என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டு பேசினர்.

    அருமனை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு ஊராட்சி பகுதியான புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், ஜவுளி வியாபாரி. இவரது மகள் ரோகிணி (27) சீனா நாட்டில் மருத்துவ படிப்பிற்காக சென்றிருந்தார். படிப்பை முடித்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராக இருந்துள்ளார். பெற்றோரும் மகளுக்காக காத்திருந்தனர். ஆனால் சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரோகிணி மருத்துவமனையில் இறந்து விட்டதாக கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வெளிநாடு உறவினர்களி டம் பேசி கொண்டு வருவதற்கான ஏற்பாடு நடந்தாலும், இந்தியன் தூதரகத்தில் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இந்த நிலையில் 51 நாட்களுக்கு பிறகு ரோகிணி உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.

    புல்லந்தேரியில் வீட்டிற்கு கொண்டு வந்த மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு மாணவியின் உடலை கண்ணுமாமூட்டில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்தார். சேவியர் குமாருக்கும், மைலோடு ஆலய பங்குபேரவை தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 20-ந்தேதி ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக இரணியல் போலீசார் பாதிரியார் ராபின்சன் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டிலும், ரமேஷ்பாபு நாகப்பட்டினம் கோர்ட்டி லும் சரணடைந்தனர்.

    சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபுவை காவல் எடுத்து விசாரிக்க இரணியல் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ரமேஷ் பாபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ரமேஷ் பாபுவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் ரமேஷ் பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவனந்தபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    • ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
    • மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.

    மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட பணிகள் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று கூறினார்கள்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் லீபுரம், கோவளம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், குலசேகரபுரம், நல்லூர், ராமபுரம், இரவிப்புதூர் உள்பட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயக்குமாரி லீன், ஸ்டெனி சேவியர், சிந்து செந்தில், தங்கமலர் சிவபெருமான், தேவி, சுடலையாண்டி நிலா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் வள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை.
    • மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு, உட்பட்ட ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

    • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது. தொகுதி ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

    மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

    ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    • வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
    • விஜய் வசந்துடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரியில் வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் தேவாலயம் மற்றும் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அருகாமையில் உள்ள தூண்டில் பாலத்தில், கடல் அலைகள் எப்போதும் வேகமாக மோதும் பகுதியில் உள்ள பாறைகள் அகன்று சிதறி உள்ள நிலையில் வாவத்துறை மீனவ மக்களின் அழைப்பை ஏற்று பாதிக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் பகுதிகளை இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பார்வையிட்டார்.

    வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் ஆட்லின், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ், ஊர் தலைவர் வர்க்கீஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சித்திரங்கோடு மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 45). இவர் இட்லி மாவு தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி அனிதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் குலசேகரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வெண்டலிகோடு பகுதியில் சென்ற போது கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரி வந்தது. இந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அனிதா கீழே விழுந்த நிலையில், டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அனிதாவின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் இது போல் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் கனரக லாரிகளை தடை செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஜெயராஜ், பேரூராட்சி தலைவர்கள் அகஸ்டின் (பொன்மனை), சுகிர் ஜெபராஜ் (வேர்கிளம்பி), ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), பொன் ரவி (திற்பரப்பு) , ஊராட்சி தலைவர்கள் பி.டி.செல்ல ப்பன், விமலா சுரேஷ், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் தாசில்தார் புரந்ந்தரதாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-கலெக்டர் லொரைட்டா, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்கவுதம் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சு வார்த்தையில் கனிமப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் தடை செய்யப்படும் என்றும் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரி மூடப்படும், அனிதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரி டிரைவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியை மூட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த கல்குவாரியை மூடி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று கல்குவாரியை மூடி சீல் வைத்தனர்.

    ×