உள்ளூர் செய்திகள் (District)
கும்மிடிப்பூண்டியில் போலீசாரை தாக்கியவருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ளவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த சில மாதங்களாக போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், யுவராஜ் ஆத்துப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீஸ் விமல்ராஜ் ஆகியோர் அங்கு சென்று யுவராஜை மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது அவரது குடும்பத்தினர் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் யுவராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த போலீசார் 2 பேரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் தலைமறைவாக உள்ள யுவராஜை வலை வீசி தேடிவருகின்றனர். மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட யுவராஜின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.