என் மலர்tooltip icon

    சென்னை

    • அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு EMU ரெயில் இயக்கப்படுகிறது.
    • ஒரு நாளைக்கு 4 முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம்- திருத்தணி இடையே நாளை முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு EMU ரெயில் இயக்கப்படுகிறது.

    காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும். திருத்தணிக்கு 10.40 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

    மதியம் 1 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 13.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். 13.30 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம் சென்றடையும்.

    மதியம் 2.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 15.10 மணிக்கு திருத்தணியை சென்றடையும். 15.20 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு 15.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

    • காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வரையிலான சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை.
    • காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள்...

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 15.08.2025 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    1. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும்.

    2. காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ் (NFS) சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணாசாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள் மேலே உள்ள அதே பாதையை பயன்படுத்தலாம்.

    3. ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் கார்னர், என்.எஃப்.எஸ் சாலை, இராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கி சென்று காமராஜர் சாலையை அடையலாம்.

    பாஸ்கள் உள்ள வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்/நிறுத்தங்கள்:

    4. சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 08.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாஜி சாலையில் சென்று தலைமைச் செயலக நுழைவாயிலின் முன் விருந்தினர் இறங்கிய பின், வாகனமானது தலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும்.

    காலை 08.30 மணிக்குப் பிறகு வரும் அழைப்பாளர் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாயிண்ட், இராஜா அண்ணாமலை மன்றம், என்.எஃப்.எஸ் சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு, தலைமைச் செயலக வெளிவாயில் முன் விருந்தினர் இறங்கிய பின், பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.

    5. காமராஜர் சாலையில் வரும் அழைப்பாளர்கள் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள் போர் நினைவுச்சின்னம், கொடி மரச்சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி சாலை, NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலகத்தின் வெளிப்புற வாயிலை அடைய வேண்டும். அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளிவாயிலில் இறங்க வேண்டும். நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட அனைத்து வாகனங்களும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • தூய்மை பணியை தனியாருக்கு கொடுத்ததை எதிர்த்து போராட்டம்.
    • கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது. இந்த நிலையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
    • கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியதாவது:

    தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்ற காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், வழக்கம்போல் கவர்னர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் வி.சி.க. பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • எங்களுடைய போராட்டம் 100 சதவீதம் உறுதியாக தொடர்கிறது.
    • நாங்கள் போராட்டத்தில் நிற்கிறோம். முடிந்தால் அப்புறப்படுத்தட்டும்.

    சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

    எங்களுடைய போராட்டம் 100 சதவீதம் உறுதியாக தொடர்கிறது. முதலமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோரிக்கை ஏற்பது என்றால்தான் அடுத்தக்கட்ட பேச்சுவாத்த்தை எனத் தெரிவித்துள்ளது. நாங்கள் போராட்டத்தில் நிற்கிறோம். முடிந்தால் அப்புறப்படுத்தட்டும் எனத் தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற விவாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள்.
    • மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டுவந்து அமர்த்தியுள்ளது என்றார்.

    சென்னை:

    மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டச் சொன்னோம். அரசு அதனை செய்யவில்லை. வழக்கம்போல் கூடுகிற மழைக்கால கூட்டத்தொடரிலும் விவாதப் பொருளில் அது சேர்க்கப்படவில்லை.

    எதிர்க்கட்சிகளின் தீவிரமான போராட்டத்திற்கு பின்பே "பஹல்காம் தீவிரவாத தாக்குதல்-ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விவாதம் நடத்த அரசு ஏற்றுக்கொண்டது.

    அந்த விவாதத்தில் கூட ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள். பஹல்காம் தாக்குதல், அதில் உயிரிழந்தவர்கள், பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எல்லையோர மக்கள் குறித்து பா.ஜ.க. அரசு ஒரு வார்த்தை பேசவில்லை.

    இந்திய ராணுவத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டுமோ அப்படிப் பயன்படுத்தவில்லை என்று நாங்கள் குற்றம்சாட்டினோம். தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததைப் பற்றி கேள்வி எழுப்பினோம். ஆனால் அது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.

    பாகிஸ்தானுக்குள் 100 கிலோமீட்டர் நுழைந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொன்னது அரசு. அது சார்ந்த அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமரால் மாநிலங்களவைக்கு வந்து சேர முடியவில்லை.

    தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரைத் தனது விளம்பர வெறிக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் அரசு, இன்று மேலும் ஒரு படி கீழிறங்கி மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளது.

    எப்படித் தாக்குதல் நடந்தது? தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்? பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? என நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

    • நீலகிரி மாவட்டத்தில்- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்- 12, சென்னை- 10, ஈரோடு- 10, மதுரை- 10, கோவை - 9 பள்ளிகள்.
    • ராமநாதபுரம் - 9, தூத்துக்குடி - 8, தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா - 7, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 6 பள்ளிகள்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்த ஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?

