தான்சானியா அதிபரின் இறுதி சடங்கில் கடும் நெரிசல் - 45 பேர் பலி
நைரோபி:
தான்சானியா நாட்டில் ஜான் மெகுபுலி 2015-ம் ஆண்டு முதல் அதிபராக பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி இவர் காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவை பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சி அடையவைத்தது.
அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
ஜான்மெகுபுலியின் உடலை காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறி குதித்து அங்கு சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.
இதில் சுவரின் இடிபாடுகளிலும், கூட்ட நெரிசல்களிலும் சிக்கி 45 பேர் உயிர் இழந்தனர். இந்த தகவலை தான்சானியா போலீஸ் துறை தலைவர் லசாரோ மாம் பொசாசா தெரிவித்துள்ளார்.
மறைந்த அதிபரின் உடலை காண சென்ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.