என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்ட்தில் அமைந்துள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தினையும் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50-ம், மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு) தலா ரூ.

    100-ம், பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70-ம் தேர்வு கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் 25, 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000). தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்படங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.
    • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி கூட்டி உள்ள தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே கர்நாடகா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து இப்போது கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு நேற்று கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.

    அதை பெற்றுக் கொண்ட பினராயி விஜயன் மத்திய அரசின் ஒருதலைபட்சமான தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனவே கேரள மாநிலத்தில் இருந்தும் 22-ந்தேதி கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

    • டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
    • பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

    வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

    முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

    புதிய தொழில்நுட்பங்கள்,

    சிறு குறு விவசாயிகள் நலன்,

    மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

    டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

    வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

    எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
    • சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

    திருச்சி:

    இன்றைக்கு இயற்கை மரணங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்து விட்டன. கோழைத்தனமும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை இந்த துயர முடிவுக்கு தள்ளி விடுகிறது.

    முன்பெல்லாம் தற்கொலைக்கு காதல் தோல்வி, கடன் பிரச்சனைகள், தீராத வியாதி போன்ற வலுவான காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

    இதில் வயது வரம்பு இல்லை. 10 வயது முதல் வயதான முதியவர் வரை வயது வித்தியாசம் இன்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தற்கொலைகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பல பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறார்கள்.

    குடும்பத் தலைவரின் தற்கொலை முடிவு ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று விடுகிறது. இது வேதனையின் உச்சமாக இருக்கிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அலுவலக அறையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவருக்கென்ன ராஜா மாதிரி என்பார்களே அந்த இடத்தில் தான் பெல் அதிகாரியும் இருந்தார். மத்திய அரசு பணி, மனைவி தனியார் பள்ளி ஆசிரியை, புகழ்பெற்ற என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஒரே மகள். அவருக்கு என்ன பிரச்சனையோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் குடும்ப அளவில் பெரிய கடன் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை.

    இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 நாட்களில் சென்னை திருமங்கலத்தில் டாக்டர், தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானது. இவர் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு சேலம் தொழிலதிபர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுக்கோட்டை அருகே காரில் குடும்பத்தோடு வந்து, தன்னை மாய்த்துக் கொண்டதுடன் தனது வயதான தாய், மனைவி, மகன், மகள் அனைவரையும் விஷம் அருந்த செய்து அனைவரும் காருக்குள்ளேயே பிணமாக மீட்கப்பட்டனர்.கரூரில் கடந்த மாதம் ஒரு தொழிலாளி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை திருவொற்றியூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாத கணவர் தனது 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்வாறு நாளும் பொழுதும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் அழைக்கும் வரை வாழ்ந்து விட வேண்டும்.

    இதுபோன்ற துயர முடிவுகளுக்கு நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் என இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது.

    தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.

    சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

    சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடு கிறார்கள். இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.

    உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல் போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொரு வரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆக வாழ்க்கை வாழ்வதற்கே.... சாவதற்கல்ல...

    • இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 அதிகமாக இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    18-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி மற்றும் 21-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    இன்று மற்றும் நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும்.

    18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
    • திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.

    கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?

    பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?

    நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார். 



    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி தமிழ் பிரியா. தம்பதியின் மகள் பூஜா (வயது 21). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்தார்.

    இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.

    அதே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சரண்ராஜ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரண்ராஜ் பெயிண்டர் வேலை மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். தன்னைவிட 2 வயது குறைவான வாலிபராக இருந்தாலும் சரண்ராஜ் மீது பூஜாவுக்கு காதல் மலர்ந்தது.

    அடிக்கடி தனிமையில் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. தன்னுடைய மகள் படிப்பை கூட பார்க்காமல் பூஜாவை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்துச் சென்று விட்டனர். காதலனிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதால் பூஜா மனமுடைந்து காணப்பட்டார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர். மகள் காணாமல் போனதாக தமிழ் பிரியா கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தேடி வந்தனர்.

    வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதலனை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இனி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படாது என்ற நினைப்பில் இருவரும் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ் முகாமுக்கு வந்தனர்.

    இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூஜா காதலனுடன் பாதுகாப்பு கேட்டு ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணிக்கு வந்தனர்.

    அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டருக்கு முன்பாக உள்ள ஒரு கோவில் அருகே மடக்கினர்.

