என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
    • ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் மழை இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் அதிகளவு வருவது மட்டுமின்றி அந்த நேரத்தில் அங்கு குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருக்கும்.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக கவியருவியில் கடந்த சில வாரமாக தண்ணீர் வரத்து சற்று குறைந்தது.

    இருப்பினும் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    காணும்பொங்கலையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள், கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் குளிப்பதற்கு போதிய இடமின்றி சுற்றுலா பயணிகள் தவித்தனர். இருந்த போதிலும் பலரும் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

    சில சுற்றுலா பயணிகள் அருவியில் ஒரு பகுதியில் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டை போல் தேங்கிய தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்துள்ளனர்.

    • வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.
    • ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனபகுதியில் யானை, கரடி, புலி. சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வசிக்கின்றன.

    இந்த வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.

    தமிழக - கேரள எல்லை பகுதியான அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வால்பாறை பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அந்த யானைகள் வால்பாறை சோலையார் அணையில் குளித்து குதூகலம் அடைந்தன. அணையில் தற்போது தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளிக்க ஏதுவாக இருந்தது. அந்த யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.

    தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கரும்புகளை ரேஷன் கடைகளில் வைத்துள்ளனர். இதனால் யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி கரும்புகளை ருசிக்க வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள பொது மக்கள் கரும்புகளின் சக்கைகளை வீட்டிற்கு வெளியில் போட வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது.
    • காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதனை காணவும், பலூனில் ஏறி பயணிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

    இன்று காலை ராட்சத பலூன்களில் வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் சில கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றன. இதில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தொடர்ந்து வெப்ப பலூன்கள் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரையும், அருகே பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட பலூன்கள் உள்ளன. இந்த பலூன்களில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.


    பலூன் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் ஏராளமானோர் இன்று காலை முதலே பொள்ளாச்சியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் வானில் பறக்கும் பலூன்களையும், ஒளி வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலூன்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பலூன் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடக்கிறது.

    இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்போர் பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் பறந்தபடி பொள்ளாச்சி நகரை பொதுமக்கள் ரசிக்கலாம்.

    • தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் முருக பெருமானின் 7-வது வீடு என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது மார்கழி மாதம் என்பதாலும், தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், இங்கு வந்து முருகபெருமானை தரிசித்து விட்டு ஐயப்ப பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இதனால் தற்போது அனைத்து நாட்களிலுமே மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மைக்காலமாக மருதமலை முருகன் கோவில் பகுதி மற்றும், அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் காணப்படுகிறது.

    குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

    நேற்று இரவு 7 மணிக்கு பக்தர் ஒருவர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது 3-வது வளைவில் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது.

    இது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சற்று தூரத்தில் நிறுத்தினார். மேலும் தனது செல்போனை எடுத்து, அதில் சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்தார்.

    இருளாக இருந்த இடத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை பார்த்ததும் சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்து கொண்டது.

    இதையடுத்து பக்தர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு கோவில் பகுதியில் தேர் நிறுத்தி வைத்திருக்கும் இடம் மற்றும் மலைப்படிக்கட்டில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது மீண்டும் மருதமலை முருகன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வனத்து றையினர் கோவிலு க்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மருதமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவன த்துடன் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும். மலைப்பாதையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவன த்துடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இதற்கிடையே மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் சிறுத்தை சுற்றி திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
    • கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்று (11-ந் தேதி) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதையடுத்து அவர் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சயான் ஆஜராகவில்லை என அவரது தரப்பில் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சயான் கேரளாவில் மற்றொரு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், அதன் காரணமாக அவரால் இன்று கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சயானிடம் வேறு ஒரு நாளில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர்.

    தமிழ்நாட்டின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர்.

    கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். 2017-ம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஈஷாவிற்கு வரும் மக்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

    மேலும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழுவாக வரும் அந்த பக்தர்கள் சமைத்து உண்பதற்காக, வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே தனி இடவசதியும், கூடுதலாக இலவச கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோவையின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.

    மேலும், ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம், கோவையில் ஆன்மிக சுற்றுலாவுடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிறங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.

    இதையடுத்து தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு சிரமமின்றி அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்து இருந்தது.

    தொழிறங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அதன்படி கோவை மாவட்டத்திலும் வழக்கம் போல இன்று பஸ்கள் இயங்கின.

    கோவை மாவட்டத்தில் கோவை உப்பிலிபாளையம், கருமத்தம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தலைமை பணிமனை, சுங்கம் 1,2, உக்கடம் 1,2, பொள்ளாச்சி 1,2,3, வால்பாறை என மொத்தம் 17 டெப்போக்கள் உள்ளன.


    இந்த டெப்போக்களில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் மட்டும் 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட அனைத்து வெளியூர்களுக்கும் 349 பஸ்கள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் இருந்து 951 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்களும் எந்தவித சிரமமும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் என அனைவரும் எந்தவித சிரமமும் இன்றி பஸ்களில் பயணம் செய்தனர்.

    வால்பாறையில் இருந்து அங்குள்ள எஸ்டேட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு 38 டவுன் பஸ்களும், பொள்ளாச்சி, கோவை, பழனி, சேலம், திருப்பூர், மன்னார்காடு போன்ற பகுதிகளுக்கு 6 பஸ்களும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று காலை வழக்கம் போல பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் என 43 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 43 பஸ்களும் வழக்கம் போல அதிகாலை முதலே இயங்கின.

    இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதிகளில் 50 சதவீத பஸ்களும், அன்னூரில் 90 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன. காரமடை, சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியதால் மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணித்தனர்.

    தொழிற்சங்கங்கள் போராட்டத்தையொட்டி, காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து துறையினர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி நிலவரப்படிக்கு புறப்பட்ட வேண்டிய 581 பஸ்களும் வழக்கம் போல புறப்பட்டு சென்றன. பஸ்கள் இயங்குவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். பஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாம் என்றனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியது. ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்கும், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் இருந்து வழக்கம் போல பஸ்கள் இயங்கியது.

    போராட்டத்தையொட்டி அனைத்து பஸ் நிலையங்கள், பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார்.
    • வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று, அந்த பகுதியில் 60 செல்போன் மற்றும் 19 தொலைபேசி டவர்களின் இடங்கள் பதிவாகி இருந்தது.

    இது தொடர்பான கேசட் ஒன்று திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த கேசட்டில் உள்ள தகவல்களை சேகரிப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 5-ந் தேதி கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கோர்ட்டு மூலமாக குஜராத் மாநிலத்திற்கு செல்போன் டவர்கள் தொடர்பான கேசட் அனுப்பப்பட்டது.

    அந்த கேசட் தந்தால் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு உதவும். அதில் இருக்கும் தகவல்களை கொண்டு, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அதனை தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனை ஏற்று, குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்தில் உள்ள கேசட் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது ஒரு வருடம் ஆகிவிட்டதால் அதனை நேரில் தான் எடுக்க முடியும் என்பதால் குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்குழு வருகிற 26-ந் தேதி திருச்சிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

    அவர்கள் திருச்சியில் உள்ள பி.எஸ்.என். அலுவலகத்தில், நேரில் சென்று, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகி இருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர். அதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியுள்னர். அதில், வருகிற 11-ந் தேதி காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரும் 11-ந் தேதி சயான் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

    தற்போது இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் பெறப்படும் தகவல்கள் முக்கியமாக பார்க்கப்படும் என்பதால் இந்த வழக்கு தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், தன்னிடம் சில ஆவணங்கள் உள்ளதாக கூறி சயான் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததும், அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் 66 ஆம்புலன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 2000-க்கும் மேற்பட்ட 108 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன. குறுகிய மற்றும் நீண்ட தொலைவில் உள்ள மலை கிராமங்களிலும் இந்த சேவையை வழங்க ஜீப் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் 66 ஆம்புலன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. விபத்து, கர்ப்பிணிகள், முதியோர், தற்கொலை முயற்சி மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை நாடுகின்றனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், உயிர்களை காப்பாற்றவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று சேவையாற்றி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டவர்கள் குறித்து 108 ஆம்புலன்ஸ் பிரிவு அதிகாரி செல்வமுத்துகுமார் கூறியதாவது:-

    கோவை நகரில் இருந்து 108 ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை உதவிக்கு அழைத்தால் 9 நிமிடத்திற்குள் சம்பவ இடத்தை அடையும் வகையில் துரித சேவை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2023) ஜனவரி 1 -ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கர்ப்பிணிகள் 16,962 பேர், பச்சிளம் குழந்தைகள் 1,091 பேர், விபத்தில் சிக்கிய 15,567 பேர், சர்க்கரை நோயாளிகள் 2,673 பேர், ஆம்புலன்சில் 33 பிரசவம், உடல் உபாதையால் பாதித்த 5,830 பேர் என மொத்தம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை கேட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தை கோவை மாவட்டம் பெற்று உள்ளது. கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை உதவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
    • பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    ஜே.என்.1 கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதையடுத்து கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் சராசரியாக 23 முதல் 29 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் கோவை-மும்பை இடையே தினமும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    உருமாறிய கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதவிர முதியவர்கள் குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
    • நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை உக்கடம் அருகே உள்ள வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி அகமது ஆகில் (வயது25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் சமையல் தொழிலாளி புதிதாக செல்போன் வாங்கினார். அந்த செல்போனில் அவர் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் போது அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வைத்து இருந்தார்.

    அந்த வீடியோக்களை காண்பித்து இளம்பெண்ணை மிரட்டி, அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    மேலும் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை மிரட்டி அவரும் பணமும் கேட்டு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்த இளம்பெண் பல்வேறு தவணைகளாக அகமது ஆகிலுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச புகைப்படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி அவருடன் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அகமது ஆகிலை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
    • நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை-பொள்ளாச்சி சாலையில் குறிச்சி கிழக்கு கரைப்பகுதியில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரதநாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என தலா 15 அடி உயரத்தில் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பைர் பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் அருகே திறந்தவெளி அரங்கம் போல பொதுமக்கள் நின்று பார்க்கும் வகையில் செல்பி பாய்ண்ட் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜல்லிக்கட்டு காளை, பொங்கல் பானை, தலையாட்டி பொம்மை, நடனமாடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது, சக்கரம் ஆகிய கட்டமைப்புகளும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மறுபுறம் உள்ள குறிச்சி சின்னக்குளத்தில், உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துகளை கொண்டு பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    25 அடி உயரத்தில் 25 அடி நீளம் 15 அடி அகலத்தில் இந்த சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று இதனை திறந்து வைத்தார்.

    இதேபோல் கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் 48 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் 7,800 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகும். இந்த நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகளுக்கு ஏற்ற நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்கள் படிக்க தேவையான நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலகத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அதேபோல கோவை பெரியகுளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் என்ற பொழுது போக்கு கட்டமைப்பையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    ×