என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
    • பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் 3-ம் நாள் விழா முதல் 10-ம் திருவிழா வரை காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் 2-வது நாள் அதிகாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம வேள்வி, காலை 7 மணிக்கு ஸ்ரீமத்பாகவத மாகாத்மிய பாராயணம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, நண்பகல் 12 மணிக்கு சமய மாநாடு, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், 3-வது நாள் மாலை 5.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கதைகளி நடக்கிறது.

    4-ம் நாள் காலை 11 மணிக்கு அகவல் பாராயணம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, 5-ம் நாள் மாலை 6.30-க்கு ஆன்மிக சிறப்புரை, இரவு 10.30 மணிக்கு நாட்டிய நடனம், 6-ம் நாள் காலை 9 மணி முதல் பஜனை போட்டி, இரவு 10.30 மணிக்கு குரு சிவச்சந்திரனின் ஆன்மிக அருளுரை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெறும்.

    7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் சொற்பொழிவு போட்டி, ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர மகா சபைக் கூட்டம், இரவு 8 மணிக்கு மாதர் மாநாடு, இரவு 10.30 மணிக்கு புராண நாடகம் நடக்கிறது.

    8-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு யோகா, இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரை, இரவு 10 மணிக்கு கர்நாடக இன்னிசை, 9-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், 10.30 மணிக்கு வேடம் புனைந்த விசாரணை மன்றமும் நடைபெறுகிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடக்கிறது. பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    • விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    • பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.

    பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ்‌ கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.

    மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள் ஊருக்கு திரும்ப விடாமல் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைக்கு உள்ளான இந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஒரு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்தனர். மும்பை கடற்கரை பகுதியினுள் ஒதுங்கிய இவர்களை கொலாபா போலீஸ் கைது செய்தனர்.

    இந்த செய்தியை அறிந்து மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன் ஒரு வழக்கறிஞரை நியமித்து

    அவர்களது விடுதலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சிகள் மேற்கொண்டார்.

    முயற்சிகளின் பலனாக நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலை பெற்ற இவர்களை விமானம் மூலம் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விஜய் வசந்தின் நாகர்கோவில் அலுவலகத்தில் காத்திருந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


    குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மத்திய பாரதிய ஜனதா அரசினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் விலைவாசி உயர்வினையும் மகளிர் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் நிலைநாட்டிட பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டும்.

    மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பினுலால் சிங், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோவில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    • காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
    • இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து மீதமுள்ள 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    • ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
    • முன்னாள் வட்டார தலைவர்‌ சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மார்த்தாண்டம் சந்திப்பு பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயோ கழிப்பறை உபயோகிக்க முடியாமல் இருப்பதை மக்கள் சுட்டி காட்ட உடனடியாக குழித்துறை நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தின குமார், முன்னாள் வட்டார தலைவர் சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது நாடார் சேவை மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.


    • பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது.
    • சந்திர போஸ்கோ கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. அப்போது முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கிழிந்த நிலையில் துணிப்பை ஒன்று கிடந்தது.

    அதே ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த போலீஸ்காரர் ஷாஜகான் அந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பணப்பையை அவர் நாகர்கோவிலில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தார்.

    ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    நேற்று கொல்லத்திலிருந்து சந்திர போஸ்கோ வீட்டிற்கு வருவதற்காக பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அவர் ரெயில் பெட்டியை விட்டு இறங்கி சென்றுவிட்டார். வீட்டுக்கு சென்ற பிறகு பார்த்த போது தான் தன் கையில் இருந்த ரூ.4 லட்சம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    உடனே அவர் பணத்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நிலையில் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் வந்து விசாரித்தபோது அவரது பணம் போலீசில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணைக்கு பிறகு அந்த பணத்தை ஒப்படைத்தனர். அனாதையாக கிடந்த பணத்தை எடுத்து ஒப்படைத்த போலீஸ்காரர் ஷாஜகானுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா.
    • பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    நாகர்கோவில்:

    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.

    காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர். இரணியல் சுற்று வட்டார பகுதி, மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டன.

    அந்த வகையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இதுபோல் வடக்கன் பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னர் திரும்பி கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு காவடிகள் வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. மேலும் சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடிகள் சேரமங்கலம், படர்நிலம், பிள்ளையார்கோவில் மணவாளக்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள், வேல் காவடிகள், குளச்சல் அண்ணா சிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக திருச்செந்தூர் சென்றன.

    மேலும் குளச்சல் புளியமூட்டு விளைமுத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 பெரிய காவடிகளும், 6 சிறுவர் காவடிகளும், சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தபடியும் சென்றனர்.

    செக்காலத் தெரு முத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 அடி வேல் காவடி, காவடியும், கள்ளியடப்பு கோவிலில் இருந்து பறக்கும் காவடியும், நுழக்குடி சிவன் கோவில் இருந்து பறக்கும் காவடியும், மகாதேவர் கோவிலில் இருந்து பறக்கும் காவடியும் புறப்பட்டு சென்றன.

    • பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.
    • ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.

    சென்னையில் தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் ஸ்ரீகுமாரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து, மதுரை - புனலூர் விரைவு ரெயில் மற்றும் நாகர்கோவில் - கோட்டயம் ரெயில்களுக்கு நாகர்கோவில் டவுன், பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.


    இதேபோல் தலைமை வணிக மேலாளர் நீனு அட்டெரயாவை விஜய் வசந்த் சந்தித்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.

    • காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
    • காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.

    காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.

    இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.

    கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

    மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.

    • மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.
    • பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.

    • ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    ×