என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சூர்யா, ஜோதிகா, ரோஜா, சத்யன் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் "மாயாவி." இந்தப் படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்தவர் விஷ்ணு பிரியா. இந்தப் படம் விஷ்ணு பிரியாவுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவர் திரைத்துறையில் நடித்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தின் போது, விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனை ஐந்து பேர் கும்பல் நாற்காலியில் அமர வைத்து கட்டிப்போட்டு முகத்தை டேப்பால் சுற்றியுள்ளனர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சூரிய நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து அங்கிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் சிசிடிவி, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை ஐந்து பேர் கும்பல் திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.

    விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், "13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்ோது அவர், எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும் என்று கூறினா்.

    அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்," என்றார்.

    ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால் தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள். சில நாட்களில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக திரைக்கதை பரபரக்கிறது.

    கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார். காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் உச்சத்தை காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம்.

    கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி காதலும் காதல் சார்ந்த காட்சிகளில் நடித்திருப்பது பரவசமாக இருக்கிறது.

    இப்படத்தை இயக்கியிருக்கிற பகவதி பாலா அப்பாவி பெண்களைக் குறிவைத்து, விதவிதமான தோற்றங்களில் சென்று, அவர்களை திருமணம் செய்து அடிமையாக்கி, தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் கொடூர வில்லனாக தெரிகிறார். மோசடிப் பேர்வழிகளுக்கு உதவுகிறவராக காமெடி நடிகர் செந்தில் காட்டும் வில்லத்தனம் பரவாயில்லை.

    இயக்கம்

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நபர் பலரை திருமணம் செய்கிற மோசடி விவகாரத்தை விவகாரத்தை கிரைம் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா. படத்தில் குறைகள் காணப்டுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    பாடல் வரிகளுக்கு இசை மெருகூட்டியிருக்கும் ஏ.சி ஜான்பீட்டரும், பின்னணி இசையை காட்சிகளுக்குப் போதுமானதாக கலந்திருக்கிறார் தேவா.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ரேட்டிங்-2/5

    • மாட்டிறைச்சியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
    • பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது

    சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.  

    கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

    வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும்,  இந்துப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் 'பீப்-பரோட்டா' என்பது அனைத்து மதத்தினரிடையேயும் பிரபலமானது. அங்கு யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சமூக ஊடகங்களில் கேரள மக்கள் இந்தப் படத்தின் காட்சியை விமர்சித்து வருகின்றனர்.

    கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" (யாருடனும் எங்களுக்குப் பகை இல்லை) என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.

    சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

    திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.

    கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று கூறியுள்ளார்.

    மேலும், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

    கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

    கேரளாவின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் மீது இந்தப் படம் தாக்குதல் நடத்துவதாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர். 

    இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

    • டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
    • 2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது.

    இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 'டிராகன்- 2' பட அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். 2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் என்று பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார்.

    அதே போல், டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பதிவில், "டிராகன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. Self made star பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. மீண்டும் ஒருமுறை இந்த காம்போ ஒன்றிணையவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
    • நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் தற்போது காதலித்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

    நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

    அண்மைய காலமாக விஷால் ஜிம்மில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.

    தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழியான வடமாநில பெண் சிம்ரன் அத்வானியை ஆதவ் கிருஷ்ணா காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். சிம்ரனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவை அறிமுகம் செய்ய அங்கு அழைத்துச் செல்கிறார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே சிம்ரன் காணாமல்போய் விடுகிறார். இது வீட்டிற்கு தெரியவர சிம்ரனின் தந்தை ஆதவை சந்தேகப்படுகிறார். மிரட்டுகிறார். இறுதியில், ஹீரோயினுக்கு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா ? என்பது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஹீரோவின் கதாப்பாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயினை காதல் செய்கிறார். போலீசிடம் அடி வாங்குகிறார். ஹீரோயிசம் இல்லை. அழகாக வந்து செல்லும் ஹீரோயினின் கதாப்பாத்திரம் முற்பகுதியில் காட்சிகள் இருந்தாலும் பிற்பகுதியில் பெரிதாக வேலை இல்லை. ஹீரோயின் அம்மாக வரும் வினோதினி சில சீன்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது.

    இயக்கம்

    காதல்- கடத்தல்- அடிதடி- முடிவு என்கிற அடிப்படையில் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மகாலட்சுமி முருகன். படத்தின் முதல் பாதி நல்ல காதல் கதை உள்ள படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, முடிக்க தெரியாமல் முடித்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல்

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் காசியை வண்ணமயமாக காண்பித்திருக்கிறார்.

    இசை

    படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.

    ரேட்டிங்-2/5

    • டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது.
    • கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.

    'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.

    அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி, ஜி.வி.பிரகாஷ் உடன் 'இம்மார்டல்' படங்களில் நடிக்கும் கயாடு லோஹர், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பின்போது எடுத்த BTS புகைப்படங்களை நடிகை கயாடு லோஹர் வெளியிட்டுள்ளார்.

    டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது. இங்கு தான் என் பயணம் தொடங்கியது. உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்ததற்கும், என்னை மிகவும் அன்பாக வரவேற்றதற்கும் நன்றி. பல்லவி எப்போதும் சிறப்பு வாய்ந்தவள்" என்று பதிவிட்டுள்ளார்.

    கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசை கதைக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது.

    நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக், சர்ச்சை காரணமாக புதிய காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அப்பகுதியில் ஒரு சந்தேக மரணம், அதனைத் தொடர்ந்து கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு கொலை – இரண்டு சம்பவங்களிலும் ஒரே கார் தொடர்பு இருப்பது விசாரணையை தீவிரப்படுத்துகிறது.

    இந்த வழியில் ஒரு பாலியல் தொழிலாளி முக்கிய இணைப்பாக மாறுகிறார். ஆனால், காவல் நிலையத்திலேயே அவர் கொலை செய்யப்படுவதால் வழக்கு மேலும் சிக்கலாகிறது. குற்றவியல் நிருபரான ஜனனியின் உதவியுடன், தொடர் கொலைகளின் பின்னணியையும் கொலையாளியையும் ஆனந்த் நாக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    போலீஸ் வேடத்தில் ஆனந்த் நாக் தோற்றத்தில் பொருந்தினாலும், நடிப்பில் கம்பீரம் முழுமையாக வெளிப்படவில்லை. விசாரணையின் தீவிரத்தை விட இடைக்கிடை நகைச்சுவைத் தொனி மேலோங்குவது, கதையின் எடையை சற்றே குறைக்கிறது. நாயகி ஜனனி நிருபர் கதாபாத்திரம் முக்கியமாக அமையும் போல தோன்றினாலும், திரைக்கதையில் தொடர்ந்து வலுவாக பயன்படுத்தப்படவில்லை. குறைந்த பரப்பில் அவர் அளவான நடிப்பை வழங்குகிறார்.

    பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த இடத்தில் இயல்பாக தோன்றினாலும், கதையின் ஓட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

    இயக்கம்

    தொடர் கொலை – விசாரணை என்ற அடிப்படையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். "எப்படி? எதற்காக? யார்?" என்ற மூன்று கேள்விகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் எஸ். அருண் பிரசாதின் முயற்சி கவனிக்கத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் பரபரப்பை உருவாக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

    கொலையாளியின் அடையாளம் வெளிப்படும் பின்னர், சமூக பின்னணியுடன் நகரும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸுக்கு முந்தைய பகுதிகள் சுவாரஸ்யத்தை உயர்த்துகின்றன. அந்த கட்டத்தில் படம் எதிர்பார்த்த விறுவிறுப்பை தருகிறது. மொத்தத்தில், நல்ல கருவுடன் தொடங்கும் 'அறிவான்', நடிப்பு மற்றும் திரைக்கதை சீர்மையில் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் மேலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். இறுதிக்கட்ட சஸ்பென்ஸ் மற்றும் பின்னணி கருத்து படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் காட்சியமைப்புகள் தரமாக இருந்தாலும், நினைவில் நிற்கும் தனித்துவம் குறைவு.

    இசை

    கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசை கதைக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது.

    ரேட்டிங்-2/5

    பாசில் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் நாயகன் வி.ஜே.பப்பு. அதே அலுவலகத்தில் பணிபுரியும் நாயகி அனுபமா மீது ஒருதலையாக வி.ஜே.பப்பு காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபமா வேறு நிறுவனத்திற்கு மாற்றம் ஆகிவிடுகிறார். காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த பப்புவின் வாழ்க்கை அப்படியே நின்று போகிறது.

    இந்நிலையில் திருமணத்திற்காக பெண் பார்க்க பெற்றோருடன் செல்லும் வி.ஜே. பப்பு, மணமகளாக அனுபமா நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பப்புவை பார்த்தவுடன் அனுபமா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபமா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, 6 மாதம் சேர்ந்து வாழலாம், ஒத்துவரவில்லை என்றால் பிரிந்துவிடலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

    இறுதியில் பப்புவும், அனுபமாவும் சேர்ந்து வாழ்ந்தார்களா? திருமண வாழ்க்கை என்ன ஆனது? 6 மாதம் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வி.ஜே.பப்பு, முதல் படத்திலேயே ஒரு கனமான கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து இருக்கிறார். விரும்பிய பெண்ணுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து, உள்ளுக்குள் உருகும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் அனுபமா மாறுபட்ட மனநிலையுடன் இருக்கும் பெண்ணாக சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் 'பொம்மையாக' மாறும் அவரது மென்மையான வெளிப்பாடு, கதைக்கு புதிய உயிர் ஊட்டுகிறது. மற்ற நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த்ராஜ். காதல் என்பது வெறும் 'ஐ லவ் யூ' அல்ல... பொறுமை, புரிதல், தியாகம் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    பாலாஜி சேகர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    இசை

    பாசில் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ரேட்டிங்-2.5/5

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், 'அரசன்' படத்தில் இருந்து தான் விலகுவதாக வெளியான தகவலுக்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,

    அப்படி ஒண்ணும் கிடையாது. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. யாரு பரப்புறதுன்னு தெரியல. இதையெல்லாம் நம்பாதீர்கள் என்றார். 

    • KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
    • ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை (இன்று) 12:07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து ரஜினி- கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

     

    ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீடியோவில் டீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    ×