என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 10 நாட்களுக்கு முன் புதிததாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இங்குள்ள மதுபான பாரில் குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த மதுக்கடையை மூடவேண்டும் என அப்பகுதியினர் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தங்களிடம் மதுக்கடை அமைக்க அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வாரவிடுமுறை நாட்கள் என்பதால் அதிகமானவர்கள் வந்து மது அருந்திவிட்டு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பகல் 12 மணிக்கு மதுபான கடை திறந்ததும் கடைக்குள் புகுந்தனர்.

    மதுபான கடைக்குள் கற்களையும் வீசி எறிந்தனர். பின்னர் மதுபான பாரில் மது அருந்த வந்தவர்களை விரட்டியடித்து அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். உணவு பொருட்களையும் தூக்கி எறிந்தனர். இதைக் கண்டதும் மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டனர். பாரில் இருந்த ஊழியர்களும், மது அருந்த வந்தவர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த மதுக்கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    சென்னை விமானநிலையத்தில் குவைத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக கோளாறு தெரியவந்ததால், 164 பயணிகள் உயிர்தப்பினர்.#ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு குவைத்திற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்கள். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல முயன்றபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

    இதனையடுத்து விமானம் ஓடுபாதைக்கு செல்லாமல் நடைமேடையில் நிறுத்தப்பட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. விமான நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் குழுவினர் வந்து எந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் உடனடியாக எந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்தபின்னர் விமானம் குவைத்திற்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனை வரும் உயிர்தப்பினர். #ChennaiAirport
    தாம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
    ஆலந்தூர்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 29). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள வேளச்சேரி சாலையில் கைக்கெடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை சந்தீப் பூட்டி விட்டு சென்றார்.

    வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க சந்தீப் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டார். இதுபற்றி சேலையூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு வேனில் வந்த கொள்ளையர்கள் கைக்கெடிகாரங்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் இருந்து ரூ.35 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கைக்கெடிகாரங்களை அவர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த மாதம் கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி நகர் வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்த மற்றொரு கெடிகாரக்கடையிலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கெடிகாரங்கள் கொள்ளைபோனது குறிப்பிடத்தக்கது. 
    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூரை அடுத்த தாழம்பூர் நத்தம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகள் ஜெயந்தி (வயது 27). எம்.காம் பட்டதாரி. இவரும் நாவலூர் கிராமத்தை சேர்ந்த கல்யாணக்குமார் என்பவரின் மகன் கண்ணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயந்தி, தனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுவதாக பாதுகாப்பு வேண்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

    நானும், கண்ணனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டோம்.

    திருமணம் செய்து கொண்டு எனது தாய் வீட்டில் வசித்து வந்தேன். நாங்கள் திருமணம் செய்தது எனது வீட்டில் தெரியாது. பின்னர் இதை தெரிந்து கொண்ட எனது தந்தை கமலக்கண்ணன், தாய் மீரா மற்றும் உறவினர்கள் கடந்த ஒரு மாதமாக என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். நேற்று முன்தினம் நான் எனது வீட்டில் இருந்து வெளியேறி எனது கணவர் கண்ணன் வீட்டுக்கு வந்து விட்டேன்.

    இதை தெரிந்து கொண்ட எனது குடும்பத்தினர் அடியாட்களுடன் எனது கணவரின் வீட்டை அடித்து நொறுக்கி அவரது உறவினர்களையும் அடித்து மிரட்டி வருகின்றனர்.

    எனது கணவருடன் வாழவே நான் விரும்புகிறேன். ஆகவே எனது பெற்றோர், உறவினர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்த முயன்றதாக அதன் டிரைவர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த 21 வயது மாணவி, பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு மின்சார ரெயிலில் வந்த அவர், அங்கிருந்து அய்யப்பன்தாங்கலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.

    ஆனால் ஷேர்ஆட்டோ அய்யப்பன்தாங்கல் செல்லாமல் போரூரில் இருந்து மாங்காடு நோக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை கடத்த முயல்வதை அறிந்து ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார்.

    இது பற்றி கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் அடையாறு துணை கமிஷனர் ரோகித்நாதன் மேற்பார்வையில் கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் இது தொடர்பாக கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர் கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன்(27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் தனது நண்பரான கோவூரை சேர்ந்த பவீன்(25) என்பவருடன் சேர்ந்து கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்திச்செல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஜனார்த்தனனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில், அந்த கல்லூரி மாணவி பல்லாவரத்தில் இருந்து ரெயிலில் கிண்டி வந்து, அங்கிருந்து தினமும் ஆட்டோவில்தான் அவரது வீட்டுக்கு செல்வார். அப்போது அனைவரிடமும் அவர் சகஜமாக பேசி பழகியதால் அவருடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட ஜனார்த்தனன், சம்பவத்தன்று தனது நண்பர் பவீனுடன் சேர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்காக ஷேர்ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

    கல்லூரி செல்லும் இளம்பெண்கள், வெளி நபர்களுடன் வெகுளித்தனமாக பேசி பழகுவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 
    சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் நெஞ்சு வலியால் துடித்த டீக்கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காஞ்சீபுரம்:

    சோழிங்கநல்லூரை அடுத்த நாவலூர் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் மணி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நேற்று காலை இருவரும் டீக்கடையில் இருந்தனர்.

    அப்போது மணி திடீரென்று நெஞ்சு வலியால் துடித்தார். இதை பார்த்து பதறிய லட்சுமி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் மணி மயங்கிய நிலையிலேயே கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    சுமார் 1 மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் மணியை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு லட்சுமி கதறி அழுதார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு வந்திருந்தால் எனது கணவர் உயிரை காப்பாற்றி இருக்கலாம். இப்போது நான் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று கதறினார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இப்பகுதியில் மருத்துவ வசதி கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 7 பேர் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர். 2 மாதத்துக்கு முன்பு முதியவர் ஒருவர் நெஞ்சு வலியால் துடித்தார். நாங்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்தோம். ஆனால் ஆம்புலன்ஸ் 3 மணி நேரத்துக்கு பின்பு வந்ததால் முதியவர் இறந்து விட்டார்.

    இங்கிருந்து மருத்துவ வசதிக்காக படப்பைக்கு 9 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். எனவே இப்பகுதியில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
    காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் மணல் திருடிய 3 பேரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த மாகரல் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் மர்மமான முறையில் வேன் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

    வீட்டுக்கு வெளியே படுத்திருந்த கிராம மக்கள் சந்தேகமடைந்து வேனை மடக்கிப் பிடித்து பார்த்த போது அதில் ஆற்று மணல் திருடப்பட்டு எடுத்துச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. வேனில் இருந்த 3 பேரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்,

    இது குறித்து மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 3 பேரையும் கைது செய்து வேனை பறிமுதல் செய்தார்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த 3 பேரில் ஒருவர் பழைய குற்றவாளி ஆவார். இவர்கள் மணல் திருடுவதற்கு வந்ததாகத் தெரியவில்லை. கொள்ளையடிப்பது போன்று வேறு நோக்கத்திற்காக வந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஊரப்பாக்கத்தில் அழகு நிலையம் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் அனிதா (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்றிரவு 7 மணியளவில் அலங்காரம் செய்வதற்காக ஊரப்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் அங்கிருந்து வெளியே வந்தார்.

    அவர் நடந்து சென்றபோது திடீரென 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர்.

    அவரது கையில் இருந்த விலை உயர்த்த செல் போனையும் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அவர் கூச்சல் போட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.

    அதற்குள் வழிப்பறி திருடர்கள் இருவரும் 2 மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த வாலிபர்களுடன் தப்பி செல்ல முயன்றனர். பொதுமக்களில் சிலர் அவர்களை விரட்டிச் சென்றனர்.

    சிறிது தூரத்தில் வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் வழிமறித்து பிடித்தனர். அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் நகையை பறித்த அந்த கும்பல் பல்லாவரம் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    ராஜ்குமார் (28), விமல்ராஜ் (23), கோகுலகிருஷ்ணன் (33), அபிராமன் (31) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வழிப்பறி செய்யப்பட்ட தாலி செயினும், செல்போனும் பொதுமக்களின் உதவியால் அந்த பெண்ணிற்கு கிடைத்தன. சரியான நேரத்தில் துணிச்சலான செயலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களை போலீசார் பாராட்டினர்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #Jayalalithaa
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சி உறுதியாக ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி ஏற்பட்டவுடன் தமிழக விவகாரத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படும். ஆட்சி அமைந்து ஒரு மாதம் கழித்து கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழகத்தின் நிலவரத்தையும், தமிழக மக்களின் உணர்வையும் எடுத்து கூறி தெளிவாக பேசுவேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது.


    குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக அப்பாவி மக்களை தாக்குவோர் மீது நியாயமான முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Jayalalithaa
    அரக்கோணத்தில் ரெயிலில் பயணிகளிடம் பணம் பறித்த திருநங்கைககள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து சென்னை, காட்பாடி, ரேணிகுண்டா ஆகிய மார்க்கங்களில் தினமும் ஏராளமான மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகிறது.

    ரெயில்களில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொல்லை கொடுத்து பணம் பறித்து வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்தது.

    அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார்ரஜாக் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அசீஸ்குமார், ஏட்டு மகேந்திரன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அரக்கோணம் அருகே ரெயில்களில் சோதனை செய்தனர்.

    அப்போது பயணிகளிடம் பணம் கேட்டு இடையூறு செய்த காட்பாடி, வாலாஜா, சென்னை பகுதியை சேர்ந்த 8 திருநங்கைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் கூறி ஜாமீனில் விடுவித்தனர்.

    வேலூர் ஆற்காடு ரோட்டில் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளிமாநில பயணிகளிடமும் திருநங்கைகள் சிலர் பணம் பறித்து வருகின்றனர். தினமும் இதுதொடர்ந்து நடக்கிறது. திருநங்கைகள் என்பதால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் புகார் கொடுப்பதில்லை.

    போலீசார் திருநங்கைகள் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் கண்முன்னே வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் குப்பன்(வயது 30). கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இவருடைய மனைவி தீபிகா.

    இவர், அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக வந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் கண்ணகி நகர் போலீசார், தீபிகாவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குப்பன், “அடிக்கடி என்னையும், எனது குடும்பத்தையும் தொல்லைபடுத்தி வருகிறீர்கள்” என்று கூறி மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்லக்கூடாது என்றார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளாமல் தீபிகாவை விசாரணைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த குப்பன், திடீரென போலீசார் கண் முன்னே தன்னிடம் இருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் ரத்தம் கொட்டியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், குப்பனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    மதுரவாயலில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கட்டிட பணியின்போது கால் தவறி கிணற்றில் விழுந்து தொழிலாளி பலியானார். 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது43). கட்டிட தொழிலாளி.

    இவர் மதுரவாயல் 4-வது தெரு வேல் நகரில் வசித்து வரும் ஓய்வு பெறும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டார்.

    கடந்த 7-ந்தேதி பணியில் ஈடுபட்டபோது ரமேஷ் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மதியழகன் வீட்டில் இருந்து கிணற்றில் அழுகிய நிலையில் ரமேசின் உடல் மிதந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ரமேசின் உடலை மீட்டனர்.

    விசாரணையில் ரமேஷ் பணியில் ஈடுபட்டபோது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாகி இருப்பது தெரிந்தது. 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாதுகாப்பு இல்லாமல் கட்டிட பணியில் ஈடுபட்டதாக காண்டிராக்டர் விநாயகம் மற்றும் மதியழகனை போலீசார் கைது செய்தனர்.

    ×