என் மலர்
மதுரை
- மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.
மதுரை:
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.
பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.
அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.
இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இரண்டு கண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 9 மணியளவில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
- அழகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- தேய்த்தாள் பட்டி, மந்திகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் அழகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம்புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி,
சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பலாம்பட்டி, குடிமங்கலம் கருவனூர், தேய்த்தாள் பட்டி, மந்திகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜோதிநாதன் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
- ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகேயுள்ள பொட்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜா மகன் சதீஸ்குமார் (வயது 21). படித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். தும்பப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பரது மனைவி ராகவி (29). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் பொட்டபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ராகவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே சதீஸ்குமாருக்கும், ராகவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முதலில் செல்போனில் மட்டும் பேசி வந்த இருவரும் பின்னர் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு யாரிடமும் கூறாமல் ஊரை விட்டு சென்று வேறொரு ஊரில் தம்பதியராக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் ராகவியின் பெற்றோர், தங்கள் மகள் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அறிந்த சதீஸ்குமார், ராகவியை மீண்டும் அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்தார்.
அப்போது முதல் ராகவியை அவரது சகோதரர் ராகுல் மற்றும் உறவினர்களான சரிதா, அழகர், ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை ஆகியோர் வீட்டுக்காவலில் பூட்டி வைத்துள்ளனர். சதீஸ்குமாருடன் செல்ல நினைத்தால் உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் கூறி மிரட்டியுள்ளனர். இதனால் வேறுவழி யின்றி ராகவி அந்த வீட்டிலேயே அடைபட்டு கிடந்தார்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சில காலம் கழித்து அழைத்து செல்வதாக சதீஸ்குமார் கூறிச்சென்றார். அதுவரை அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே வீட்டில் வாழ்ந்தால் தன்னுடையே பெற்றோரும், சகோதரர்களும் அடித்து கொன்றுவிடுவார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து மீண்டும் ராகவியை தன்னுடன் அழைத்து செல்ல நேற்று சதீஸ்குமார் பொட்டபட்டிக்கு வந்திருந்தார்.
பின்னர் ராகவியை அழைத்துக்கொண்டு கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், தங்களை சேர்த்து வைக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு உறவினர்களை அழைத்து பேசிய போலீசார், கணவரை இழந்த பெண் என்பதாலும், இருவரும் மேஜர் என்பதாலும் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நள்ளிரவில் சதீஸ்குமார், ராகவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஆனாலும் ஆத்திரம் தீராத ராகவியின் சகோதரர் ராகுல் சதீஸ்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் அய்யனார், அருள்பாண்டி இருவரையும் அழைத்து திட்டம் தீட்டினார். அதன்படி சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சதீஸ்குமார், ராகவியை காரில் பின்தொடர்ந்தனர்.
அய்யப்பட்டி அருகே சென்றபோது அந்த காரில் வந்தவர்கள் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் இருள் சூழ்ந்த பகுதிக்கு சதீஸ்குமாரை மட்டும் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.
இதில் சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ராகவி கொடுத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் அடித்து கொலை செய்யப்பட்ட சதீஸ்குமாரின் உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ராகவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதீஸ்குமாரை கொலை செய்தது ராகவியின் உறவினர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்
- தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
இந்நிலையில், மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
- 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
- தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனால் தூய்மை பணியாளர்களுடன் சமரசம் ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.
அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தது அதிமுக ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மீதமுள்ள 4இல் 2 மண்டலங்களை தனியார் மயமாக்கும் முடிவை தற்போதைய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியறுத்தினார்.
- பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
- 7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் போக்குவரத்தாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரெயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். அதாவது 7.40 மணி நேரத்தில் சென்னை சென்றடையும் வகையில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரெயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் உபயோகமாக இருந்து வருகிறது.
7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 48-வது பிறந்தநாள் விழா இன்று மதுரை ரெயில் நிலைய சந்திப்பின் 4-வது நடைமேடையில் ரெயில் என்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த ரெயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வைகை ரெயில் எக்ஸ்பிரஸ் என்ஜின் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர்.
