என் மலர்
உள்ளூர் செய்திகள்
+2
- ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது.
- சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகத்தினர் அதற்கான பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது.
இது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வண்ணங்களில், பல்வேறு வகைகளில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
மேலும் மலர்கண்காட்சி நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
- தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், நாளை (சனிக்கிழமை) மற்றும் 28-ந்தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 55 பஸ்களும் இந்த இடங்களில் இருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
- தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரியின் பிரதான கிழக்கு கரையின் நீளம் 16 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்களாகும். மொத்த நீர்மட்டம் 47.50 அடியாக இருந்தாலும் தரை மட்டம் 31.90 அடியில் இருந்தே நீரை சேமித்து வைக்க முடியும். அதாவது 15.60 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் 1.465 டி.எம்.சி. நீரை தேக்கலாம்.
கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் 49 ஆயிரத்து 440 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
இங்கிருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை பெருநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 78 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி 48 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரினால் கூடுதலாக 509 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
எதிர்வரும் மழைக்கு முன்பாக வீராணம் ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் எனவும், ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே சமயம் வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால் சிறுவர்கள் அதை விளையாட்டு மைதானமாக மாற்றி விட்டனர்.
அங்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. இது கடும் வறட்சியால் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியின் பரிதாப நிலையை காட்டுகிறது.
- கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.
மதுரை:
சித்திரையில் முத்திரை பதிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடை பெற்றது. முத்தாய்ப்பாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக் கல்யாணமும், 22-ந் தேதி தேரோட்டமும் நடந்தது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வரும் நிலையில் கள்ளழகர் கோவில் சித்தி ரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகடப்படிகளில் எழுந்தருளி கள்ளழகர் அருள்பாலித்தார்.
மறுநாள் 22-ந் தேதி புதூரில் வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவி லில் கள்ளழகர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. 23-ந் தேதி அதிகாலை கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி காலை 6 மணி யளவில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெரு மாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு முழுவதும் அங்கு திருவிழா களைகட்டியது.
24-ந் தேதி காலை சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனி வருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார கோலத்தில் கள்ளழகர் காட்சி அளித்தார்.
நேற்று (25-ந் தேதி) காலை மோகினி அலங் காரத்தில் பக்தி உலா நடந்தது. பின்னர் ராஜாங்க அலங்காரத்தில் அருள் பாலித்த கள்ளழகர் தடம் பார்க்கு நிகழ்வுக்காக மீண்டும் வைகையாற்று பகுதியில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வந்த கள்ளழகருக்கு திருமஞ்ச னம் நடந்தது. இன்று அதி காலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பாடானார்.
காலையில் மூன்று மாவடி, ரேஸ் கோர்ஸ், தாமரை தொட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது சர்க்கரை தீபம்ஏந்தி வழி பட்டனர்.
வழிநெடுகிலும் மண்டகப் படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு களித்தனர்.
இன்று இரவு அப்பன் திருப்பதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அங்கு விடிய, விடிய நடக்கும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்பார்கள். பின்னர் நாளை (26-ந் தேதி) காலையில் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் மலையை சென்றைடைவார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவுபெறும்.
- தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
- மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வருகின்றன.
இதுபோக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, கீரை வகைகள், பழங்கள் வருகிறது. அந்த வகையில், தினமும் 700-க்கும் மேற்பட்ட லாரிகளில் 7 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பால் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது.
எனவே, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி மற்றும் பழங்களின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் 850 பழக்கடைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் பழங்களின் விலை அதிகரித்து வருகின்றது. பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் தேவை காரணமாக பழங்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களின் விலை ரூ.25 வரையிலும், திராட்சை, அன்னாசி, கிர்ணி போன்ற பழங்களின் விலை ரூ.10-ம் உயர்ந்துள்ளது. தர்பூசணி விலை ரூ.5 அதிகரித்துள்ளது.
அதேநேரம், மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.260 வரை விற்பனையான மாதுளை தற்போது ரூ.240-க்கு விற்பனையாகிறது. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியிருப்பதால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையான மாம்பழம், தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் மாம்பழம் விலை குறையவே வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
- பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்
அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.
வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.
மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.
அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.
அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு
- புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்
சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:
மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம்.
புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். சில விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். வேறு எந்த ஊடுப்பயிருலும் இந்தளவுக்கு அதிக லாபம் எடுக்க முடியாது. மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.
குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் திரு. சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
இதுமட்டுமின்றி, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும்.
இக்கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சியில் உள்ள முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன் அவர்களின் இயற்கை விவசாய பண்ணையில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
- புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.
- சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு
1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக ஜானகிராமன் என்பவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி பெயரிலும் அப்போதைய மதிப்பில் 32 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுற்ற நிலையில், முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் இரண்டாம் குற்றவாளியான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
- ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவு.
- தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
- சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
- அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
- இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.
சென்னை:
எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.
எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.
ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.
இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.
விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-
"வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி என்றார்.
ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.






