search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Meiyanathan"

    • காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு
    • புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்

    சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:

    மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம்.

    புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். சில விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். வேறு எந்த ஊடுப்பயிருலும் இந்தளவுக்கு அதிக லாபம் எடுக்க முடியாது. மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

    இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.

    குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் திரு. சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.

    இதுமட்டுமின்றி, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும்.

    இக்கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சியில் உள்ள முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன் அவர்களின் இயற்கை விவசாய பண்ணையில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும்.
    • இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    மரங்கள் வளர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயா பிறந்த ஊரில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மிளகு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பயிர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் தான் வளரும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், வெப்பம் அதிகம் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதில் நன்கு லாபமும் பார்த்து வருகின்றனர்.

    விவசாயிகளாகிய உங்களால் தான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க முடியும். வெப்பமயமாதல் என்னும் பிரச்சினை உலகளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதில் மரங்கள் வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் விவசாயிகளாகிய நீங்கள் முன் களப் பணியாளர்களாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனின் வேண்டுகோளின்படி, சந்தன மரங்களை வளர்ப்பதிலும், அதை வெட்டுவதிலும் விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகளை நீக்குவதற்கு தமிழக முதல்வருடன் நான் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வேன்.

    தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில், "சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் வருமானத்தையும் ஒரு சேர அதிகரிப்பதற்கு மரம்சார்ந்த விவசாய முறை தான் சிறந்த தீர்வு. மரப் பயிருக்கு மாறும் விவசாயிகள் அதை அறுவடை செய்யும் போது லட்சங்களிலும் கோடிகளிலும் லாபம் எடுக்க முடியும். அதேசமயம் அறுவடை காலம் வரை அவர்கள் காத்திருக்காமல் மரம் நட ஆரம்பிக்கும் சமயத்தில் இருந்தே தொடர் வருமானம் பார்க்கும் பல்வேறு வழிமுறைகள் நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம்.

    குறிப்பாக, சமவெளியில் மரங்களுக்கு இடையே மிளகு சாகுபடி செய்வது குறித்து கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறோம். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற நறுமணப் பயிர்களையும் மரங்களுக்கு இடையே ஊடுப் பயிராக வளர்த்து விவசாயிகள் தொடர் வருமானம் பார்க்க முடியும்.

    வெற்றி விவசாயிகளிடம் இருந்து அந்த வழிமுறைகளை மற்ற விவசாயிகள் அறிந்து கொள்வதற்காகவே இப்பயிற்சி நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதுதவிர, காய்கறிகள், மஞ்சள், வாழை, சிறுதானியங்கள், கால்நடை வளர்ப்பு என பல வழிகளில் மரம்சார்ந்த விவசாய முறையில் வருமானம் பார்க்க முடியும்." என்றார்.

    இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமவெளியில் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று மற்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

    குறிப்பாக, இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன், திருச்சூரைச் சேர்ந்த ஜாதிகாய் விவசாயி திருமதி. சொப்னா சிபி கல்லிங்கள், மதுரையைச் சேர்ந்த தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் திருமதி ஜோஸ்பின் மேரி, நிகழ்ச்சி நடந்த தோட்டத்தின் உரிமையாளரும் முன்னோடி விவசாயியுமான திரு.செந்தமிழ் செல்வன் உட்பட ஏராளமான விவசாயிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    • பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு வேதனை அளிக்கிறது.
    • திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வந்திருக்கிறது.

    எனினும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு என்ற தகவல் மனதுக்கு வேதனையை அளிக்கிறது. எதிர்காலத்தில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்.
    • மாவட்டங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து அகற்ற ஏற்பாடு.

    நந்தம்பாக்கம்:

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் தயாரிப்பு குறித்த தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், 


    பிளாஸ்டிக்கால் கணினி, செல்போன் போன்ற நன்மைகள் கிடைத்துள்ள போதும், பல தீமைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றார். கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்ட என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நினைவு கூர்ந்தார்.

    பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மரம், சணல், மூங்கில் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து பேசிய தமிழக அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது என்றார். புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுத்து அகற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆவின் பால் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க அழைப்பு.
    • பிரதமர் மோடியுடன், திமுக எம்.பி.க்கள், டி.ஆர். பாலு, கனிமொழி சந்திப்பு

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பிரதமர் மோடியிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கடந்த 15ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

    அப்போது முதலமைச்சர் சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.  


    அதனைத் தொடர்ந்து, இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர் சந்தித்து, 28.7.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான "தம்பி" சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
    • போட்டியில் 187 நாடுகளை சார்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பணிகளை மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழக முதலமைச்சர் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். போட்டி நடைபெறவுள்ள பூஞ்சேரிக்கு கடந்த 12-. ந்தேதி நேரடியாக வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்கள்.

    இன்று போட்டி நடைபெறவுள்ள இடத்தில் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். செஸ் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் 22 ஆயிரம் சதுர அடியில் உள்ள அரங்கம் 1-ல் 196 செஸ் டேபிள் , போர்டுகளும், உலகத்தரம் வாய்ந்த வகையில் 52-ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகின்ற பிரமாண்ட அரங்கம் 2- ல் 512 செஸ் டேபிள் , போர்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

    அரங்கம் 1- ல் 49 அணிகளும், அரங்கம் 2- ல் 128- அணிகளும் விளையாடுகின்றன. ஏறத்தாழ ஒரு நாளைக்கு 177 அணிகள் விளையாடுகின்ற இப்போட்டியில் 187 நாடுகளை சார்ந்த வீரர் - வீராங்கனைகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கத்தில் தரைதளம், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. 

    போட்டியில் பங்கேற்க வருகை தரவுள்ள வீரர்கள், நடுவர்கள், விருந்தினர்கள் அனைவரையும் தமிழர் பண்பாடு, கலாச்சாரம், விருந்தோம்பல் படி தழிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வருக, வருக என வரவேற்க காத்திருக்கிறோம்.

    நேற்று செஸ் போட்டிக்கான டீசர் மரியாதைக்குரிய நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார் . நம் முதல்வர் பங்கேற்றள்ள இந்த டீசர் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×