    காரில் இருந்து காதல் ஜோடி இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

    சத்தம் கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வெளியே வந்தனர். அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பூஜாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அடித்தனர். அவருடைய தாய் தமிழ் பிரியா பூஜாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினார்.

    போலீசார் கண்முன்னே சரண் ராஜை அடித்து தள்ளிவிட்டு பூஜாவை காரில் அழைத்து சென்றனர். காதல் மனைவியை மீட்க முடியாமல் சரண்ராஜ் அழுது துடித்தார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சில நிமிடங்களில் அரங்கேறி விட்டது.

    பூஜாவை கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    காதல் கணவனிடம் இருந்து பிரித்ததால் பூஜா மனம் உடைந்தார். வாழ்வில் விரக்தி அடைந்த அவர் உடல் முழுவதும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். அவருடைய குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பூஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு பூஜாவின் உடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைத்த இந்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் நடந்தது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம் அவர்கள் வரவில்லை நாங்கள் என்ன செய்வது என அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஆரணி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் காதல் ஜோடி தாக்கப்படுவதை தடுத்து இருந்தால் இளம்பெண் உயிரிழப்பு நடந்திருக்காது இது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் அணிந்து இருந்த தாலியை கழட்டி வீசிய காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரிக்கப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த சரண்ராஜ் விரக்தியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி., மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்தார்.
    • மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியஸ்ரீ. இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவர் தாயார் இறந்த நிலையில், யானைக்கால் நோயால் பாதிப்படைந்த தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயை கொண்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தந்தை இரவில் சமைத்து தரும் உணவை உண்டும், மறுநாள் மதியம் தானும், தனது தம்பியும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவோம் எனவும், சிறு குடிசையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும் தனது துயரத்தை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

    இதையடுத்து மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி. சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நிதியுதவி வழங்கினார்.

    மேலும் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து வீட்டிற்கே நேரில் உதவி செய்த முரசொலி எம்.பி.க்கு மாணவி நித்யஸ்ரீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

    • சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார்.

    கன்னியாகுமரி:

    மத்திய தொழில் பாதுகாப்புப்படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

    "சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம் செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிள் பேரணி ஒரு விளையாட்டு நிகழ்வாக மட்டுமின்றி தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இதன் முக்கிய நோக்கம். வடக்கு, தெற்கு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேரணி நடந்து வருகிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வருகிற 31-ந்தேதி நிறைவு செய்கின்றனர்.

     

    இந்த பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். இதைத்தொடர்ந்து இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள்.
    • அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொது பட்ஜெட்டும், இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக நேற்றும், இன்றும், அவையில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற இரண்டு நாட்களிலும் முன்னாள் அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில், கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். செங்கோட்டையனுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும். நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை. அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி என்றார்.

    முன்னதாக, சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்று அவரை சந்தித்து பின்னர் அவை நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டு செங்கோட்டையன் தனித்து செயல்படுவதால் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

    • வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும். சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.

    நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்" என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இவர்களின் பணி நிலை குறித்த துல்லியமான விவரத்தை வெளியிடும்படி பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

    திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது '' என்று கூறியிருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?

    அதேபோல், மொத்தப் பணியாளர் எண்ணிக்கை உயரும் போது உள்ளாட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் அல்லது அதே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 709-லிருந்து 21,866 ஆக 11 ஆயிரம் பேர் குறைந்தது எப்படி?

    அதேபோல், வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 பணிகளுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த 7 பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் கூட தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் பேரை எவ்வாறு தேர்வு செய்ய முடியும்?

    ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.
    • இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

    * ஒன்றே முக்கால் மணி நேரம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது தான் சாதனையே தவிர, பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

    * விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்பது போலி தோற்றம் என நிரூபணம் ஆகி உள்ளது.

    * வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை, ஏமாற்றம் மட்டுமே.

    * பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் கூட்டு போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    * தவறு செய்வதற்கு வசதியான திட்டங்களை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை.

    * பட்ஜெட்டில் கூறியபடி சாகுபடி பரப்பு எதுவும் அதிகரிக்கவில்லை, குறைந்துதான் போய் உள்ளது. சாகுபடி பரப்பு 1.2 சதவீதம் குறைந்துள்ளது, அதிகரிக்கவில்லை.

    * இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    * தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.

    * ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் வேளாண் பட்ஜெட்டில் உள்ளதே தவிர புதிய திட்டங்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×