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் தங்களுக்கான அனுபவத்தையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட இருக்கிறது.
- மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் மாநாடு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மதுரை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநாடு 4 நாட்களுக்கு முன்னதாக 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான 'ரேம்ப் வாக்' நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் பணி நிறைவு பெற்றுள்ளது.
ஒலி, ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள், மின்விளக்குகள் சில இடங்களில் பொருத்தப்பட்டு அதற்கான மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் பிரமாண்ட முகப்பு ஆர்ச் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல மூன்று இடங்களில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட இருக்கிறது. மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் தண்ணீர் தாகம் தீர்க்கும் விதமாக சுத்திகரிக்கட்ட குடிநீர் வினியோகம் 24 மணி நேரமும் செயல்படுத்த முடிவு செய்ததை தொடர்ந்து நிலத்திற்கு அடியில் பத்தாயிரம் அடிக்கு பைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளது.
1000-க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையில் பின்னர் குழாய் மூலம் திறந்து விடப்பட்டு தண்ணீர் முறையாக செல்கிறதா என்கிற சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் கட்சி மாநாடு ஏற்பாடு பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் ஒரு லாரிக்கு 40 ஆயிரம் லிட்டர் வீதம் 40 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் லாரிகள் மாநாட்டுத் திடலில் நிறுத்தப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் மாநாடு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது மாநாட்டு திடல் முழுவதும் த.வெ.க. கொடிகள் கட்டப்பட்டு பட்டொளி வீசி பறப்பது அந்த வழியாக செல்வோரை வெகுவாக ஈர்த்து வருகிறது.
- 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது.
- கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 58 கிராம மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் வைகை அணையிலிருந்து 17.6 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் 925 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வழக்கமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது ைவகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 58 கிராம கால்வாயிலோ அல்லது திருமங்கலம் பிரதான கால்வாயிலோ தண்ணீர் திறக்கப்பட வில்லை.
இதுகுறித்து கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக உசிலம்பட்டி மற்றும் விருவீடு பகுதியில் வைகை அணையில் இருந்து 58 நீர் பாசன கால்வாயில் தண்ணீரை திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் 58 கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும், 58 கிராம பாசன கால்வாயை நீர்ப்பாசன கால்வாயாக மாற்ற கோரியும், உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரியும் புறவழிச் சாலை அமைக்க கோரியும் உசிலம்பட்டி பகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வன பாதுகாப்பு சட்டம் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு மதுரை ரோட்டில் இருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் நடத்தினர்.
உசிலம்பட்டி பகுதியில் கடையடைப்பின் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- மாநாட்டிற்காக சுமார் 506 ஏக்கர் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு செம்மைப்படுத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- தற்போது மழை காலம் என்பதால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திருமங்கலம்:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதன் முறையாக களம் காண இருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பூத் கமிட்டி மாநாடு முதல் உறுப்பினர்கள் சேர்க்கை வரை அதிரடி காட்டியுள்ளது.
அந்த வகையில் தென் மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியலும், ஆன்மீகமும் கலந்த மதுரையில் த.வெ.க. தனது 2-வது மாநில மாநாட்டை வருகிற 21-ந்தேதி பிரமாண்டமாக நடத்துகிறது. அதன் மூலம் கட்சியின் பலம் மற்றும் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க முயற்சி எடுத்து வருகிறது.
