நேரங்களில் கடலின் அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறி கடல் தண்ணீர் குழம்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படும். அதனால் தான் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு கரை அரிப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி வரை ஆழம் காணப்பட்டது. அந்த நிலைமை சற்று மாறி இன்று சுமார் 3 அடி அளவுக்கு அரிப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடற்கரையில் பேரிகாடு கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அனாலும் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.
- மதுரையில் 2 குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் செல்லத்துரை, சுரேஷ், அருண், செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் லிங்கம் பட்டியில் உள்ள அந்த வீட்டை மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர்.
அதில் அந்த வீட்டில் குற்றவாளிகள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களைப் பிடிக்க அந்த வீட்டுக்கு சென்றபோது வீட்டில் இருந்தவர்கள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கதவைத் திறக்க மறுத்துள்ளனர். கதவை உடைத்து அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் முயன்ற போது, திடீரென கதவை திறந்து கண்ணிமைக்கும் நொடியில் வீட்டில் இருந்து 3 பேர் தப்பி சென்றனர்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மதுரை புது மீனாட்சி நகரை சேர்ந்த அழகுராஜா என்ற கொட்டு ராஜா (வயது 29), மதுரை கீரை துறையை சேர்ந்த முனியசாமி (50) மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (28) என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அழகுராஜா மீது 3 கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளும், முனியசாமி மீது 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட 11 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தங்கராஜ் மீது 4 கஞ்சா வழக்குகளும் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், 15 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பிரபல ரவுடிகள் இங்கு ஏன் தங்கியிருந்தனர்? வேறு யாரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் 2 குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இதில், கோவில்பட்டியில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மதுரையில் தங்களுக்கு எதிர் முகாமை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் இருந்ததால் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியில் வீடு எடுத்து பதுங்கி இருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால், வேறு யாரையும் கொலை செய்யத் திட்டமிட்டு பதுங்கி இருந்தனரா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.






