என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது. தொகுதி ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

    மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

    ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    • வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
    • விஜய் வசந்துடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரியில் வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் தேவாலயம் மற்றும் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அருகாமையில் உள்ள தூண்டில் பாலத்தில், கடல் அலைகள் எப்போதும் வேகமாக மோதும் பகுதியில் உள்ள பாறைகள் அகன்று சிதறி உள்ள நிலையில் வாவத்துறை மீனவ மக்களின் அழைப்பை ஏற்று பாதிக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் பகுதிகளை இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பார்வையிட்டார்.

    வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் ஆட்லின், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ், ஊர் தலைவர் வர்க்கீஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சித்திரங்கோடு மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 45). இவர் இட்லி மாவு தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி அனிதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் குலசேகரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வெண்டலிகோடு பகுதியில் சென்ற போது கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரி வந்தது. இந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அனிதா கீழே விழுந்த நிலையில், டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அனிதாவின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் இது போல் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் கனரக லாரிகளை தடை செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஜெயராஜ், பேரூராட்சி தலைவர்கள் அகஸ்டின் (பொன்மனை), சுகிர் ஜெபராஜ் (வேர்கிளம்பி), ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), பொன் ரவி (திற்பரப்பு) , ஊராட்சி தலைவர்கள் பி.டி.செல்ல ப்பன், விமலா சுரேஷ், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் தாசில்தார் புரந்ந்தரதாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-கலெக்டர் லொரைட்டா, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்கவுதம் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சு வார்த்தையில் கனிமப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் தடை செய்யப்படும் என்றும் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரி மூடப்படும், அனிதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரி டிரைவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியை மூட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த கல்குவாரியை மூடி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று கல்குவாரியை மூடி சீல் வைத்தனர்.

    • தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.
    • இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சி.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகி ருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், பூதப்பாண்டி பேரூ ராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. துணைச் செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்து க்குமார், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவ தியப்பன், நாகராஜன், விஜய மணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
    • மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய நவீன இயந்திரத்தை விஜய் வசந்த் அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.

    கன்னியாகுமரி:

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    முளகுமூடு கோடியூர் புனித பவுல் சி.எஸ்.ஐ. சேகர சபை சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற ஷாலினி - செகின் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    தக்கலை புன்னை நகர் மைக்கேல் ராஜ்- லைலா மேரி ஆகியோரது புதல்வி கார்மல் மேரி மற்றும் பிரதீஷ் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


     நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


    தென் தமிழகத்தில் முதல் முறையாக ஸ்ரீனிவாசா மருத்துவமனையில் ரோபோட்டிக் துல்லியத்துடன் முழுமையான மூட்டு நிவாரணம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய நவீன இயந்திரத்தை விஜய் வசந்த் அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.


    ரீத்தாபுரம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதரவற்ற ஏழை விதவைக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் கே.டி.உதயம் ஆகியோருடன் இணைந்து பாராளுமன்ற விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    • ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
    • பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின்சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையில் வழக்கில் தேடப்படுபவர்கள் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கோர்ட்டுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் ராபின்சன் இன்று காலை திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

    • பள்ளி ஆண்டு பெரு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் மாலிக், ஜெகபர் சாதிக், மதர்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தக்கலையில் உள்ள பிரசித்தி பெற்ற அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா பள்ளி ஆண்டு பெரு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    நிகழ்ச்சியில் அக்ரி நிஜாம், பத்மனாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், மாவட்ட பொது செயலாளர் பால் டி சைலஸ், மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் தேவி, மாவட்ட ஊடக பிரிவு பொது செயலாளர் பீர்மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கௌதம், நகர மகிளா காங்கிரஸ் தலைவி நாசியா, நகர காங்கிரஸ் துணை தலைவர் நிர்மல், நகர பொது செயலாளர் ஆல்பர்ட், நகர செயலாளர் அம்ஜத் மற்றும் நாசர், தமீம், மாலிக், ஜெகபர் சாதிக், மதர்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.
    • பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர்.
    • நாகராஜன், விஜயமணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. துணைச் செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், நாகராஜன், விஜயமணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×