என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும்.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    நிலைக்கண்ணாடி

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனை யையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    மறு அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார். இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர்.

    1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர். 3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

     முத்திரி கிணறு

    அய்யா வைகுண்டர் சாமி தோப்பின் வடக்கு வாசல் பக்கம் இருந்தபடியே நிறைய அற்புதங்களையும், சமூக மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலானார். தீண்டாமை சிக்கலில் தவித்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கிணறு ஒன்றை உருவாக்கி அதற்கு முத்திரி கிணறு என்று பெயரிட்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒரே கிணற்றில் நீர் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

    ஒரு வீட்டு கிணற்று தண்ணீரை மற்றொரு வீட்டுக்காரர் எடுத்து பழகினாலே தீட்டு என்று கருதிய மேற்குடியினர், பல சாதியினரும் ஒரே கிணற்று தண்ணீரை பருகியதை கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார்கள்.

    • வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இங்கு தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆவணி, தை திருவிழாக்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும், வைகாசி திருவிழா தமிழ் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையும் கொடி ஏறி 11 நாட்கள் நடைபெறும். இதில் 6-ம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்று மாலை சர்ப்ப வாகனம் எடுக்கப்படும். நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்க வந்து வழிபட்டு செல்வார்கள். அய்யாவிற்கு பால், சுருள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    இதேபோல் 8-ம் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி யளித்து வருகிறார். 11-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகளிலும் அய்யா வழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

    தேர்த் திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செல்வார்கள்.

    அய்யா வைகுண்டருக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பன்னீர், பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபடுவார்கள். உப்பும், மிளகும் வாங்கியும் காணிக்கையாக செலுத்துவார்கள்.

    கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறும். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அய்யா வைகுண்டசாமி பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தினமும் அதிகாலை 3 மணிக்கு முத்திரி கிணற்றில் குளித்த பின்பு பணிவிடை செய்து வருகிறார்கள். கருவறை திறக்கப்பட்டு வாகன பவனி நடைபெறும். காலை, மாலை இருவேளையும் நான்கு ரத வீதிகளிலும் வாகன பவனி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனப்பால் வழங்கப்படும். காலை 11 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், அதைத் தொடர்ந்து வாகன பவனியும் நடைபெறும்.

     தலைமை பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் முத்திரி கிணற்றில் பதமிட்டு அங்கிருந்து அய்யா வைகுண்ட சாமி பதிக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். அய்யாவை நினைத்து பக்தர்கள் பதமிட்டு வருகிறார்கள்.

    அன்பில் எல்லோரையும் அரவணைத்து ஆள வேண்டும் என்று அய்யா விரும்பினார். எவருக்கு எவரும் குறைந்தவர் இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்கு அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்துவர சொன்னார். எனவே தற்போதும் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் யாராக இருந்தாலும் தலையில் தலைப்பாகை அணிந்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வடக்கு வாசலில் பக்தர்களுக்கு நாமம் கொடுப்பதில்லை. மாறாக திருமண்எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித மண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடிபட்ட மண் தான். இந்த மண்ணுக்கு அரிய மருத்துவ குணங்கள் உண்டு.அந்த திருமண் வடக்கு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் திருநாமமாக பூசி வழிபட்டு வருகிறார்கள். மேலும் பதிக்குள் நுழைந்ததும் குருமார்கள் நெற்றியில் நாமம் விட்டு வருகிறார்கள்.

    முந்தைய காலத்தில் கீழ்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழைய தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்'என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்கள் தரப்படும் விபூதியை பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கி போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் வழக்கம் தொடங்கப்பட்டது.

    அங்கிருந்து குருமார்கள் 2 விரல்களை கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். பக்தர்கள் நாமமிட்ட பிறகு கருவறைக்குள் சென்று வழிபடுவார்கள்.

    அய்யாவை நினைத்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது கை கூடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இதனால்தான் அய்யா வைகுண்டசாமி பதிக்கு பக்தர்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    சாமிதோப்பு தலைமை பகுதியில் வைகுண்டருக்கு கை குத்தல் அரிசி மூலம் காய்கறிகளை சேர்த்து சமைக்கப்பட்ட உணவே பணிவிடை செய்யப்படுகிறது. அந்த உணவு மண்பானை கொண்டே சமைக்கப்படுகிறது. சமையலில் பூசணிக்காய், மிளகாய், கத்தரிக்காய், இளவக்காய், வாழைக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அய்யாவிற்கு பக்தர்கள் தென்னங்கன்று மற்றும் கோமாதாவை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். மேலும் நினைத்தது நடக்க வேண்டி பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்தும் வழிபடுகிறார்கள்.

     சந்தன குடம் எடுக்கும் பக்தர்கள் பதியை சுற்றியுள்ள 4 ரத வீதிகளை சுற்றி வருவார்கள். குழந்தை வரம் வேண்டியும் பலரும் அய்யாவை வழிபட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்த பிறகு அந்த குழந்தையோடு வந்து அய்யாவை வழிபட்டு செல்கின்றனர். அப்போது அந்த குழந்தைக்கு முடி இறக்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பெண் குழந்தையாக இருந்தால் காதுகுத்தியும் செல்கின்றனர்.அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தேங்காய் எண்ணையையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    மேலும் பதியில் தங்கி இருப்பவர்களுக்கு வஸ்திரங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அன்னதர்மம், கருப்புகட்டி தர்மம், பழ தர்மங்கள் மிகச்சிறந்ததாக விளங்கி வருகிறது. நினைத்தது நிறைவேறியதும் தர்மம் வழங்குவதே இங்கு பிரதான ஒன்றாக உள்ளது.

    நோய்கள் குணமாக சிலர் சாமித்தோப்பு பதிவில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் முத்திரி கிணற்றில் பதம் இட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நோய் குணமாகிய பிறகு இங்கிருந்து வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள். இதன்மூலம் அய்யாவை நம்பி வந்தவர்களை வாழவைக்கும் புண்ணிய பூமியாக சாமிதோப்பு விளங்கி வருகிறது.

    புண்ணிய பூமியாக விளங்கும் சாமிதோப்பு. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அய்யா வைகுண்டர்.

    • விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

    குளச்சல் துறைமுகத் தெருவில் வசிக்கும் ஆண்டனி தாஸ் அல்போன்ஸ் மீன்பிடி தொழில் செய்ய குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்று பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அவரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்த் மீனவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

    மேலும் அவர்கள் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிதியுதவி அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

    இதனிடையே பிள்ளைத்தோப்பு கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சஜிதாவின் பெற்றோரான முத்துக்குமார்- மீனாவை அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்து விஜய் வசந்த் ஆறுதல் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
    • காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

    இதனை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுடன் சிறை பிடிப்பார்கள்.

    "பொது மக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

    அதன் பெயரில் மாவட்ட நிர்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.

    காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சாலையில் பாயும் கனரக வாகனங்களை பொதுமக்களுடன் இணைந்து சிறை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.
    • விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.

    சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.

    இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

    விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
    • வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    குளச்சல்:

    குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

    இதில் சாளை, நெத்திலி, வௌ மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடலில் தொடர் சூறாவளிக்காற்று எச்சரிக்கை காரணமாக கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய பின்பு சீராக மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றுள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன் தலா ரூ.180 வரை விலைபோனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    கிளி மீன் சீசன் தென்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. தொடர்ந்து கிடைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சில கேரை மீன்களும், ஒரு சில சுறா மீன், 2 திருக்கை மீன்களும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் அவர்களது வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது.

    இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அதன்படி விடுமுறைநாளான இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள், கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது.
    • சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ.45.90 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அம்பாசமுத்திரத்தில் உள்ள வேலம்மாள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது. மகள் வீடானது குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியில் உள்ளது.

    இதையடுத்து மருங்கூரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேணி வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை 7 மணிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கிருஷ்ணவேணி, அவரது கணவர் சங்கர் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் வரை நிரந்தர வைப்பு தொகை போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அது தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
    • தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

     அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.

    பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
    • நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்.


    கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் மற்றும் திங்கள் நகரில் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம் தலைமையில் நடந்த இந்த கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள் பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.


    இதனிடையே சவுதி அரேபியாவில் உடல் நல குறைவால் காலமான குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாய சுபீன் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை விரைவாக கொண்டு வர மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

    • ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார்.
    • சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. பின்னர் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தண்டவாளத்தில் மாட்டின் தலை, கொம்பு மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரெயில் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார். ரெயில் கற்கள் மீது மோதிய பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதாக கூறினார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தண்ட வாளத்தில் கற்களை எதற்காக அடுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றிய தகவல் வந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். இன்று காலையிலும் சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுபோதையில் வாலிபர்கள் கற்களை தூக்கி வைத்தார்களா? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×