என் மலர்tooltip icon

    சென்னை

    • தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
    • அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதில் 30 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நல வாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக் கூடிய நலன்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதற்கு இந்த அரசு முனைப்புடன் உள்ளது.

    நமது முதலமைச்சர் கலைஞர் காலத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வரும் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் நலனிலும் முதலமைச்சரின் அரசு பெரும் கருணைக் கொண்டதாக இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.

    தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.

    6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். எனவே தூய்மை பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.

    அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த பிறகு பரிசீலிக்கப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு.
    • ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது என்றால் அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர்தான். சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும். தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

    அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு, அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார்.

    இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

    இதேபோன்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், அம்மா அவர்களின் காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

    இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    "செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்" என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
    • தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    * பணியின்போது இறக்கும் தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை.

    * தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.

    * தூய்மைப் பணியாளர்கள் துறைசார் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்க தனி திட்டம்.

    * தூய்மை பணியாளர்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம்.

    * தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணத்தை அரசே ஏற்கும்.

    * தூய்மை தொழிலாளர்கள் கடனுதவிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    * சென்னையை தொடர்ந்து மற்ற நகர்ப்புறங்களிலும் காலை உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்காக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    * நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும்.

    * கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை

    * தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

    * நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

    * தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களிலேயே புதிய வீடு கட்டித்தரப்படும்.

    தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம்.
    • அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும்.

    சென்னை:

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வக்கீல்கள் ரமேஷ், வேல்முருகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதுசம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரினர்.

    இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை பிற்பகல் விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர்.

    முன்னதாக, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல் துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

    இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம். அதற்கு உரிமை உள்ளது. அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது எனத் தெரிவித்தது.

    அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது.

    • தூய்மைப் பணியாளர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே...
    • தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வணக்கம் மு.க.ஸ்டாலின் அவர்களே...

    ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கொரோனாவின்போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி, அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.

    யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.

    நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?

    அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும்போது கசக்கிறதா?

    எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினீர்களே, நினைவில் இருக்கிறதா?

    "நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணிபுரியும், நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.

    தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

    சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.

    இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

    இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை.

    போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக வழக்கறிஞர் நிலவுமொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.

    நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது.

    தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
    • மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.

    பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.

    கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.

    நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இதேபோல் சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக போலீசார் 21 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதும், 3 போலீசாருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது.
    • தமிழகத்தில் கூலி படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.

    அவ்வகையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் தனுஷ் கூலி படத்தை கண்டு ரசித்து வருகிறார். 

    • போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும்.
    • திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.

    தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.

    தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-ஆம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ?

    ஒன்று மட்டும் உறுதி. ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறினார்.

    • ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. வார தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.75,000-க்கும், செவ்வாய் கிழமை ரூ.640 குறைந்து 74,360-க்கும், நேற்று ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கும் விற்பனையானது.

    தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-08-2025- ஒரு கிராம் ரூ.126

    12-08-2025- ஒரு கிராம் ரூ.126

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    09-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
    • அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

    குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?

    அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?

    அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    ×