என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து சமய அறநிலைய துறை"

    • இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவில்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

    அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகளுக்கு குமரக்கோட்டம் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. .எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
    • மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.

    மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×