செய்திகள் (Tamil News)

53 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை

Published On 2017-03-10 15:17 GMT   |   Update On 2017-03-10 15:17 GMT
இலங்கை சிறைகளில் உள்ள 53 தமிழக மீனவர்கள் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு:

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு நடத்தியதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். சரோன் என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கொழும்பில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையின் முடிவில், தமிழக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், இந்தியா - இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை பரஸ்பரம் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது. அதனை ஏற்று, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேரை, விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் விரைவில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News