என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Balloon Festival"

    • பலூன் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
    • சுமார் 300 அடி உயரத்துக்கு மேல் பறந்து செல்லும் வெப்பக்காற்று பலூனில் பயணிக்கும் போது பொள்ளாச்சியின் அழகான நிலப்பரப்பை, கழுகு பார்வையில் பார்க்க முடியும்.

    பொள்ளாச்சி:

    தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களான இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை பலூன் திருவிழா நடக்கிறது.

    பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இன்று காலை பலூன் திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டைனோசர், கரடி, கார்ட்டூன், டினோ உள்ளிட்ட வடிவிலான 10-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

    சுமார் 60 அடி முதல் 100 அடி வரை உயரம் கொண்ட இந்த ராட்சத பலூன்கள் தங்கள் வீடுகளுக்கு மேல் பறந்து சென்றதை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர். பலர் செல்போன்களில் வீடியோ எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தனர்.

    பலூன் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து இருந்தனர். சுமார் 300 அடி உயரத்துக்கு மேல் பறந்து செல்லும் வெப்பக்காற்று பலூனில் பயணிக்கும் போது பொள்ளாச்சியின் அழகான நிலப்பரப்பை, கழுகு பார்வையில் பார்க்க முடியும்.

    பொள்ளாச்சியில் காற்றின் வேகம், தட்பவெப்பம் ஆகியன இந்த விழா நடத்த ஏதுவாக அமைந்துள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.

    • 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது.
    • காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதனை காணவும், பலூனில் ஏறி பயணிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

    இன்று காலை ராட்சத பலூன்களில் வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் சில கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றன. இதில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தொடர்ந்து வெப்ப பலூன்கள் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரையும், அருகே பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட பலூன்கள் உள்ளன. இந்த பலூன்களில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.


    பலூன் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் ஏராளமானோர் இன்று காலை முதலே பொள்ளாச்சியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் வானில் பறக்கும் பலூன்களையும், ஒளி வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலூன்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பலூன் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடக்கிறது.

    இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்போர் பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் பறந்தபடி பொள்ளாச்சி நகரை பொதுமக்கள் ரசிக்கலாம்.

    • 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
    • யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

    பொள்ளாச்சி:

    சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக சுற்றுலாத்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. சென்னையில் கடந்த வாரம் பலூன் திருவிழா நடைபெற்றது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 10-வது ஆண்டாக நேற்று பலூன் திருவிழா தொடங்கியது.

    3 நாட்கள் நடக்கும் இந்த பலூன் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பலூன்கள் பறந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 6-ம் எண் கொண்ட யானை வடிவிலான ராட்சத பலூன் வானில் பறக்கவிடப்பட்டது.

    இந்த பலூனில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் பைலட்டுகள் இருந்தனர். அவர்களுடன் 2 பெண் குழந்தைகளும் பலூனில் பயணம் செய்தனர்.

    ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த பலூனை தரையிறக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் திசைமாறி வானில் சுற்றி கொண்டிருந்தது.

    பின்னர் திசை மாறிய பலூன் 30 கி.மீ தூரம் தாண்டி உள்ள கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பலூனில் இருந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இதற்கிடையே வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன், வயல் வெளியில் விழுந்த ராட்சத பலூனில் இருந்த ஆண், பெண் பைலட்டுகள், 2 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×