என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?- இ.பி.எஸ்.
    X

    நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?- இ.பி.எஸ்.

    • தூய்மைப் பணியாளர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே...
    • தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வணக்கம் மு.க.ஸ்டாலின் அவர்களே...

    ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கொரோனாவின்போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி, அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.

    யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.

    நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?

    அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும்போது கசக்கிறதா?

    எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினீர்களே, நினைவில் இருக்கிறதா?

    "நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணிபுரியும், நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.

    தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

    சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×