என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பெட்டி ஆலை"

    • அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான கோவில்பட்டி மேட்ச் கம்பெனி என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது.

    அந்த ஆலையின் அலுவலகத்தில் இன்று காலையில் திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தீப்பெட்டி எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. காலை நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் தீயணைக்க வந்த தீயணைப்புத் துறையினர் பயன்படுத்திய குழாயில் (பைப்) ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தது. தண்ணீர் பீச்சியடித்த போது அதிக அளவு வெளியே சென்றதால், தண்ணீர் இல்லாமல் சிறிது நேரம் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

    • ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
    • விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி என்பவர் காயமடைந்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதனை கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்த செண்பக விநாயக மூர்த்தி, சிராக் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் டிராக்டர் டேங்கர்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி (வயது 55) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், மூலப்பொருட்கள், எந்திரங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×