என் மலர்tooltip icon

    சென்னை

    • அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
    • ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

    2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

    புத்தாண்டுத் தொடக்கம் முதலே 'சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!' எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!

    உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை.
    • தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

    இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை.

    தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.

    • இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
    • அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.

    இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்.ஐ.சி. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது. முழு அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளனர்.

    இந்த நிலையில் அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் சமர்ப்பித்துள்ளனர்.

    இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 04-மற்றும் 05-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    01-ந்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    02 மற்றும் 03-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    04-மற்றும் 05-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    02-01-2026 மற்றும் 03-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
    • கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தி.மு.க. அமைத்துள்ளது

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.

    தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

    கடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு அதன் தேர்தல் அறிக்கை தான் மிக முக்கிய காரணமாகும். இந்த நிலையில், தி.மு.க.வும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது.

    துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தி.மு.க. அமைத்துள்ளது

    இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை பெறும் விதமாக பிரத்யேக செயலியை தி.மு.க. உருவாக்கி உள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

    • நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
    • கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையானது.

    நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினவிழா அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தினவிழா அணி வகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    • நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்.
    • தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைல்,

    தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் திமுக அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி சர்வேயை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி சர்வேவுக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவை தான், இன்னும் கேட்டால் சாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது.

    தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு இதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.

    இவை அனைத்துக்கும் மேலாக நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இதே சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி சர்வேயையும் மேற்கொள்ள முடியும். நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வேயை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம் தான் திமுகவுக்கு இல்லை.

    சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறது. அதனால் தான் இல்லாத காரணங்களைக் கூறி சாதிவாரி சர்வே நடத்த மறுக்கிறது. ஆனால், சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும் போது கண்டிப்பாக சாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி என்று கூறியுள்ளார். 

    • கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்.

    சென்னை:

    புத்தாண்டையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக இன்று முதல் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப ஜனவரி 3-ந்தேதி 525 பஸ்களும், 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார். 

    • பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு 'பை' மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டன.

    அதே போல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. இவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.

    அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை.

    இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்க உள்ளது. அது ரூ.3 ஆயிரமா? அல்லது ரூ.4 ஆயிரமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இது மட்டுமின்றி பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதன்படி 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 2,22,91,700 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 1,77,22,000 வேட்டியும், 1,77,64,000 சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    அதன் பிறகு பொதுமக்கள் எந்தெந்த தேதிகளில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த டோக்கனில் எழுதி கொடுப்பார்கள். அதன்படி சென்று ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

    பொங்கல் ரொக்கப் பணம் மற்றும் பரிசு தொகுப்பு விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை.
    • பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.

    சென்னை:

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது.

    மேற்கொண்ட புலன் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் இந்த குற்றத்தை செய்திருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு இளையோர் நீதிக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.

    மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

    இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடகதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
    • சிக்கலை தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக கோயம்பேடு இடையேயான நேரடி ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கிரீன் லைன் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்து, ப்ளூ லைன் விமான நிலைய சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதேபோல், க்ரீன் லைனில் இருந்து ப்ளூ லைனுக்கு பயணிக்கும் பயணிகளும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்டர்-காரிடர் சேவையைத் தவிர, கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் ரெயில்கள் இரண்டும் வார நாட்களின் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

    சிக்கலை தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் பகிரப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கு விற்றது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை சற்று குறைந்தது.

    சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.13,100 ஆக இருந்தது. சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்றது.

    தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கு விற்றது. சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு 3,360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கு விற்பனையாகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-12-2025- ஒரு கிராம் ரூ.281

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    ×