மாநாட்டிற்காக சுமார் 506 ஏக்கர் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு செம்மைப்படுத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான 'ரேம்ப் வாக்' நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள், மாநாட்டின் பிரம்மாண்ட முகப்பு ஆர்ச் மின்விளக்குகள், பிரமாண்ட கோட்டை வடிவிலான நுழைவு வாயில் போன்றவை அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தற்போது மழை காலம் என்பதால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் மொத்தம் 90 பாக்சுகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக தடுப்பு கம்பிகள் போடப்பட்டு, ஒரு பிரிவில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த வகையில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள், அதேபோல மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் தண்ணீர் தாகம் ஏற்படாமல் இருப்பதற்காக நிலத்திற்கு அடியில் பைப்புகள் போடப்பட்டு 750 குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மாநாட்டு திடலை சுற்றி பார்க்கிங் மற்றும் சாலைகளில் 5,000 லிட்டர் அளவிற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட சின் டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் விஜய் தனது பலத்தை நிரூபிக்க த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் தேர்வு செய்யாத வகையில் ஒரு பிரம்மாண்ட பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை விஜய் தேர்வு செய்து இந்த மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக காவல்துறை சார்பில் 42 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. காவல் துறையிடம் விளக்கம் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் காவல்துறை தற்போது வரை அனுமதி கொடுக்காததால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகரை சந்தித்து மாநாடு அனுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக நேற்று பிற்பகலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மாநாடு நடைபெறும் திடல் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதுகுறித்து த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறுகையில், விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காவல் துறை தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளோம். குறிப்பாக பார்க்கிங் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து தற்போது வரை மாநாட்டு பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- காவல்துறையின் 42 கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தது த.வெ.க.
- வருகிற 21ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
முதலில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக ஆகஸ்ட் 21-க்கு மாற்றியமைக்கப்பட்டது.
மாநாட்டிற்கான தேதி மாற்றப்பட்ட பின்னர், த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அக்கட்சியினர் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மனு அளித்தனர்.
அப்போது, மாநாடு நடைபெறும் இடம், எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு, வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் குறித்த 42 கேள்விகளை காவல்துறை முன்வைத்தது. இந்தக் கேள்விகளுக்கு த.வெ.க. தரப்பில் விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
- தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
- திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகத்தில் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் மாற்றுத்திறனாளி. 2018-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட சுரங்கத்துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராக பணியில் சேர்ந்தேன். 2022-ம் ஆண்டில் மாரியம்மாள் என்பவர் இந்த துறையின் உதவி இயக்குனர் பொறுப்பு பணியை ஏற்றார். அவர் தற்காலிக பணியில் இருந்த என்னை நீக்கி விட்டார். பின்னர் அவருக்கு உதவியாளராக மட்டும் வேலை செய்யும்படியும், அதற்கான ஊதியம் தருவதாகவும் உறுதி அளித்தார்.
அதன்பேரில் வேலை செய்தபோது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப்பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளிடம் ஒப்படைத்து விடுவேன். திடீரென பல்வேறு முறைகேட்டுக்கு நான் தான் காரணம் என மாரியம்மாள் கூறினார்.
இதனால் அவரது தூண்டுதலின்பேரில் குவாரி உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை என்னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நானும், எனது தாயாரும் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
எனவே குவாரி உரிமையாளர்களிடம் இருந்து மாரியம்மாள் லஞ்சப்பணத்தை வங்கிக்கணக்கு மூலமாக பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனவே எனக்கும், என் தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் உள் நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். தனிப்பட்ட முறையில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்தும் மனுதாரர் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் புனையப்பட்டவை என்பதால் இதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கனிமவள அதிகாரி உதவி இயக்குனர் மாரியம்மாள் லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு குவாரி உரிமையாளர்களிடம் இருந்து ஏராளமான தொகையை லஞ்சமாக பெற்றதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
தற்போது அவர் தேனி மாவட்டத்தில் பணியில் இருப்பதால் இந்த மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
இதையடுத்து நீதிபதி, கனிம வள அதிகாரிகள் கூட்டம் நடத்துவதே ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது? அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதற்காகத் தான். தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மனுதாரர் வங்கி கணக்கில் குவாரி உரிமையாளர்கள் எதற்காக பணம் செலுத்தினார்கள்? அவர் பணம் செலுத்தியிருந்தால் இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்தார்கள்? என்று சம்பந்தப்பட்ட அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரிவாகவும், நேர்மையாகவும் விசாரித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற நேரிடும். நேர்மையாக இந்த வழக்கை விசாரித்தால் இந்த துறையில் நல்லது நடப்பதற்கு உதவ முடியும். அது மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் ஆயிரம் கோடி ரூபாயாவது அரசுக்கு வருவாயாக நம்மால் தேடித் தர முடியும். அதற்காக தேவைப்படும் உதவிகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செய்து தரவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.






