search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்: அத்துமீறியவர்களை எச்சரித்த போலீசார்
    X

    கன்னியாகுமரி கடற்கரையில் உலா வரும் காதல் ஜோடிகளை காணலாம்

    கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்: அத்துமீறியவர்களை எச்சரித்த போலீசார்

    • காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
    • காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.

    காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.

    இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.

    கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

    மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.

    Next Story
    ×