உள்ளூர் செய்திகள் (District)
தாலுகா தோறும் காப்பீடு திட்ட பதிவு முகாம்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உடுமலை, வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் தாலுகா போன்ற தொலைதூரத்தில் இருந்து வருபவர் கலெக்டர் அலுவலகம் வந்து சேர காலை 11 மணி ஆகிவிடுகிறது.
திருப்பூர்:
மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ள குடும்பத்தினர் இணைந்து பயன்பெறலாம். பல்வேறு நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு இத்திட்டத்தின் மூலம் ஏராளமானவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதன்பின் அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைய நடுத்தர மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றொப்பம் பெற்ற படிவத்துடன் குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் காப்பீடு பதிவு மையத்துக்கு சென்று பதிவு செய்யலாம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளிப்புறம், தரைத்தளத்தில் 3-ம் எண் அறையில் காப்பீடு திட்ட பதிவு முகாம் நடக்கிறது.தற்போது கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் காப்பீடு பதிவு மையம் இயங்கி வருகிறது.
உடுமலை, வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் தாலுகா போன்ற தொலைதூரத்தில் இருந்து வருபவர் கலெக்டர் அலுவலகம் வந்து சேர காலை, 11 மணி ஆகிவிடுகிறது. ‘டோக்கன்’ வாங்கி செல்லுங்கள், குறிப்பிட்ட நாளில் வந்து பதிவு செய்யலாம் என திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மருத்துவ சிகிச்சைக்காக காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அவசரமாக வருகிறோம். மற்றொரு நாளில் வருமாறு திருப்பி அனுப்புகின்றனர்.
காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சில நாட்கள் தொடர்ச்சியாக அலைய வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிலையை கருத்தில் கொண்டு தாலுகா அளவில் வாராந்திர பதிவு முகாம் நடத்த கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.