என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.
    • கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின் சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதற்கிடையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பங்கு பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.

    • தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
    • அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

    ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

    மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் சேவியர் குமார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
    • மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரணியல்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி ஜெமிலா (40). இவர் மைலோடு ஆலய நிர்வாகத்திற்குட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மைலோடு ஆலய பாதிரியராக இருப்பவர் ராபின்சன். இவர் பங்கு பேரவை தலைவராகவும் உள்ளார். தற்பொழுது பங்கு பேரவை நிர்வாகத்தினருக்கும், ஏற்கனவே பங்கு பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமாருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சேவியர் குமாரின் மனைவி ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஜெமிலாவை மீண்டும் பள்ளியில் சேர முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக பாதிரியார் ராபின்சனை சந்தித்து சேவியர் குமார் பேசினார். நேற்று மதியமும் சேவியர் குமார் பாதிரியார் ராபின்சனை சந்தித்து பேச ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஆலய வளாகத்திற்குள் பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெமிலா மற்றும் அவரது உறவினர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. குளச்சல் டி.எஸ்.பி. பிரவீன் கவுதம், தக்கலை டி.எஸ்.பி. உதய சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சேவியர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் சேவியர் குமார் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நள்ளிரவு 1.45 மணிக்கு சேவியர் குமாரின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் சேவியர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி ஜெமீலா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மைலோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் மைலோட்டை சேர்ந்த ஜஸ்டிஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெனிஸ், பெனிட்டோ மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் என 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரமேஷ் பாபு அரசு வழக்கறிஞர் ஆவார். தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். ராபின்சன், பெனிட்டோ இருவரும் பங்கு தந்தைகள் ஆவார்கள். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த பிறகு உடலை பெற்றுக் கொள்வோம். ஜெமிலாவிற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • பேருந்துகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
    • போக்குவரத்து துறை பொது மேலாளர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து இந்த இரண்டு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கோதையாறு மலை பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அங்குள்ள மக்களை சந்தித்தார். அவரிடம் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுவதை எடுத்துரைத்தனர்.

    அந்த மார்க்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் 313 மற்றும் 313 E எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

    பின்னர் நாகர்கோவிலில் போக்குவரத்து துறை பொது மேலாளர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து இந்த இரண்டு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    உடனடியாக இந்த பேருந்து வசதி மீண்டும் இயக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உறுதி அளித்தார்.

    • காலை 6.30 மணிக்கு குருசுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    • 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காலை 6.30 மணிக்கு குரு.சுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    2-ம் நாளான நாளை (20-ந்தேதி) இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3-ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5-ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6-ம் நாள் கற்பக வாகன பவனி, 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

    வருகிற 26-ந்தேதி 8-ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடு தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும் நடக்க உள்ளது. தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.

    9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான (ஞாயிற்றுக் கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11-ம் திருவிழாவான 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணி விடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை குருமார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நாகராஜர் கோவில் ஆண்டுதோறும் தை மாதம், தை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்கள் வருகை தந்து திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் என பெயர் வர காரணமாக விளங்கிய நாகராஜர் கோவில் ஆண்டுதோறும் தை மாதம், தை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பெருந்திருவிழாவின் திருகொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வருகை தந்து திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அறக்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ஜோதீஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.
    • தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நாகராஜன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுவாமி பத்மேந்திரா, நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ரோ சிட்டா திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7.20 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இதில் சுவாமி பத்மேந்திரா கலந்து கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இதைத் தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சாமி எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடக்கி றது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வாகன பவனியும், சமய சொற்பொழிவும், சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடக்கிறது.

    9-ம் திருவிழா நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கி றது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி திருக்கோவி லுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது.

    • லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • லாரிகளால் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கொடி பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ், ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவரது மனைவி பீனா (வயது 52). இவர்களது மகள் திருமணமாகி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளை பார்த்து வர பீனா விரும்பி உள்ளார். இதற்காக கணவர் ஞானதாசுடன் இன்று காலை ஊரில் இருந்து புறப்பட்டார். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். காலை 8 மணியளவில் குழித்துறை மேம்பாலம் பகுதியில் சென்ற போது பின்னால் கனிமவளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது.

    அந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஞானதாஸ் சாலையின் ஓரம் விழுந்தார். ஆனால் பீனா, சாலையின் நடுவே விழுந்தார்.

    அப்போது அவரது தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பீனா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். காலில் காயம் அடைந்த ஞானதாஸ், தனது கண்முன்பு மனைவி பலியானதை பார்த்து உடல் அருகே அமர்ந்து கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பீனா உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஞானதாசும் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து காரணமாக குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட் டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் தினசரி கனிம வளங்களை வாகனங்களில் அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதை தடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி அடிக்கடி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக போலீசார் சோதனைகள் நடத்தி வந்தாலும், லாரிகளால் விபத்துக்கள் தொடர்ந்து வருவது வேதனையான சம்பவமாக உள்ளது.

    • மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.
    • காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது மற்றொரு காரில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார் மற்றும் 2 பேர் வந்தனர். மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.

    இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் (37) தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து நவீன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று பள்ளி‌ நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
    • கோரிக்கையை ஏற்று வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறையை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பணிகள் நிறைவடைந்து மாணவர்களுக்காக அந்த கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

    • சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் காக்கோட்டு விளை பகுதியில் ரேசன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 2-வது நாளாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு ரேசன் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று அதிகாலை ரேசன் கடையில் இருந்து புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது ரேசன் கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ரேசன் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரேசன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகி இருந்தது. ரேசன் கடையில் தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து நாசமானது குறித்து ரேசன் கடை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்குவதற்கு இன்று காலையிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

    ×