என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
    • சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் அன்போது இருக்க வேண்டும்.

    வெறுப்புணர்வு பாவங்களை செய்ய தூண்டும்; அன்பு என்பது அத்தனை பாவங்களை போக்கும்.

    இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்.

    சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.

    சிறுபான்மையினர் நலனில் எப்போதும் உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    ராமநாதபுரம் மூக்கையூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம் ரூ.1.42 கோடியில் புனரமைக்கப்படும்.

    தமிழக அரசின் அணுகுமுறையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களில் ரூ.597 கோடியில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும்.

    திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 16 தேவாலயங்களில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினர் மூலம் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளும் காலை உணவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்.
    • கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நெல்லைக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்த குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    • முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
    • மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவில் ரெட்டியார்பட்டி யில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மின்னும் விளக்கொளியில் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கிருந்தபடி ரூ.72.10 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.5.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் ரூ.3½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம், பாளையங்கோட்டையில் ரூ.1.69 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு பகுப்பாய்வு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மேலும் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் ரூ.1.70 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.182.74 கோடியில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டிடம் உள்பட ரூ.357 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    50 புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 45 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு ரூ.101.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறாக நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    • தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
    • அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் சாரதா கல்லூரி அருகிலும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பாலம் அருகே மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று பார்வையிடுகிறார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

    விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கட்சிக்கொடிகள் பறக்கின்றன. வழிநெடுகிலும் நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். பாளையங்கோட்டை அரியகுளம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, ரெட்டியார்பட்டி மலைச்சாலை பகுதிகளில் தி.மு.க. கொடிகள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர முதலமைச்சர் வந்து செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கின்றன.

    • 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
    • புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள பாறையில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

    அருங்காட்சியகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள், பெயிண்ட் மூலம் பாறையில் இந்தியில் ராம் என எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில் புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடமாநிலத்தவர்களை வைத்தே அரசு அதிகாரிகள் இந்தி எழுத்துகளை அழித்தனர்.

    • டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலையை கடந்து அங்குள்ள விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை யூனியன் முன்னாள் சேர்மனும், தி.மு.க. பாளை தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.எஸ். தங்கபாண்டியன் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நான்குவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து விழா முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    அதன்பின்னர் மறுநாள்(21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இதற்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் தயாராகி வருகிறது. அங்கு மேடையில் தற்காலிக கழிப்பறைகள், பயனாளிகள், பொதுமக்கள், நிர்வாகிகள் அமருவதற்கு சேர்கள், அவர்களுக்கு மின்விசிறி, தற்காலிக கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அவரது வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் சாலைகளில் முழுவதுமாக வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிமாக நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடந்த பல மாதங்களாக சேதம் அடைந்து காணப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை சாலை, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, செல்லப்பாண்டியன் சிலை பகுதி சாலைகளை சீரமைக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் இருந்த மணல் குவியல்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் புறவழிச்சாலை, டக்கரம்மாள்புரம் செல்லும் சாலைகள் பளிச்சென காட்சி அளிக்கிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு கிரகாம்பெல் மற்றும் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் 2-வது நாளான 21-ந்தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து அரசு சார்பில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில், கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அன்று இரவு வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் 21-ந்தேதி காலை ரெட்டியார்பட்டியில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு புதிய அரசு பஸ் வழித்தடங்களை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.181.89 கோடியில் முடிவடைந்த 31 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.356.59 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இவ்வாறாக மொத்தம் ரூ.538.48 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ரூ.100 கோடியே 95 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மொத்தம் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார் என்றார்.

    தொடர்ந்து பொருநை அருங்காட்சியகத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ள தரிசன பூமி மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • கால்வாய் மூலம் நீர் பெறும் குளங்களுக்கும் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து 80 அடி பாசன கால்வாய் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை தொடர்ந்து, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பிசான சாகுபடிக்காக 80 அடி பாசன கால்வாயில் 440 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து விவசாயிகள் முழு வீச்சில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று மணிமுத்தாறு 80 அடி பாசன கால்வாயில் வீரவநல்லூர் அருகே ரெட்டியாபுரத்தை அடுத்த கொப்பரை சேட்டு என்ற பகுதியில் மிகப்பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் நிறுத்தம் காரண மாக நடந்து வந்த விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்வாய் மூலம் நீர் பெறும் குளங்களுக்கும் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சீர மைக்கும் பணியை அதிகாரி கள் உத்தரவின்பேரில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதே பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக மீண்டும் கடும் அரிப்புடன் பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கால்வாய் கரைகள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததே இதுபோன்ற தொடர் உடைப்புகளுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், கடந்த 20 ஆண்டுகளாக கரை சுவர்கள் உரிய பராமரிப்பு இன்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    உடைப்பை துரிதமாக சரி செய்து, விரைவில் மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், நிரந்தர தீர்வாக உரிய நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் கரைகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20, 21-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வருகிற 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    தொடர்ந்து பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் மாலை 5 மணிக்கு தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து டக்கரம்மாள்புரம் தரிசன பூமிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர், அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு விழா முடிந்ததும் வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.

