என் மலர்tooltip icon

    டெல்லி

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் நிஷிமோட்டோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • தொடர் போராட்டங்களால் ஈரானில் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்து முடங்கியது.

    புதுடெல்லி:

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

    ஈரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.

    தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியது.

    இந்தப் போராட்டங்களால் நாடு முழுவதும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு கடந்த 5-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

    இந்நிலையில், ஈரானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதை அடுத்து, இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மீண்டும் ஒருமுறை தீவிரமாக அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இதற்கிடையே, முதல் ஒருநாள் போட்டியின்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இந்நிலையில், காயம் குணம் அடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய்வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.

    * தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

    * விவசாயிகளுடனான உறவை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

    * கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது.

    * விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

    * விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பை பற்றி பேசுகிறது திருக்குறள்.

    * விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    * விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * சுற்றுச்சூழலை பாதுகாப்பதே எங்களின் முதல் நோக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது.
    • இளைஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.

    ஊழலை கட்டுப்படுத்த நாட்டின் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் ஊழல் வழிகளில் ஈட்டும் செல்வத்தைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.

    2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 17A அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பளித்தார். இருப்பினும், மற்றொரு நீதிபதி விஸ்வநாதன் இது அரசியலமைப்பிற்கு எதிராக வில்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    அப்போது பேசிய நாகரத்னா, "நம் நாட்டின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பாதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கும் செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்

    ஒருவரின் பேராசை மற்றும் பொறாமை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலிருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று, ஆன்மீக மனநிலையை வளர்த்து மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்" என்று தெரிவித்தார்.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் கூட இதே போன்றதொரு கருத்தை தான் கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.
    • உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    * மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.

    * உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

    * வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளத்தை பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

    * இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    * பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
    • தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது.

    ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம் 'ரெயில் ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தது.

    இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரெயில்வே துறை மற்றும் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும்.

    ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்–பார்ன் சுகிதா சுவாச் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-ஹரிகரன் அம்ச கருணன் ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் யீ சின்-டியோ ஈ யி ஜோடியை வெளியேற்றியது.

    • சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர்.
    • சீனக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவை சந்தித்துப் பேசினர்.

    புதுடெல்லி:

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் அருண்சிங் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் சீன குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவையும் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது:

    சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இடையே மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

    மத்திய அரசு சாராத ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசு கொள்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது.

    எந்தவொரு அரசியல் கட்சியும் வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுடன் சந்திப்பதில் அல்லது உரையாடலில் ஈடுபடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    பல ஆண்டுகளாக, சீனாவுடன் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாஜ கூச்சலிட்டு வந்தது. இப்போது அவர்களே மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற கூட்டங்களின்போது மீண்டும் மீண்டும் சீன மீறல்கள் குறித்த பிரச்சனையை பா.ஜ.க. எழுப்புகிறதா? லடாக் எல்லையிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் 2020க்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்களா? எல்லைக் கட்டுப்பாடு அருகே சீன ராணுவ கட்டுமானம் மற்றும் கிராமங்களை கட்டுவது அதிகரித்து வருகிறதே?

    உண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் 'லால் சலாம்' ஆகிவிட்டன. மோடி அரசில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவின் தேசிய நலன்களை சேதப்படுத்துவது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சமாகிவிட்டது.

    சீன வெளியுறவு மந்திரி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போலவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த அவர்கள் தலையிட்டதாகக் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடி முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

    மோடி சீன கம்யூனிஸ்ட் குழுவை பா.ஜ.க. அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பா.ஜ.க, சீன கம்யூனிஸ்ட் குழுவுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகிறது என தெரிவித்தார்.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது.
    • இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீனா பதிலளித்துள்ளது.

    சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சீனாவின் கருத்துக்கு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரா திவேதி, "1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா சட்டவிரோதமானது எனக் கருதுகிறது.

    எனவே, ஷக்சகம் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கவலைக்குரிய விஷயமாகும். அதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்" என்று கூறினார்.

    மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்' (CPEC 2.0) தொடர்பான கூட்டறிக்கையை இந்தியா ஏற்கவில்லை என்றும், இந்திய நிலப்பரப்பு வழியாக இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவது செல்லுபடியாகாது என்றும் அவர் கூறினார்.

    எல்லையில் யதார்த்தத்தை மாற்றச் சீனா முயல்வதைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பைப் பேணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். 

    ×