    வயிற்றுப் பசியால் ஏழை குழந்தைகளின் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்பதற்காக சத்துணவு தந்த சரித்திர நாயகர் புரட்சித் தலைவரும்; மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த புரட்சித் தலைவி அம்மாவும் முன்னெடுத்த கல்வித் துறையை, கடந்த 51 மாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள்.

    குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.

    மேலும், அரசுப் பள்ளிகளின் அருகிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையால், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதிலேயே பாதை மாறுகின்ற நிலையைப் பற்றியும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்காத பொம்மை முதலமைச்சர், தற்போதுதான் மாணவர்களை 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று விளம்பரங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்.

    இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், வாரிசு உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள்

    மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில்- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்- 12, சென்னை- 10, ஈரோடு- 10, மதுரை- 10, கோவை - 9, ராமநாதபுரம் - 9, தூத்துக்குடி - 8, தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா - 7, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 6 என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகளை இந்த பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு மூடியுள்ளது.

    இந்த 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால்' மூடப்பட்டு வருவதாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    எனது தலைமையிலான அம்மாவின் அரசு, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு மடிக் கணினி, படித்த ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் என்று பல திட்டங்களை செயல்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தது.

    ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசோ, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என மறுப்பு.
    • அவர் நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஆவார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுக பிரமுகரின் மனைவி எனக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

    காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?.

    இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

    • 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
    • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.

    இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (13/08/2025) சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் 'மண் காப்போம் இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்று இக்கருத்தரங்கம் குறித்து பேசினர்.

    சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மெகா பயிற்சி கருத்தரங்குகளும், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5 முதல் 10 வரையிலான ஒரு நாள் களப்பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.


    இதனுடன் கோவை செம்மேடு மற்றும் திருவண்ணாமலையில் மண் காப்போம் இயக்கம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி இயற்கை பண்ணைகளில் 3 மாத இலவச களப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை, 'இயற்கை விவசாய பயிற்றுநர்களாகவும்' உருவாக்கி வருகிறோம். அவர்களின் பண்ணைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O

    இன்றைய சூழலில் வேளாண் சார்ந்த சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆர்வம் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. இன்று நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 - 40 சதவீதம் சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்களும் முக்கியமான இடம் வகிக்கிறது. இதற்கான எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது.

    கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பினை தொடர்ந்து இந்தாண்டு எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O நடத்தப்படுகிறது.

    இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரை ஆற்ற உள்ளார்.

    கருத்தரங்கு பேச்சாளர்கள்

    இக்கருத்தரங்கில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதன் வளர்ச்சிக்கு உதவும் MSME திட்டங்கள், பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்வது குறித்த யுக்திகள், சந்தைப்படுத்துவதில் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    நபார்டு கடனுதவி திட்டங்கள் குறித்து நபார்டின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து 10,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சியளித்த குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் வசந்தகுமார், வேளாண் வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் MSME அரசுத் திட்டங்கள் குறித்து வணிக யுக்தி ஆலோசகர் எம்.கே.ஆனந்த், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    இவர்களுடன் நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்கள் குறித்து தஞ்சாவூர் வசீகரா வேதா விஜயா மகாதேவன், மதுரை தனா ஃபுட் பிராடக்ட்ஸின் தனலட்சுமி விக்னேஷ், பனங்கருப்பட்டி தொழில் நுட்பங்கள் குறித்து தூத்துக்குடி ஃபாம் இரா நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.

    கண்காட்சி

    இந்த கருத்தரங்கில் வேளாண் சார்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி
    • தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்

    திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    50 ஆண்டுகள்

    ஒரே துறையில்

    உச்சத்தில் இருப்பது

    அபூர்வம்

    ரஜினி

    நீங்கள் ஓர் அபூர்வ ராகம்

    புகழும் பொருளும்

    உங்கள்

    உழைப்புக்குக் கிடைத்த

    கூலி

    தொடரட்டும்

    உங்கள் தொழில்

    நிலைக்கட்டும்

    உங்கள் புகழ்

    "இளமை இனிமேல் போகாது

    முதுமை எனக்கு வாராது" என்று

    முத்து படத்தில் எழுதிய

    முத்திரை வரியால்

    வாழ்த்துகிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.
    • ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    திருவள்ளூா், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
    • சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?

    சென்னை:

    பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:

    மணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ, கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கும் லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டுள்ளார் திருப்பத்தூரில் உள்ள அனைத்து சிறுநீரகங்களையும் அகற்ற வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார். இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.

    மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்.எல்.ஏ.வே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், தி.மு.க. அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×