என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர் (வயது 35). இவர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வீடு இருக்கும் நிலையில், சுந்தர் தனது குடும்பத்தினருடன் வி.கே.புரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனால் கோல்டன் நகரில் உள்ள வீடு பூட்டிக்கிடந்தது. அவ்வப்போது அவர் தனது வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை ஞானசுந்தர் கோல்டன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பதை அறிந்த ஞானசுந்தர், கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை; அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.
    • அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பஜார் திடலில் நடைபெற்றது.

    இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகிவிட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். எழுதிய அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார்.

    தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கட்சிகள் இன்று தி.மு.க.விடம் தங்களை இழந்துவிட்டது. தி.மு.க.-விற்கு மாற்றாக தொடங்கிய ம.தி.மு.க.வை, தி.மு.க.விடம் தொலைத்துவிட்டு மதுரை, திருச்சி என கட்சியின் தலைவர் வைகோ ம.தி.மு.க.வை தேடி வருகிறார்.

    தி.மு.க.வுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க.வை துண்டு துண்டாக வெட்டி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விற்பனை செய்ய தயாராகிவிட்டார். மாற்று என டார்ச் விளக்குடன் வந்த கமல்ஹாசன் அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் ஓய்வு எடுக்கிறார். தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை. அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று அரசியல் கட்சி மட்டுமல்ல. ஆட்சி மாற்றத்திற்கான கட்சி.

    தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை சொல்வதற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான் என விஜய் அறிவித்த பின்னர் முதலமைச்சர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.

    தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்துவிட்டது. அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். தமிழகம் போதையில் தள்ளாடுகிறது. அதனை காப்பாற்ற முதலமைச்சர் தவறிவிட்டார். ஆளும் கட்சி மெஷின் பவர், மணி பவர் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. இப்போது மசில் பவரை அதாவது தசை பலத்தை காட்டி தி.மு.க. குண்டர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் பவர் அதிகரித்து வருகிறது.

    இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என சொல்லும் தி.மு.க. இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்ட 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அனைத்து சாலைகளும் பனையூரை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது. போகிற போக்கை பார்த்தால் எல்லையில் நாட்டை பாதுக்கும் ராணுவ கேப்டன் கூட விசில் அடிக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிடுவார் என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
    • கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண வள்ளியூர் வட்டார பகுதியில் செயல்படுத்தப்படும் ரூ.605 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தை இணைத்திட முதலில் உத்தரவிடப்பட்ட நிலையில் திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் பஞ்சாயத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை மாற்றி, புதிய குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தையும் இணைக்க வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தமிழக அரசை கண்டித்து கூடங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் இன்று கருப்பு கொடி கட்டினர். கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் ஊராட்சிக்கு சுனாமி மற்றும் கே.கே.என்.பி.பி. குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்பட வேண்டிய 8 லட்சம் லிட்டர் குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது புதிய குடிநீர் திட்டத்திலும் எங்களை சேர்க்கவில்லை.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் கண்டிக்கிறோம் என தெரிவித்தனர்.

    • எங்கள் கூட்டணியில் பிரச்சனை என்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது.
    • தமிழ்நாட்டில் இதுவரை தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது.

    நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்கள் கூட்டணியில் பிரச்சனை என்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது.

    * தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது விஜய் கட்சிக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    * உதயநிதி ஸ்டாலின் நாளைக்கு முதலமைச்சராக வேண்டும் என நினைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    * எதையாவது சொல்ல வேண்டும் என நினைத்து தான் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் கூறி உள்ளார்.

    * தமிழ்நாட்டில் இதுவரை தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்.

    * தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களே முதலமைச்சர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.
    • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாரதிய ஜனதா கட்சியால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    * சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.

    * அமெரிக்காவிடம் பிரதமர் தலைகுனியக்கூடாது, அவர் தலைகுனிவது இந்தியாவே தலைகுனிவது போன்றது.

    * இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
    • என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார்.

    நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்ததையடுத்து, தவறான தகவலை திட்டமிட்டு பரப்புவதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    * அண்ணா நினைவு நாள் சமபந்தியில் நரிக்குறவரின சிறுவர்கள் விரட்டியடிப்பு என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.

    * நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நானே நேரில் ஆய்வு செய்தேன்.

    * பிற்பகல் 1.20 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

    * சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட்டது.

    * தானும் சபாநாயகரும் அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து சமபந்தி உணவை அருந்தினோம்.

    * என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார். அவருக்கும் பார்சல் செய்து கொடுத்தோம்.

    * வதந்தி பரப்பும் நபர் உணவு தீர்ந்த பின்னர் குழந்தைகளை அழைத்து வந்தார்.

    * முறையாக கோவில் ஊழியர் அவரிடம் உணவு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.

    * அரசியல் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே வதந்தி பரப்பு வருகிறார்.

    * சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலும் நெல்லையப்பர் கோவிலில் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுவர், சிறுமிகள் பேசும் வீடியோ காட்சிகளும், அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தியில் சபாநாயகர், மேயர், துணை மேயர், முன்னாள் அமைச்சர், மண்டலகுழுத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்குழுத் தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வை ஒருவர் முகநூல் பக்கத்தில், கோவில் சமபந்தி விருந்தில் பேட்டையைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார். சமபந்தி விருந்து என்பது பொதுவானது, இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை, வந்திருந்த 792 பயனாளிகள் உணவு சாப்பிட்டு விட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக கோவில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று கோவில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
    • இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

    அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன்பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதில், அந்த பஸ்சில் பயணித்த 2 பெண்களிடம் டிக்கெட் இல்லை. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள், 2 பெண்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள் கூறும்போது, ''கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது 3 பேருக்கும் சேர்த்து ஒரு டிக்கெட், 6 பேருக்கு சேர்த்து ஒரு டிக்கெட் என மொத்தமாக கொடுக்கிறார்கள். ஆனால் டிக்கெட் வாங்கிய நபர் அவரது நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டால் மற்றவர்களுக்கு டிக்கெட் இருக்காது.

    இதுபோன்ற குளறுபடியான சம்பவத்தினாலேயே அந்த 2 பெண் பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளித்தும் அபராதம் விதித்துள்ளனர்'' என்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எந்த தகவலும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும். கண்டக்டர்களும் தனித்தனியாக அனைவருக்கும் டிக்கெட் கொடுத்திருக்க வேண்டும்.

    எனினும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அபராதம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • காலை உணவு தரமற்ற முறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கிட சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாத காலமாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் தொடங்கிய சில நாட்கள் மட்டுமே உணவின் தரம் நன்றாக இருந்ததாகவும், அதன் பின்னர் வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்ற முறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் அந்த சாப்பாடுகளை சாப்பிடாமல் அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசினர். மேலும் கடந்த சில நாட்களாகவே தரமற்ற முறையில் உணவு இருப்பதாகவும் அதனை சாப்பிட முடியாமல் குப்பை தொட்டியில் வீசி வருவதா கவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • காங்கிரசுடனான கூட்டணியில் எந்த மோதலும் இல்லை.
    • எந்த கட்சி கூட்டணியில் இணையும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.

    நெல்லை:

    நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறது.

    நெல்லையில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது சந்தோஷமாக உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதை இது காட்டுகிறது. அடுத்ததாக அமையப் போவதும் தி.மு.க ஆட்சி தான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன் வைக்கிறார்கள்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க. தான் என்பதை மக்கள் அறிவார்கள். எங்கள் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் நிச்சயமாக வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது.

    ஆனால் அது குறித்து எங்களின் தலைவர் மு.க ஸ்டாலின் தான் இறுதி முடிவை எடுப்பார். கருத்துக்கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது. சமீபத்தில் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தோடு தி.மு.க. பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும்.
    • மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் அரச மரமும், வேப்ப மரமும் அடுத்தடுத்து, ஒன்றாக வளர்ந்துள்ளது.

    கடந்த 20 ஆண்டு காலமாக இந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க பக்தர்கள் முடிவு செய்தனர்.

    இதற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு நேற்று அரச, வேப்ப மரங்களுக்கு திருமண வைபோகம் நடந்தது. இதையொட்டி 2 மரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து அரச மரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்பட்டு, 2 மரங்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேம்பு மரத்திற்கு தாலி அணிவிக்கப்பட்டது. அதன் பின் விஷேச தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

    இந்த விநோத வழிபாட்டில் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், 'அரச மரம் ஆண் மரம் ஆகும். அது போல வேப்ப மரம் பெண் மரமாகும்.

    இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும். ஆனால் மூலைக்கரைப்பட்டி செல்வவிநாயகர் கோவிலில் 2 மரங்களும் ஒன்றாகவே வளர்ந்து வருவது அதிசயமாகும்.

    இவ்வாறு வளரும் மரங்களில் தெய்வாம்சம் பொருந்தி இருக்கும். இறைவன் மரங்களில் குடியிருந்து வேண்டிய வரங்களை அருளுவார் என்பது எங்களது நம்பிக்கை.

    அதிலும் மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும். இதனை காண்போர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும். திருமண காட்சியை கண்டு வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றனர்.

    • தமிழக முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
    • நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

    இதில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி பேசினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த 5 பேர் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மகாராஷ்டிர மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9,703 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

    மேலும் 5,469 தனியார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் இன்று மட்டும் 2,480 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த லேப்டாப்பை பயன்படுத்தி உலகத் தகவல்களை தெரிந்துகொண்டு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். ஆடல், பாடல், நடிப்பு போன்றவை எல்லாம் நீர்க்குமிழி போன்றது. அதை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்ததும், சென்றதும் நல்ல முறையில் இருந்தது. ஆனால், அவர் அச்சிடப்பட்ட உரையை வாசிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முதலமைச்சர் வழங்கினார்.

    ஆளுநர் உரையை அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அச்சிடப்பட்டது. அதை வாசிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. சொந்தக் கருத்துக்களை பேசவோ, தவிர்ப்பதற்கோ அதிகாரம் இல்லை. முதலமைச்சர் ஜனநாயக முறைப்படியே நடந்து கொண்டார்.

    மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதி, கூட்டணி கட்சிகள் குறித்து பேசியது பற்றி கேட்கிறீர்கள். இது குறித்து தலைவர் ஏற்கனவே கண்டித்துள்ளார்.

    கூட்டணி தொடர்பான விவகாரங்களை தலைமை மட்டுமே பேச வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகமும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள். இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக இணைந்து, தி.மு.க.விற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

    வேறு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓவைசி என்பவர் எப்படி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறாரோ, அதேபோல்தான் தமிழகத்தில் விஜயை முன்னிறுத்த பா.ஜ.க. பார்க்கிறது. ஆனால் சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆதரவு சக்திகளுக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×