செய்திகள் (Tamil News)

ஆடுகளம் குறித்து விமர்சனம்: கிரிக்கெட் வாரியத்தின் எச்சரிக்கையால் மன்னிப்பு கேட்டார் தமீம் இக்பால்

Published On 2017-12-15 07:56 GMT   |   Update On 2017-12-15 07:57 GMT
டாக்கா ஆடுகளம் குறித்து விமர்சனம் எழுப்பிய தமீம் இக்பால், வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான எச்சரிக்கையால் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தால் கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி முதல் இந்த மாதம் 12-ந்தேதி வரை வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி நடைபெற்ற லீக் போட்டி ஒன்று டாக்கா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தமீம் இக்பால் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணியும், மோர்தசா தலைமையிலான ரங்பூர் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய ரங்பூர் ரைடர்ஸ் 97 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொமிலா விக்டோரியர்ன்ஸ் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான ஆடுகளம் மிகவும் ‘பயங்கரமானது (horrible)’ என தமீம் இக்பால் விமர்சனம் செய்திருந்தார். வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தால் பராமரிக்கப்படும் ஆடுகளத்தை தேசிய வீரர் ஒருவர் மோசமான அளவில் விமர்சனம் செய்ததால், விளக்கம் கேட்டு தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுத்தியது.



இந்நிலையில், ஆடுகளம் குறித்து தான் கூறிய கருத்துக்கு தமீம் இக்பால் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தமீம் இக்பால் கூறுகையில் ‘‘நான் இதைவிட சிறந்த வார்த்தையை பயன்படுத்திருக்க வேண்டும். என்னுடைய கருத்து குறித்து அவர்களுடைய கவலையை தெரிவித்தனர். அதை உண்மையிலேயே நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கேற்ற வகையில் நான் மாற்று வார்த்தையை பயன்படுத்தி கருத்து கூறியிருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு தேசிய கிரிக்கெட் வீரர். விளையாட்டு மைதானம், ஆடுகளம், அவுட் பீல்டு எல்லாமே கிரிக்கெட் வாரியத்தின் சொத்து. வரும் காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறினார்கள். இனிவரும் காலங்களில் என்னுடைய நடவடிக்கை சிறந்ததாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News