    தொடர்ந்து மறுநாள் (21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.56½ கோடியில் கட்டப்படட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

    அங்கு சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும் அவர், ரூ.110 கோடியில் அமைக்கப்படும் காயிதே மில்லத் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார்.

    இந்த விழாவில் கனிமொழி எம்.பி., மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் அரசு விழாவிற்காக பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது மழைநீர் ஒழுகாத வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல் கிரேன் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

    முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்நோக்கு மருத்துவமனை செல்லும் சாலையில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    முதலமைச்சர் வருகையால் மாநகர பகுதி சாலைகள் புதுப்பொலிவு அடைகிறது. கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளால் சேதம் அடைந்திருந்த சாலைகளை பழுது பார்க்கும் பணிகளும் இரவு பகலாக முழு வீச்சில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகள் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் பிரமாண்டமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர்.
    • மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையானது தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் போட்டுவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் வகுப்பறை பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தான் என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மது குடித்த மாணவிகள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது தெரியவந்தது. மேலும் விடுதியில் தற்போது பராமரிப்பு பணி நடக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் காலியாக இருக்கும் வகுப்பறையில் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் மற்ற மாணவிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான், 9-ம் வகுப்பு மாணவிகள் குழுவாக அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவிகள் மதுபானம் அருந்திய விவகாரம் தொடர்பாக அந்த மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். பின்னர் அநாகரீகமாக செயல்பட்ட 6 மாணவிகளை சஸ்பெண்டு செய்துள்ளனர்.

    மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது மட்டுமின்றி, அவர்களுக்கு திருட்டுத்தனமாக மதுபானம் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது.
    • சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்வதற்கு யு.ஜி.சி.க்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யு.ஜி.சி. வழங்க முடியும். அதனை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை.

    உச்சநீதிமன்றம் யு.ஜி.சி. உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என தெளிவாக சொல்லிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி. ஆனால் அதனை விட்டு மீதி பணிகளை யு.ஜி.சி. செய்கிறது. மத்திய அரசின் ஏவலர்களாக சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தேர்தல் ஆணையமும், யு.ஜி.சி.யும் வந்து விட்டது.

    பா.ஜ.க.வின் மாநில தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை நேற்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டி உள்ளார். அதனை நயினார் நாகேந்திரன் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரெயில் தேவை. அதை சொல்வதை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது. அமைதியாக உள்ள இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும்.

    அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் தான் சிக்கந்தர் தர்கா உள்ளது. மற்ற இடத்தில் இது போன்ற எந்த விவகாரமும் இல்லை. சிக்கந்தர் தர்கா இருப்பதால் சண்டையை உருவாக்க நினைப்பதால் அமைதியாக இருக்கும் தமிழகத்தை, கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது.

    சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது. இந்தியாவின் வழிகாட்டி தமிழகம் தான். இந்த ஆட்சி தொடரும். திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் என வழி வழியாக ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார். 

    • மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
    • மேலப்பாளையத்தில் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை.

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி இஸ்லாமிய அமைப்பு கள் சார்பில் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் இன்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அதன்படி நெல்லை மாநகர பகுதியான மேலப் பாளையத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

    மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா, அண்ணா வீதி, அம்பை சாலை, வி.எஸ்.டி சந்திப்பு, கொக்கிர குளம் சாலை, பஜார் வீதிகள் உள்பட பிரதான சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சுமார் 1,500 கடைகள் வரை அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் முக்கிய சாலைகள், பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு சில இடங்களில் கேன்களில் டீ வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. பதற்றமான இடமாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், ரோந்து வாகனங்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அதேநேரம் மேலப்பாளையத்தில் இன்று ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. இருப்பினும், அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ×