என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
    • த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    கோவை:

    தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    டெல்லியில் அவர் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் கரூர் சம்பவம் குறித்து அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்தபோது அண்ணாமலை, இலங்கையில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டு இருந்தார்.

    தகவல் அறிந்து அவர் உடனடியாக இலங்கையில் இருந்து கரூர் திரும்பினார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.

    உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். மேலும் த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் கரூர் வருகை தந்த பா.ஜ.க. விசாரணை குழுவுடனும் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்தநிலையில் அண்ணாமலை திடீரென டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    • சேலத்தில் 12 சதவீதம் குறைவாக மழை பொழியும்.

    கோவை:

    கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையையொட்டி உள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பை கொண்டு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழையும், பிற அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையின் சராசரி மழையளவு 810 மி.மீ. எதிர்பார்க்கப்படும் மழையளவு 890 மி.மீ. கரூர் மாவட்டத்தில் 15 சதவீதம், கிருஷ்ணகிரியில் 14 சதவீதம், சேலம் 12 சதவீதம் குறைவாக மழை பொழியும்.

    விழுப்புரம், திருப்பத்தூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் சராசரியை விட 10 சதவீதம் குறைவாக பொழியும்.

    இதர மாவட்டங்களில் 4 முதல் 9 சதவீதம் வரை மழை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
    • ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது.

    கோவை:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமமாலினி எம்.பி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் இன்று காலை கோவைக்கு விமானத்தில் வந்தனர். பிறகு அவர்கள் 10 காரில் கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.

    ஒரு காரில் ஹேமமாலினி எம்.பி அனுராக் தாக்கூர் எம்.பி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.

    கோவை அருகே கே.ஜி.புதூர் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீர் என பிரேக் பிடித்ததால் மற்ற கார்களும் அடுத்தடுத்து நிற்கத் தொடங்கின. அப்போது ஹேமமாலினி இருந்த காரின் பின்னால் ஒரு கார் லேசாக மோதியது.

    இதில் ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது. இதனால் காரின் இரண்டு புறமும் சிறிது சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாற்று கார் ஏற்பாடு செய்து கரூர் புறப்பட்டு சென்றனர்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறுதல் கூறி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்றது எப்படி என ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் (அமைப்பு) மற்றும் எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறார். இதற்கான கோவை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அங்கிருந்து கரூர் விரைகிறார்.

    • ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர்.
    • இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம்.

    த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை கரூர் சென்று ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குழுவை அவர் அமைத்துள்ளார்.

    இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,

    இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளோம் என்று கூறினார்.

    • வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது.
    • கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகத்திற்கு பெருமையும், சிறப்பும் சேர்த்து இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 5-ந் தேதி கோவை வருகிறார். 4-ந் தேதி சென்னைக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு நடக்கிறது.

    வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது. டி.ஆர்.பி. ராஜா மட்டுமின்றி, தி.மு.க. மூத்த தலைவர்களும் வட இந்திய தொழிலாளர் பற்றி அவமரியாதையாக பேசி வருவது என்பது முதல் முறையல்ல.

    வேத காலத்தில் இருந்து பெண்களுக்கு என்று சிறப்பான தனி இடம் இந்தியாவில் உள்ளது. இந்திய சுதந்திரம் மறுமலர்ச்சி ஆகியவற்றில் வட இந்திய பெண்களும் பங்களித்து உள்ளனர்.

    வட இந்தியாவில் பெண்களில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பின்தங்கி உள்ளது என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஏனென்றால் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து கல்வி ஆகியவற்றுக்கு அடித்தளம் இடுவதற்கு தவறியது காங்கிரஸ் கட்சி தான்.

    கடந்த 11 வருடங்களாக அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் வங்கி கணக்கு, தொழில் துவங்குவதற்கு பெண்களுக்கான சிறப்பு திட்டம் என இந்திய பெண்கள் அடுத்த தளத்திற்கு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் போது அரசியலுக்காக வடக்கு, தெற்கு என்று அவமானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.

    கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது. அவர்களுக்கு தேவைப்படக் கூடிய முக்கியமான நபர்களை அழைத்து கல்வியை பற்றி பேச வைத்துள்ளனர்.

    பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் நிலை தான் உள்ளது.

    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஜாதி ரீதியான மோதல்கள் இதையும் அவர்கள் சாதனையில் சேர்த்துக் கொள்வார்களா?. இதையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை கூப்பிட்டு விளம்பரத்திற்காக நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்..

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், சிவகார்த்திகேயன் தி.மு.க. அரசை புகழ்ந்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, தங்கள் மீதான விமர்சனங்களுக்கு இது போன்ற சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது தி.மு.க. அரசிற்கு புதிதல்ல. காலம் காலமாக அவர்கள் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.
    • பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி.

    கோவை:

    ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் நாளை (26ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தய சாலை, அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி. மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
    • பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர்.

    கோவை:

    கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 21-ந்தேதி இவர் சிலீவ் லெஸ் சுடிதார் அணிந்து கோவை பூ மார்க்கெட்டிற்கு வந்தார். அவரிடம் அங்கிருந்த பூ கடை உரிமையாளர் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்தபடி பூ மார்க்கெட்டிற்கு வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண்ணுக்கும், வியபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த இளம்பெண், ஆடை சரியாக தான் இருக்கிறது. உங்களது பார்வையை சரியாக வைத்துக்கொள்ளுங்கள் என வியாபாரியிடம் தெரிவித்தார்.

    பூ மார்க்கெட்டில் இருந்த சில வியாபாரிகளும் அந்த இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இளம்பெண் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆடைகுறித்து ஆபாசமாக பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். அதேபோன்று பூ வியாபாரிகள் சங்கத்தினரும் இளம்பெண் மீது புகார் அளித்துள்ளனர். அதில், பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால் வீடியோ எடுக்க வேண்டாம் என்றோம். வியாபாரிகளை தவறாக சித்தரித்து உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோவை அண்ணாசிலை பகுதியில் நடந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது,

    போலீசார் இதுதொடர்பாக புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், அங்கு படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.

    வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ஐயோ.. ஐயோ என கத்துகிறார். ஆனாலும் கொடூர நெஞ்சம் கொண்ட அந்த நபர், சிறுவனின் அலறல் சத்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.

    வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    இப்படி சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது.
    • 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    கோவை:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வருகிற அக்டோபர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    இந்த மாநாட்டிற்கான லோகோவையும் இணையதளத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் பங்கேற்க உள்ளன. 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. 2021-ம் ஆண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, லீடர் விருதை பெற்றோம். 2022-ல் சிறந்த செயல்பாட்டாளர் விருதை பெற்றது. தற்போது முதல் இடத்தில் நிற்கிறோம். இந்தியாவின் இதுவரை எங்கும் நடக்காத ஸ்டார்ட்அப் மாநாடு நடைபெறுகிறது. மற்ற மாநிலங்கள் வியக்கக்கூடிய அளவில் இது நிச்சயம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறுகுறு தொழிலாளர்களுக்கு, லைசென்ஸ் முதற்கொண்டு மின் இணைப்பு வரை எதுவும் விரைவாக கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டுகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த பகுதியில் பிரச்சனை என்று கூறுங்கள், அதை நிச்சயம் சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    கோவை:

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் டி.வி, ஏசி உள்பட பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து கோவையில் உள்ள டீக்கடை, உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அங்கு நேரில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    காந்திபுரத்தில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது கடையின் ஊழியர், முன்பு ஒரு கிலோ மைசூர் பாகு ரூ.420-க்கு விற்பனையானது. ஜி.எஸ்.டி குறைப்புக்கு பிறகு ரூ.380-க்கு விற்பனையாகி வருகிறது.

    சிப்ஸ் ஒரு கிலோ ரூ.640-க்கு விற்பனையாகியது. தற்போது ஒரு கிலோ சிப்ஸ் ரூ.540-க்கு விற்பனையானது. விலை குறைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாடிக்கையாளர்களும் சந்தோஷமாக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். நாங்களும் மன நிறைவோடு இருக்கிறோம். 2 பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது விலை குறைந்ததை தொடர்ந்து 3 பொருட்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இதற்கு நடவடிக்கை எடுத்தது யார் தெரியுமா? என கடையின் ஊழியரிடம் கேட்டார். அதற்கு அவர் பிரதமர் மோடி என்றார். உடனே அவருக்கு நன்றி கூறுங்கள் என அவர் தெரிவித்தார். கடை ஊழியரும் நிச்சயமாக பிரதமருக்கு நன்றி. பிரதமர் வந்த பிறகு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார். நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    அதன்பின் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கருத்து கேட்டறிந்தார். அப்போது ஒரு வாடிக்கையாளர், நான் மோட்டார் சைக்கிள் வாங்க வாகன ஷோரூமுக்கு சென்றேன். அவர்கள் இன்னும் சில நாட்களில் ஜி.எஸ்.டி. வரி குறைந்துவிடும். அதன்பின்னர் வந்து எடுத்து கொள்ளுங்கள் என்றனர். மேலும் இந்த கடையில் பொருட்கள் வாங்கும் போது, நேற்றை விட பொருட்கள் விலை குறைத்து விற்கப்படுவதகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும்போது, பிரதமரின் ஒரே நோக்கம் விலை குறைப்பு என்பது சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் . எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது. 5 மற்றும் 15 சதவீதம் என்று குறைந்துள்ளது. அது மக்களுக்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்தார். 

    • வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
    • கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

    கோவை:

    சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.

    ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

     

     

    இவ்விழாவில் பேசிய அமைச்சர் "இந்த விழாவை பார்க்கும் போது, இதன் பின்பு இருக்கும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை உணர முடிகிறது. ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நம் தேசத்தை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.

    கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்க சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். பாரதத்தின் உண்மையான திறமைகள் கிராமங்களில் தான் இருக்கிறது. அதே போன்று போதை ஒழிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளிலும் ஈஷா உதவ வேண்டும்" எனக் கூறினார்.

    விழாவில் சத்குரு பேசுகையில், "நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஆனால், மக்களை உடல் ரீதியாக பலவீனமான, மனரீதியாக குழப்பமான, கவனக்குறைவான மற்றும் திறமை, தகுதி, திறன்கள் இல்லாத சமூகமாக விட்டுவிட்டால், நாம் பெரிய பேரழிவாக இருப்போம்.

     

    இதுவே சரியான நேரம், நம்மிடம் இருப்பது பெரும் மக்கள்தொகை, நம் மக்களில் 50% இப்போது 30 வயதுக்குக் கீழ் உள்ளனர். அவர்களைத் திறம்படுத்தி, குறிப்பிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தினால், இந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டியிட முடியாது. உற்சாகமான மனிதர்களை நீங்கள் உருவாக்கி விட்டால் அவர்களை யாரும் நிறுத்த முடியாது.

    உற்சாகமான மனிதர்கள் மற்றும் இணைந்து செயல்படும் தன்மையை உருவாக்க வேண்டும். விளையாட்டு இதனை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உருவாக்கும். ஈஷா கிராமோத்சவம் 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.

    சாய்னா நேவால் பேசுகையில், "இங்கு இருக்கும் 15, 000-க்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகம் என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். ஆனால் இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அதன் பிறகு இங்கு தான் நடக்கிறது என அமைச்சரிடம் கூற நினைத்தேன். நம் தேசத்தில் விளையாட்டை வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஈஷா கிராமோத்சவம் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் சத்குருவிற்கு நன்றி" எனக் கூறினார்.

     

    செஸ் கிராண்ட் மாஸ்டர் வைசாலி பேசுகையில், "சத்குருவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி தோல்விகளை கடந்து களத்தில் விளையாடியதே வெற்றி தான். எனக்கு செஸ் விளையாட்டு, வெற்றி தோல்வி என்பதை தாண்டி என்னை வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. வெற்றி தோல்விகளை எவ்வாறு சமமாக எடுத்துக்கொள்வது, சவாலான சூழல்களில் அமைதியாக நடந்து கொள்வது போன்றவற்றை விளையாட்டு கற்றுத் தரும்." எனக் கூறினார்.

    17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வென்றது. கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

    வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது.

    இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

    இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.

    இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×