என் மலர்tooltip icon

    சென்னை

    • கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
    • நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    அப்போது விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் நீதிபதி கூறியதாவது:-

    விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? தவெக பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம்?

    விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.

    வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்கள்?

    சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது

    சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது.
    • கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.

    கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது. கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.

    தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர்.

    கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

    ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா?

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்
    • இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா துறையினர் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என தவெக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். உடனே அதனை நீக்கவும் செய்தார். அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


    இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா? எனவும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    • கரூர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க உத்தரவு.

    கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மமுன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் குறித்து அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கரூர் விவகாரம் தொடர்பாக அஸ்ரா கார்க் ஐஜி வடக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்துள்ளது.
    • தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

    கடந்த சனிக்கிழமை, கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.

    இதற்கிடையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க தங்கள் கட்சி எம்.பி.க்கள் குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த குழுவில் பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இந்த குழு கரூரில் ஆய்வு செய்து, பலரிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து கேட்டறிந்து வருகிறது. மேலும் குழு கொடுத்த பேட்டியில் தமிழக அரசை குற்றம்சாட்டியது. குறிப்பாக தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. அனுராக் தாக்கூர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்கள் குழு சார்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில்,

    "இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகள் என்னென்ன?

    நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த சோக நிகழ்வுக்கு வழிவகுத்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

    எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு என்ன திட்டமிட்டுள்ளது? உள்ளிட்டவறிற்கான பதில்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது.
    • வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

    சென்னை:

    கரூர் சம்பவத்தில் விஜய் மீது போலீசார் ஏன் இதுவரையில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள அவர் இவ்வாறு கருத்து கூறிய நிலையில் அதற்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் திருமாவளவனிடம் இது குறித்து சிறப்பு பேட்டி காணப்பட்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதன் நோக்கம் என்ன?

    பதில்:- விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. அவரை கைது செய்து சிறையில் அடக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் விஜயை போல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான். ஆனால் விஜய் மீது மட்டும் வழக்கு போடவில்லை. இது ஒரு தலைப்பட்சமான அணுகுமுறை என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள். அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்.

    பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யும்போது ஏன் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது. அவரும் அங்கு வந்து சென்றிருக்கிறார். காவல்துறை ஒரு சாரராக செயல்படுவதாக நான் அறிகிறேன்.

    கே:- தி.மு.க. கூட்டணியில் தாங்கள் இருந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கருத்து கூறுவது சரியா?

    பதில்:- கரூர் சம்பவத்தை பொருத்தமட்டில் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சரியானது தான். இதை அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதாக ஏன் பார்க்க வேண்டும். விஜய்க்கு எதிராக பேசுவதாக ஏன் பார்க்க வேண்டும். போலீஸ் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க கூடிய நிலையில் ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு விஜய் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை. கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருக்கலாமே?

    இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் முறிவு ஏற்பட வாய்ப்பு இல்லை.

    கேள்வி:- கரூர் சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பாடமாக அமைந்துள்ளதா?

    பதில்:- இந்த சம்பவம் விஜய்க்கு மட்டும் பாடமல்ல பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பாடம்தான். பொதுக்கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வரக்கூடிய அரசியல் தலைவர்கள் அவர்களை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்ற சமூகப் பொறுப்பை கொடுத்துள்ளது. இது அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.

    கேள்வி:- கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

    பதில்: இந்தப் பிரச்சனை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் விஜய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., ஜி.கே.வாசன் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.

    தேர்தல் வரை இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டால் கவலை தருவதாக அமைந்துவிடும். இதை வைத்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.

    கேள்வி:- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை பற்றி?

    பதில்:- கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் செயல்பாடு பாராட்டுக்குரியது. அவர் நேரில் சென்றதால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய உயிர் பலி தடுத்து நிறுத்தப்பட்டது.

    கேள்வி:- கரூர் சம்பவத்தில் விஜயின் அணுகுமுறை எப்படி?

    பதில்:- அவருடைய பேச்சுக்கள் எல்லாம் தி.மு.க. மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் பொதுக்கூட்டத்தில் எந்த செய்தியும் கொடுக்கவில்லை. அவருடைய பேச்சு அணுகுமுறை இதே நிலையில் நீடித்தால் விஜய் பொது மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விடுவார்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தையின் தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளது?

    பதில்:- விடுதலைச் சிறுத்தைகள் பொருத்தவரையில் தேர்தல் பணி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தான் தொடங்கும். புதிய மாவட்ட செயலாளர்கள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நியமிக்கப்படுவார்கள். பூத் கமிட்டி அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் ஜனவரி மாதத்தில் இருந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.

    கேள்வி:- வருகின்ற தேர்தல் தி.மு.க. கூட்டணிக்கு எப்படி இருக்கும்?

    பதில்:- வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. திரைப்படத்தின் அடிப்படையில் ரசிகர்கள், இளைஞர்கள் அவரிடம் இருக்கிறார்கள். அவரால் தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது. ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    • புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
    • த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் அறிவுறுத்தல்

    த.வெ.க. சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என விஜய் தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

    மேலும் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    • முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
    • கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?

    நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!

    அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.

    எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோன்று தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறியுள்ளார். 

    • தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20-ந்தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

    தீபஒளித் திருநாளுக்கு குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வாங்கி தீபஒளிக்கு தயாராக முடியும்.

    வழக்கமாக தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.

    ஆனால், அக்டோபர் 20-ம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் 17 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை; அறிவிப்பும் வரவில்லை.

    பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசு, மிகை ஊதியம் வழங்குவதிலும் துரோகத்தைத் தொடருமோ? என்று பொதுத்துறை பணியாளர்கள் சந்தேகப்படுகின்றனர். தொழிலாளர்களின் சந்தேகம் சரியானது தான்.

    தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அது அடுத்த இரு நாட்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
    • கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

    சென்னை:

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

    இதுதொடா்பாக பல் துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

    அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) 'கோல்ட்ரிஃப்' மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அங்கிருந்து அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.

    அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு 'கோல்ட் ரிப்' மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்து உள்ளாா்.

    • நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்தது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி (நேற்று முன்தினம்) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்தது.

    காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, நேற்று முன்தினம் விலையிலேயே நேற்று விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்ம் 10,840 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 86,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.161-க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600

    30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880

    29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

    28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-10-2025- ஒரு கிராம் ரூ.164

    01-10-2025- ஒரு கிராம் ரூ.161

    30-09-2025- ஒரு கிராம் ரூ.161

    29-09-2025- ஒரு கிராம் ரூ.160

    28-09-2025- ஒரு கிராம் ரூ.159

    • சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி என்.செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    ×